சிறந்த ஆட்சி

கிருஷ்ணர் தர்மரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது தர்மர் ஏழைகளுக்கு தான தர்மங்கள் செய்து கொண்டிருந்தார். தான தர்மங்களை முடித்துவிட்டு கிருஷ்ணரை சந்தித்த தர்மர் தான் தினமும் தான தர்மம் செய்வதை பற்றி மிக சிறப்பாகவும் உயர்வாகவும் எடுத்துச் சொன்னார். ஏழைகளுக்கு தர்மம் செய்வதால் நான் மிகவும் உயர்ந்தவனாக இருக்கின்றேன் என்ற ஒரு எண்ணம் அவர் மனதில் இருந்தது. அதனால் தான் சிறந்த மன்னன் என்ற கர்வமும் அவரிடம் இருந்தது. இதனைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர் உண்மையான ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக தர்மருக்கு போதிக்க முடிவு செய்தார்.

கிருஷ்ணர் தர்மரிடம் நாம் பாதாள லோகம் வரை சென்று வரலாமா என்று தமது விருப்பத்தை கூறினார். தர்மரும் அதற்கு அவருடன் பாதாள லோகம் சென்றார். அங்கே பலிச் சக்கரவர்த்தி ஆண்டு வருவதை சற்று விசித்திரமாகப் பார்த்தார் தர்மர். இங்கு ஆட்சி நடப்பது போலவே தெரியவில்லையே என்று தர்மர் தனக்குள் சிந்தித்துக் கொண்டே சென்றார். ஆனால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை மட்டும் அவரால் காண முடிந்தது. சில நாட்கள் பலிச்சக்கரவர்த்தி உபசரிப்பில் கிருஷ்ணரும் தர்மரும் இருந்து வந்தார்கள். அப்பொழுது தர்மர் தினமும் ஏழைகளுக்கு பொருட்களை தானமாக வழங்கும் உயர்ந்த குணத்தையும் அந்த பெருமையையும் உயர்வாக பலிச்சக்கரவர்த்திக்கு எடுத்துச் சொன்னார் கிருஷ்ணர். தர்மரிடம் வந்த பலிச்சக்கரவர்த்தி உண்மையில் நீங்கள் மிகவும் உயர்ந்தவர் என்று பாராட்டி புகழ்ந்தார். நானும் உங்களைப் போல் தர்மம் கொடுக்க எண்ணுகிறேன் ஆனால் என் நாட்டில் தானம் கொடுத்தாலும் வாங்குவதற்கு ஒரு ஏழைகள் கூட இல்லாமல் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்க்கின்ற பொழுது நான் மிகவும் வேதனைப்படுகிறேன் என்று தன்னை மிகவும் தாழ்த்திக்கொண்டு சொன்னார். இதைக்கேட்ட தர்மர் நம் நாட்டில் ஏழைகள் இருக்கிறார்களே அதற்கு காரணம் நம்முடைய ஆட்சியின் சிறப்பு இன்மையே என்ற உண்மையை புரிந்து கொண்டு ஏழைகளே இல்லாத சிறந்த ஆட்சியை கொடுக்க முடிவு செய்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.