அனைத்தும் கிருஷ்ணன் செயல்

பாண்டவர்களின் வனவாசத்தின் போது ஒரு மரத்தடியில் யாரும் அறியாதவாறு கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தான் யுதிஷ்டிரன். துரியோதனன் தன் தேசத்து அரசனானதும் அவனுக்கு முடிசூட்டு விழா நடத்தபட்டு தன் ராஜ்ஜியமெல்லாம் அவன் கொடி பறப்பதையும் அறிந்து தன்னை தானே நொந்து கொண்டான். வீட்டுக்கு மூத்தவன் உடன்பிறந்தோர் முன்னால் அழகூடாது எனும் தர்மத்தை அவன் அப்பொழுதும் காத்துக் கொண்டிருந்தான். இதனை அறிந்த கிருஷ்ணன் அவனை தேற்றும் பொருட்டு யுதிஷ்டிரா இங்கே அமர்ந்து என்ன செய்து கொண்டிருக்கின்றாய் என்று ஒன்றும் தெரியாதவன் போல் கேட்டார். அதற்கு மேலும் பொறுக்கமுடியாத யுதிஷ்டிரன் சுற்றி யாருமில்லை என்பதை உணர்ந்து கிருஷ்ணனின் கைகளை பற்றி கதறினான். திரௌபதி இப்படி சிரமப்படவும் என் அன்னை வயதான காலத்தில் இப்படி அலையவும் என் தம்பிமார்கள் நாடோடி காட்டுவாசிகளாக திரியவும் நானே காரணமாகி விட்டேன் எனக்கு கிடைத்த தாயும் தம்பிகளும் மனைவியும் நல்லவர்கள் என்னிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. அவ்வகையில் நான் பாக்கியசாலி. ஆனால் இவர்கள் அனைவருக்கும் என்னால் தானே அனைத்து துன்பமும் வந்தது. துரியோதனன் அழைத்ததும் நான் சூதாடியிருக்க கூடாது. அதுவும் அவன் சகுனி துணையோடு ஆடும் பொழுது நான் உன்னை அல்லவா அழைத்திருக்க வேண்டும் நான் உன்னை அழைக்காமல் உனக்கு தெரியக் கைடாது என்றல்லவா சிந்தித்தேன் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன். அந்த நொடிப் பொழுது செய்த சிறிய தவறு இந்த மாபெரும் துன்பத்தை கொடுத்து விட்டது என கிருஷ்ணனிடம் கண்ணீர் விட்டவாறு கூறினான் யுதிஷ்டிரன்.

கிருஷ்ணர் பேச ஆரம்பித்தார். யுதிஷ்டிரா நீ அழைக்காமல் நான் வரமாட்டேன் என நினைத்தாயா? சூதாட்டத்தில் இருந்த பகடையாய் சுழன்றவனே நான் தான் யுதிஷ்டிரா. எப்பொழுது உன்னை துரியோதனன் அழிக்க நினைத்தானோ அப்பொழுதே அவன் அழிவு தொடங்கியது. இந்த நிலையில் எதிரி வாழவும் திருந்தவும் நீ வாய்ப்பளித்தாய் என்பதை உலகுக்கு சொல்லவதற்காகவே இந்த நிகழ்வை நடத்திக் காட்டினேன். யுதிஷ்டிரன் எப்பொழுதும் தர்மனாக நின்றான் என்பதை வரலாறு எழுதவே பகடையினை அவனுக்கு விழவைத்தேன். சகுனி என் நாடகத்தின் ஒரு கருவி அவ்வளவு தான். நாடகத்தை நடத்துபவன் நான் அதில் நீயும் ஒரு பாத்திரம் என்பதை நினைவில் கொள். உண்மையில் நீ உன் மிக உயந்த இயல்பில் நின்றாய். அதை புரிந்து கொள் தெளிவடைவாய் என்றார். அதற்கு யுதிஷ்டிரன் நான் சூதாடி தோற்றேன். என் இயல்பிலிருந்து மாறி சித்தம் கலங்கி சென்றேன். நானா தர்மவான் என்று சந்தேகத்தோடு கேட்டான். அதற்கு கிருஷ்ணர் யுதிஷ்டிரா இப்பொழுதும் நீதான் வென்றாய். சூதாட்டத்தில் நீ தோற்று உன்னை அழிக்க வந்தவர்களை சிறிது காலம் வாழ வழிசெய்திருக்கிறாய். யுதிஷ்டிரன் தன் ராஜ்ஜியத்தில் தன்னை அழிக்க நினைத்த பகைவர்வர்களுக்கும் சிறிது காலம் வாழ இடம் கொடுத்தான் என பெயர் பெற்றாய். நாட்டின் மீதும் அதிகாரத்தின் மீதும் பேராசை கொண்ட அவர்கள் ஆண்டு அனுபவித்து அதன் பிறகாவது திருந்த மாட்டார்களா என வாய்ப்பு கொடுத்த நீ உத்தமன். இது உன் அன்னைக்கு தெரியும். உன் மனைவிக்கு தெரியும். உன் சகோதரரகளுக்கும் தெரியும் அதனால் தான் அவர்கள் உன்னை ஒருவார்த்தை கூட சொல்லவில்லை பகைவனுக்கும் அருளிய நல்ல மனதுடையவன் என்று உன்னை மனதார வாழ்த்தி வணங்கி கொண்டிருக்கின்றார்கள். நீயோ இங்கு அழுது கொண்டிருக்கின்றாய் என்றார்.

கிருஷ்ணா இது போதும் என் மனபாரம் குறைந்ததது என் மனம் குளிர்ந்தது நான் கடைபிடிக்கும் தர்மத்தை காக்க நீ அருள்புரிந்திருக்கின்றாய். இல்லையேனில் சூதாடி வென்றான் யுதிஷ்டிரன் என்ற அவப்பெயர் எனக்கு வந்திருக்கும். சூதாடி வென்று தம்பியருக்கு ராஜ்யம் கொடுத்தான் அயோக்கியன் என்ற அவப்பெயர் காலத்துக்கும் நின்றிருக்கும். இதை என் குடும்பத்தர் எப்படி பொறுப்பார்கள். உலகம் என்னை எப்படி கருதியிருக்கும். நல்ல வேளையாக என்னை காப்பாற்றி இருக்கிறாய் என்று கிருஷ்ணரிடம் மகிழ்ச்சி அடைந்த யுதிஷ்டிரன் தன் கலக்கத்தில் இருந்து விடுதலை அடைந்தான். அதற்கு கிருஷ்ணர் நீ கடைபிடிக்கும் தர்மம் உன்னோடு எப்போதும் நிற்கும். அதற்கு ஏற்றபடி தர்மமும் நானும் உன்னை காப்போம். கௌரவர்கள் ஆடாத ஆட்டம் ஆடி அந்த அக்கிரமத்தால் அழிந்தும் போவார்கள். நீ உன் கடமையினை செய் உன் இயல்பிலே இரு குற்றவுணர்ச்சியோ கண்ணீரோ கொள்ளாதே. அவர்களை சிலகாலம் வாழ வழிவிட்டதை எண்ணி உன் புண்ணியம் பெருகியிருப்பதை உணர்ந்து கொள் அது ஒரு நாள் உனக்கு வெற்றியளிக்கும் என்பதை மனதில் கொள் என்றார் கிருஷ்ணர். நடந்து முடிந்த சூதாட்டத்தில் தனக்கு ஏற்பட்ட தோல்வியிலும் தனக்கு கிடைத்த பாடத்தை யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனையும் அறியாமல் ஒரு கம்பீரமும் உற்சாகமும் அவனுக்குள் வந்தது. சகோதரர்களை நோக்கி சிரித்தபடி நடந்தான். அவனுக்கு தர்ம தேவதை புன்னகைத்தபடி குடைபிடித்து நடந்து கொண்டிருந்தது கிருஷ்ணனுக்கு மட்டும் தெரிந்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.