கர்ணன்

மகாபாரதத்தில் வரும் மாவீரன் கர்ணன் ஒரு பாண்டவ புத்திரன் என்ற ரகசியம் அவன் இறந்த பிறகே உலகம் அறிந்தது. கொடைக்குப் பெயர் பெற்ற கர்ணனோ இறப்பதற்கு சில நாட்கள் முன்புதான் கிருஷ்ண பகவானின் லீலையால் அறிந்தான்.

பூர்வ ஜன்மத்தில் கர்ணன் பிரம்ம தேவனிடம் அவன் பெற்ற வரத்தின்படி அவனுடைய சரீரம் ஆயிரம் சட்டைகளால் போர்த்தப்பட்டிருந்தது. சஹஸ்ர கவசன் என்று பெயர் பெற்ற அசுரனாக இருந்தான். தேவர்களை தாட்சண்யமின்றி தாக்கி வந்தான். எவரும் அந்த ஆயிரம் சட்டைகளை நீக்காமல் அவனைக் கொல்ல முடியாது. அவனைத் தாக்க விரும்பும் வீரன் 12 வருடங்கள் தவமிருந்து விட்டு அதன் பின்னர் 12 வருடங்கள் அவனுடன் தொடர்ந்து போர் புரிந்தால் ஆயிரம் கவசங்களுள் ஒன்றை அறுக்க முடியும். இவ்வாறு 24 வருடங்கள் வீதம் தவமும் போரும் யாகமும் செய்து ஆயிரம் கவசங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறுத்தெறிந்தால் சஹஸ்ர கவசன் மடிவான். இதை தேவர்களால் செய்ய இயலவில்லை. எனவே அவனிடமிருந்து தேவர்கள் தாங்கொணாத் துயரத்திற்கு ஆளாயினர். அமரர்கள் மகாவிஷ்ணுவை நாடி சஹஸ்ர கவசனை ஒழிக்க உதவுமாறு வேண்டினர். இரக்கம் கொண்ட மகாவிஷ்ணு அசுரர் கொடுமையை ஒழிக்க நர நாராயணர்களாக அவதரித்தார்.

சஹஸ்ர கவசனை அழிப்பதற்கு அவர்கள் கூட்டு முயற்சி செய்தனர். நரன் 12 வருடங்கள் தவம் புரிய நாராயணர் அசுரனுடன் போர் புரிந்து கவசமொன்றை அறுத்துத் தள்ளினார். அதன் பிறகு நாராயணர் 12 வருடங்கள் தவம் புரிய நரன் 12 வருடங்கள் போர் புரிந்தான். இப்படிப் பல வருடங்கள் விடா முயற்சி செய்து 999 கவசங்களை அறுத்து எறிந்தனர். இதற்குள் பிரம்ம பிரளயமே வந்து விட்டது. எஞ்சி நின்ற ஒரு கவசத்துடன் சஹஸ்ர கவசன் சூரிய லோகம் போய்ச் சேர்ந்தான். இந்த சஹஸ்ர கவசனே அடுத்த ஜன்மத்தில் சூர்ய புத்திரனாக கர்ணன் என்ற பெயரில் மீதமுள்ள பூர்வ ஜன்ம கவசத்தோடு பிறப்பெடுத்தான்.

இந்தக் கவசமும் அறுக்கப்படவேண்டிய காரியத்திற்காக பகவான் மகாவிஷ்ணு நர ரூபத்தில் அர்ஜுனனாகவும் நாராயண அம்சத்தில் கிருஷ்ணனாகவும் பிறப்பெடுத்தனர். 12 ஆண்டுகள் பாண்டவர்கள் வனவாசம் செய்தது அந்த நரனுடைய 12 வருடத் தவமேயாகும். ஒரு கவசத்தை கிருஷ்ணர் தன் லீலைகள் மூலம் இந்திரன் மூலம் கவசத்தை நீங்கினார். கவசம் நீங்கியதால் அர்ஜுனன் கர்ணணை கொல்ல முடிந்தது இல்லையென்றால் இருவருக்கும் 12 வருடகாலம் யுத்தம் நடந்திருக்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.