கங்கை அன்னை

கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் முதியவர் ஒருவர் இருந்தார். செருப்பு தைக்கும் தாழ்ந்த நிலையில் இருப்பதால் அவருக்கு கங்கை நீரை தொடுவதற்கு தடை. அவரால் அருகில் செல்ல முடியவில்லை. தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவார். ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். அனுஷ்டானங்கள் முடிந்து வெளியே வருவார். ஒருநாள் அவரது செருப்பு அறுந்து விட்டது. அதை முதியவரிடம் கொடுத்து ரிப்பேர் செய்யச் சொன்னார். நன்றாக ரிப்பேர் செய்து கொடுத்தார் முதியவர். அரை அணா பணத்தை தூக்கி எறிந்தார் பண்ணிதர். முதியவர் அவரை வணங்கி சுவாமி உங்களிடம் நான் காசு வாங்க மாட்டேன். நீங்கள் கங்கா மாதாவை அனுதினமும் வணங்கி மந்திரங்கள் ஜெபிப்பவர். உங்களுக்கு ஏதோ என்னாலான ஒரு சிறிய உதவி செய்தது என் பாக்கியம். உங்கள் காசு எனக்கு வேண்டாம் என்றார். நீ எனக்கு இலவசமாக சேவை செய்தால் அதை நான் ஏற்க முடியாது என்றார் பண்டிதர். அப்படி என்றால் இந்த ஏழைக்கு நீங்கள் ஒரு உதவி செய்யுங்கள். இதோ இந்த கங்காமாதாவை அனுதினமும் வணங்குகிறேன் என்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. நான் அளித்த காணிக்கையாக நீங்களே அதை அவளுக்கு இந்த பணத்தை சமர்ப்பித்து விடுங்கள் என்றார். சரி என்ற பண்டிதர் இந்த ஓரணாவை வைத்துக்கொண்டு கங்கையில் இறங்கி வணங்கினார். மந்திரங்கள் ஜெபித்தார். அம்மா கங்கா தேவி இதோ இந்த ஓரணா கரையில் இருக்கும் செருப்பு தைக்கும் முதியவர் உன்னிடம் சமர்ப்பிக்க சொன்னது. ஏற்றுக்கொள் என்று சொல்லி வீசி எறிந்தார்.

ஓடிக்கொண்டிருந்த கங்கையிலிருந்து ஒரு அழகிய கை வெளியே தோன்றி அவர் வீசிய ஓரணா காசை ஆர்வமாக அன்பாக பெற்றுக் கொண்டது. கங்கையின் முகம் தோன்றியது பேசியது. பண்டிதரே எனக்கு மிக்க மகிழ்ச்சி இதோ இந்த பரிசை நான் கொடுத்ததாக அந்த முதியவரிடம் கொடுங்கள் என்று கங்கா தேவி ஒரு அழகிய கண்ணைப் பறிக்கும் வைர நவரத்னக் கற்கள் பதித்து ஒளிவீசிய தங்க வளையலை கொடுத்தாள். பண்டிதர் அசந்து போனான். ஆச்சர்யத்தில் நடுங்கினான். அதை தனது மேல் துண்டில் பத்திரமாக முடிந்து வைத்து கொண்டார். முதியவரிடம் அது பற்றி ஒன்றும் சொல்லாமல் வீட்டிற்கு போய் மனைவிடம் நடந்ததை சொன்னார், கங்காதேவி தந்த வளையலை மனைவியின் கண்களாங் நம்ப முடியவில்லை. கையில் போட்டு அழகு பார்த்தாள். மின்னியது. கண் கூசியது. இந்த ஒரு வளையலை வைத்துக்கொண்டு பிரயோஜனம் இல்லை. அடுத்த வேளை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் அழகான ஒத்தை வளை கையில் போட்டுக் கொண்டு அலைந்தால் எல்லாரும் சிரிப்பார்கள். இதை ராஜாவிடம் கொடுத்துவிட்டு ஏதாவது காசு கொடுத்தால் வாங்கி வாருங்கள். கொஞ்சகாலம் நிம்மதியாக சௌகர்யமாக வாழலாம் என்றாள். ராஜாவிடம் சென்றார் பண்டிதர். ராஜா வளையலை வாங்கி பார்த்து மகிழ்ந்தார். ஒரு பை நிறைய பொற்காசுகள் கொடுத்தார்.

ராணியிடம் ஆசையோடு அந்த வளையலை கொடுத்தார். அந்த ராணிக்கு. அவள் கைக்கு அது பொருத்தமாக அமைந்தது. அப்போது தான் அவளுக்கு தோன்றியது. ராஜாவிடம் இன்னொரு வளையளும் வேண்டுமே என்று கேட்டாள். ராஜா ஆட்களை அனுப்பி பண்டிதரை அழைத்து வர செய்தார். பண்டிதரை இன்னொரு வளையல் எங்கே அதனை ஏன் தரவில்லை வீட்டில் வைத்திருந்தால் கொண்டு வந்து உடனே கொடுங்கள். ராணி கேட்கிறாள் என்றார். பண்டிதர் தயங்கினார். ராஜாவுக்கு கோபம் வந்தது. இன்னும் ரெண்டு மணிநேரத்தில் இன்னொரு வளையலுடன் நீ வரவில்லை என்றால் உன் உயிர் உனதல்ல .ஜாக்கிரதை என்றான். ராஜாவின் கட்டளை பண்டிதனுக்கு எம பயத்தை தந்ததால் கங்கைக்கரையில் இருக்கும் முதியவரிடம் ஓடினான்.

முதியவர் வழக்கம்போல் கங்கைக் கரைக்கு தூரமாக நின்று இரு கரம் கூப்பி கண்களை மூடி கங்கையை வணங்கினார். செருப்பு தைக்க தேவையான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொண்டு அமர்ந்தார். தன் முன்னே பண்டிதர் ஓடிவந்து வணங்கினார். முதியவருக்கு அதிர்ச்சியுடன் சாமி நீங்க என்ன செய்றீங்க நான் தானே உங்களை எப்பொழுதும் தங்களை வணங்குவேன். நீங்கள் என்னை ஏன் வணங்குகின்றீர்கள் என்று கேட்டார். என்னை மன்னித்து விடு நான் துரோகி. கங்கா மாதா உனக்கு ஒரு பரிசு கொடுத்தாள் என்று நடந்த அனைத்தையும் சொல்லி ராஜாவிடம் இருந்து தன்னை காப்பாற்ற வழி சொல்லுமாறு கேட்டார். முதியவர் கண்ணை மூடினார். தனக்கு அருகே இருந்த செருப்பு தைக்க தேவையான தண்ணீர் பாத்திரத்தில் நிரம்பிய நீரை வேண்டினான். அம்மா கங்கா நீ எனக்கு பரிசாக ஒரு வளை கொடுத்ததற்கு நான் எத்தனையோ ஜென்மம் கடமைப் பட்டிருக்கிறேன் தாயே. பாவம் இந்த பண்டிதரின் உயிரைக் காப்பாத்து தாயே. இன்னொரு வளையலும் தா அவர் பிழைக்கட்டும் என்று தனது கையை அந்த தண்ணீரில் விட்டார். மீண்டும் பிரகாசமான தங்க வைர கற்கள் பதித்த இன்னொரு வளையல் அந்த முதியவரின் தண்ணீர் பாத்திரத்திலிருந்து தோன்றியது. பண்டிதர் ராஜாவிடம் அதை எடுத்து போகவில்லை. தனது உயிரைப் பற்றி கவலைப் படவில்லை. முதியவரின் கால்களை கெட்டியாக பிடித்துக்கொண்டு கண்ணீரால் அவற்றை நனைத்து அபிஷேகம் செய்தான். சீடனாக அருகில் அமர்ந்தார். செய்தி அனைவருக்கும் பரவியது. ராஜாவும் அவர் மனைவியும் ஓடி வந்தார்கள். முதியவரை வணங்கி இத்தொழிலை விட்டுவிட்டு அரண்மனையில் வந்து தங்குமாறு அழைத்தார்கள். என் கங்காமாதா தரிசனம் ஒன்றே போதும் என்று அவர்களை திரும்பி வணங்கினார் முதியவர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.