பொக்கிஷம்

கிருஷ்ணர் மீது ஏழ்மையான பெண் ஒருத்தி மிகவும் பக்தி வைத்திருந்தாள். ஒருநாள் துவாரகை சென்ற அவள் கிருஷ்ணா உன் விருப்பப்படி நடந்து கொள்வதை தவிர எனக்கு வேறு மகிழ்ச்சி எதுவும் இல்லை. உனக்கு நான் என்ன செய்யவேண்டும் சொல்? என்றாள். கிருஷ்ணர் தன்னிடம் ஏதாவது பக்தி பூர்வமாக கேட்பார் அதை செய்யலாம் என்று கருதி இதுபோல் அவள் கேட்டாள். ஆனால் ஒரு அழுக்கு கோணிப்பை மூட்டையை அவளிடம் தந்த கிருஷ்ணன் நான் செல்லும் இடமெல்லாம் இதைத் தூக்கிக் கொண்டு வா அது போதும். அனைவரின் முன்னிலையிலும் இந்த அழுக்கு கோணிப்பை மூட்டையை எப்படி கொண்டு செல்வது என்று எண்ணாதே நம் கண்களை தவிர வேறு கண்ணிற்கும் இது தெரியாது என்றார். திகைத்துப் போனாள் அந்தப் பெண். பக்திப்பூர்வமாக எதையாவது சொல்வார் என நினைத்தால் அழுக்கு மூட்டையை சுமக்கச் சொல்கிறாரே என்று எரிச்சல் தோன்றினாலும் வேறு வழி இன்றி அதை அவர் செல்லும் இடம் எல்லாம் தூக்கிக் கொண்டு போனாள். பலமுறை அவள் சலித்துக் கொண்ட போதும் கிருஷ்ணர் எதுவும் சொல்லவில்லை. பல முறை அவள் கோணிப்பை மூட்டையை சுமக்க சிரமப்பட்ட சமயங்களில் தானும் ஒரு கைகொடுத்து உதவினார் கிருஷ்ணர்.

ஒரு நாள் போதும் நீ சுமந்தது மூட்டையை இறக்கி வை என்று சொன்ன கிருஷ்ணர் மூட்டைக்குள் என்ன இருக்கிறது என்று பார்ப்போமா? என்று புன்முறுவலுடன் கேட்டார். கோணிப்பை மூட்டை தானே அவிழ்ந்தது. அதில் விலை மதிப்பற்ற பொன்னும் மணியும் வைர வைடூரியங்களும் குவிந்து கிடந்தன. இத்தனை காலம் பொறுமையுடன் காத்திருந்த உனக்கு என்னுடைய பரிசு இது. எடுத்துக்கொள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார் பகவான். சட்டென்று கிருஷ்ணரின் பாதங்களில் விழுந்த அப்பெண் கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு அரும்பெரும் பொக்கிஷத்தை என்னிடம் கொடுத்திருந்தும் கூட அது தெரியாமல் இத்தனை காலம் உன்னை தவறாக நினைத்துவிட்டேன். உன்னை சந்தேகிக்காமல் உனது நோக்கத்தைப் புரிந்து கொண்டிருந்திருந்தால் இந்தச் சுமை எனக்கு சுமப்பதற்கு இன்பமாய் இருந்திருக்கும். புலம்பியிருக்கவோ குறை சொல்லியிருக்கவோ மாட்டேன் என்று கண்ணீர் விட்டுக் கதறினாள். அமைதியாகப் புன்னகைத்தார் கிருஷ்ணர்.

இறைவன் ஒவ்வொருவருக்கும் உரியவற்றை மிகவும் கவனமாகவும் அன்புடனும் பிரத்யேமாகத் தயாரித்து அவர்களிடமே தருகிறான். அதனை சுமையாக நினைப்பதும் பொக்கிஷமாகப் பார்ப்பதும் அவரவர் மனநிலையில் இருக்கிறது. யாரால் எதைச் சுமக்க முடியும் என்று ஆண்டவனுக்குத் தெரியும். தாங்க முடிந்த அளவு மட்டுமே அவன் சுமையைத் தருவான். அதுமட்டுமல்ல அதனைச் சுமக்க தன் கரம் கொடுத்தும் அருளுவான். அனைத்தும் இறைவன் செயல் அனைத்தும் நம் நன்மைக்கே என்று நம்பினால் சுமைகள் எல்லாம் சுகமாகத் தெரியும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.