துரோணரின் மகன் அஸ்வத்தாமன்

மகாபாரதத்தில் வெல்ல முடியாத வீரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் சீரஞ்சிவியாக வாழும் மரணமில்லாதவன் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமன். பரத்வாஜ முனிவரின் மகன் துரோணருக்கும் கொளதம மகரிஷியின் பேத்தியும் முனிவர் சரத்வானின் புதல்வியான கிருபிக்கும் திருமணம் முடிந்து வெகுகாலமாகியும் அவர்களுக்கு புத்திர பாக்கியம் இல்லை. எனவே துரோணர் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவருடைய தவத்தால் மகிழ்ந்து அவர் முன் தோன்றிய சிவன் உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். சீரஞ்சிவியாக வாழும் அமர வாழ்வு பெற்ற ஒரு புதல்வன் எனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டார். அவரின் வேண்டுகோளின்படி மனித குலத்தின் கடைசி உயிர் இருக்கும் வரை சீரஞ்சீவியாக சாகா வரம் பெற்ற குழந்தை பிறக்க சிவன் வரம் அளித்தார். குழந்தை பிறந்ததும் குதிரையைப் போல் கனைக்கும் திறன் பெற்றதால் குழந்தைக்கு அஸ்வத்தாமன் என்று பெயர் சூட்டினார்கள். குழந்தையின் நெற்றியில் பிருங்கி என்று அழைக்கப்படும் மணி இருந்தது. இந்த மணி இருக்கும் வரை தேவர் கந்தர்வர் மனிதர் அரக்கர் ரிஷிகள் யட்சர்கள் மிருகங்கள் என எந்த உயிரினமோ அல்லது எந்த திவ்ய அஸ்திரமோ அஸ்வத்தாமனை கொல்ல முடியாது. துரோணரை அஸ்தினாபுரத்தின் இளவரசர்களுக்கு குருவாக நியமித்தார் பீஷ்மர்.

பாண்டவர் கொளரவர்களோடு அஸ்வத்தாமனும் அரிய வித்தைகளை துரோணரிடம் இருந்து கற்றுக் கொண்டான். அது மட்டுமின்றி தன் தாத்தா மகரிஷி பரத்வாஜரிடம் வேதங்களையும் தன் தாய் மாமன் கிருபாச்சாரியாரிடம் போரின் வியூக நுணுக்கங்களையும் சத்ரிய குலத்தின் சிம்ம சொப்பனம் பரசுராமரிடம் மொத்த ஆயுத அறிவையும் கற்றுக் கொண்டான். தன் தந்தை துரோணர் அர்ஜூனன் மீது மிகுந்த பாசம் வைத்திருப்பதை அஸ்வத்தாமனால் தாங்க முடியவில்லை. அஸ்வத்தாமனை பாண்டவர்கள் ஏளனம் செய்யும் போதெல்லாம் துரியோதனன் அவனுக்கு துணை நின்றான். அதுவே துரியோதணனுக்கு அவரை நெருக்கமான நண்பனாக மாற்றியது.

பாண்டவர்கள் வனவாசம் இருந்த போது தன் சிறு வயது நண்பன் கிருஷ்ணனை பார்க்கச் சென்றான் அஸ்வத்தாமன். அவனை வரவேற்ற கிருஷ்ணன் என்ன வேண்டும் கேள் நண்பனே என்று கேட்க தங்களுடைய சுதர்சனச் சக்கரத்தை எனக்கு தானமாக தர வேண்டும் என்று கேட்கிறான். சிரித்தவாரே எடுத்துக்கொள் என கிருஷ்ணர் சொல்ல அதை எடுக்கிறான் அஸ்வத்தாமன். எவ்வளவு முயன்றும் அதை அஸ்வத்தாமனால் அசைக்க கூட முடியவில்லை. இதனைக் கண்ட கிருஷ்ணர் சிரித்தபடியே எதற்காக உனக்கு இது தேவை நண்பனே என்று கேட்டார். வரும் காலத்தில் பாண்டவர்களுக்கும் கொளரவர்களுக்கும் போர் நடக்கும் அதில் நான் துரியோதனனை காக்க வேண்டும். பகவானாகிய நீங்கள் பாண்டவர்களுக்கு துணை நிற்ப்பீர்கள் என்று எனக்கு தெரியும். நீங்கள் இருக்கும் வரை அவர்களை வெல்லமுடியாது என்பதும் எனக்கு தெரியும். ஆகவே கிருஷ்ணா உம்மை வதைக்கவே உமது சுதர்சன சக்கரம் எனக்கு வேண்டும் என்று சொல்ல மெய்சிலிர்த்து போகிறார் கிருஷ்ணர். உன் நட்பின் இலக்கணம் கண்டு நான் வியக்கிறேன் அஸ்வத்தாமா சுதர்சன சக்கரத்தை வைத்து கொண்டு என்னை கொல்ல இயலாது. ஆனால் போரில் உள்ள அனைவரையும் ஒரு நொடியில் அழித்து உன் நண்பனைக் காப்பாற்ற என்னுடைய அஸ்திரமான நாராயண அஸ்திரத்தை உனக்கு வரமாகத் தருகிறேன் என்று வரமளித்தார் கிருஷ்ணர். தன் தந்தை துரோணாச்சாரியார் மூலம் ஈடு இணையற்ற அஸ்திரமான பிரம்மாஸ்திரத்தின் மந்திரத்தை கற்றுக் கொண்டான் அஸ்வத்தாமன். அதுமட்டுமின்றி தன் தவ வலிமையால் அதர்வண வேத மந்திரங்களை உருவேற்றி காளி தேவிக்கு சமர்பணம் செய்து வேதத்தின் வித்தகனாக விளங்கினான். அஸ்வத்தாமனின் பக்தியால் அவனுக்கு தரிசனம் கொடுத்த அன்னை காளிதேவி மூவுலகையும் அழிக்கும் பாசுபதாஸ்திரத்தை வரமாக அளிக்கிறாள். ராமாயணத்தில் இராவணனின் மைந்தன் இந்திரஜித் மகாபாரதத்தில் அர்ஜூனன் அஸ்வத்தாமன் ஆகிய மூவர் மட்டுமே இந்த ஆயுதத்தில் ஞானம் பெற்றவராவர்கள் ஆவார்கள். மற்ற அஸ்திரங்களை விட பல மடங்கு சக்தி வாய்ந்தது. மிகுந்த பேரழிவை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். தன்னை விட பலம் அதிகம் கொண்ட எதிரியின் மீது மட்டுமே இதை பயன்படுத்த வேண்டும். தர்மத்தின் பக்கம் நிற்பவர்களால் மட்டுமே இந்த அஸ்திரங்களின் கட்டிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள முடியும். பிரம்மாஸ்த்திரம் பெற்றவன். நாராயண அஸ்திரம் பெற்றவன். பாசுபதாஸ்திரத்தை பெற்றவன். துவாபர யுகத்தில் இந்த மூன்றையும் கற்ற ஒரே வீரன் அஸ்வத்தாமன் மட்டுமே. தேவர்களையே அழிக்கும் வல்லமை பெற்றவனாவான்.

மகாபாரத யுத்தத்தின் இறுதியில் அஸ்வத்தாமன் பாண்டவர்களின் வம்சம் அழிந்து போக வேண்டும் என்று எண்ணி பிரமாஸ்திரத்தை செலுத்தினான். பதிலுக்கு அர்ஜூனனும் பிரமாஸ்திரத்தை செலுத்தினான். இரண்டும் மோதுமானால் உலகம் அழியும் என அறிந்த வியாசரும் நாரதரும் உலகை காக்க நினைத்தனர். அர்ஜூனனிடம் பிரம்மாஸ்திரத்தை திரும்ப எடுத்துக்கொள்ளுமாறு கட்டளையிட்டனர். அவர்கள் கட்டளைக்கு பணிந்த அர்ஜூனன் பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்துக் கொண்டான். அஸ்வத்தாமனுக்கு பிரமாஸ்திரத்தை திரும்ப அழைத்து கொள்ளும் அறிவு இல்லை. பிரமாஸ்திரம் ஏதேனும் ஒரு இலக்கை அழித்தே தீரும். அதனால் அஸ்வத்தாமன் பாண்டவர் மனைவியர்களின் கர்ப்பத்தில் இருந்த சிசுக்கள் அனைத்தும் அழியட்டும் என அந்த அஸ்திரத்திற்கு இலக்கு நிர்ணயித்தான். ஆனால் கிருஷ்ணரின் அருளால் உத்திரையின் கரு மட்டும் காப்பாற்றப்பட்டது. சிசுக்களை அழித்த அஸ்வத்தாமனை கிருஷ்ணர் பழித்தார். நெற்றியில் இருந்த பிருங்கி மணியை வியாசர் தருமாறு கூற அவ்வாறே அளித்தான். அறிவிலியே நீ தொழுநோயால் பீடிக்கப்பட்டு காட்டில் தன்னந்தனியாய் பல ஆயிரம் ஆண்டுகள் விலங்காகவும் மானுடனாகவும் தவிப்பாயாக என்று அஸ்வத்தாமனை சபித்தார் வியாசர். சாபப்படி அஸ்வத்தாமன் காட்டிற்கு சென்றுவிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.