ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -15

ராமர் தசரதரிடம் தந்தையே வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன். நான் ராஜ சுகங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு வனம் செல்ல வேண்டும் என்று தீர்மானித்திருக்கின்றேன். தவசிகள் வாழும் தவ வாழ்க்கையை வாழ விரும்புகின்றேன். தாங்கள் சொல்லும் செல்வமும் சேனை பரிவாரங்களும் தவ வாழ்க்கைக்கு உபயோகப்படாது. நீங்கள் சொல்லும் அனைத்தையும் நான் காட்டிற்கு கொண்டு சென்றால் யானையை தானாம் செய்த பிறகு அதனை கட்டும் கயிற்றின் மீது ஆசைப்படுவது போலாகும். ஆகையால் மண்வெட்டியும் ஒரு கூடை மட்டும் போதும் அதை மட்டும் கொடுங்கள் எனக்கு போதும் என்றார். கைகேயி சிறிதும் கவலைப்படாமல் ஓடிப்போய் தயாராக இருந்த மண்வெட்டியையும் கூடையையும் கொண்டு வந்து கொடுத்தாள். அதனை பெற்றுக்கொண்ட ராமர் தந்தையே நாங்கள் செல்கிறோம். நான் திரும்பி வரும்வரையில் தாய் கௌசலையை இங்கே விட்டு செல்கிறேன் அவர் மிகவும் துக்கத்தில் இருக்கிறாள். எனக்காகவே அவள் உயிரை வைத்துக்கொண்டிருக்கிறாள். நான் திரும்பி வரும் வரை பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு மூவரும் கிளம்பினார்கள். தசரதர் தேர் ஒட்டி சுமந்தனை அரைத்து மூவரையும் காட்டின் எல்லைவரை விட்டுவிட்டுவா என்று கண்ணீருடன் சொல்லி ராமர் செல்வதை காண முடியாமல் தனது கண்களை மூடிக்கொண்டார். அரண்மனை பெண்கள் அனைவரும் கண்ணீருடன் விடை கொடுத்தார்கள். தன் திட்டம் முழுமையடைந்து விட்டதாக கைகேயி மகிழ்ச்சி அடைந்தாள்.

ராமர் சென்றதும் தசரதர் நான் எத்தனையோ கன்றுகளை கொன்று தாய் பசுவை இம்சித்திருக்க வேண்டும். அதனாலேயே நானும் கைகேயியின் இம்சையினால் என் மகனை பிரிந்து வாடுகின்றேன் என்று சொல்லி கதறி அழுதார். சுமத்திரையிடம் விடைகொடுக்குமாறு வணங்கினார்கள். சுமத்திரை லட்சுமணனை கட்டி அணைத்து உன் அண்ணனிடம் நீ வைத்துள்ள அன்பை பார்த்து உன்னை பெற்றதன் பாக்கியத்தை அடைந்துவிட்டேன். ராமரை காப்பது உன் கடமை. உன் அண்ணன் அருகில் இருந்து பத்திரமாக பார்த்துக்கொள். தம்பிக்கு அண்ணன் குருவும் அரசனும் ஆவான். இது நம் குலத்தின் தருமம். இதனை காப்பாற்றுவாயாக போய் வா லட்சுமணா என்று சுமத்திரை மூவருக்கும் விடைகொடுத்தாள்.

மூவரும் ரதத்தில் ஏறினார்கள். சீதை ராமருடன் காட்டில் இருக்கப்போகின்றோம் என்று சிரிப்பும் சந்தோசமுமாக ஏறினாள். தேரோட்டி சுமந்திரன் ராமரை பார்த்து இப்போது முதல் பதினான்கு வருடம் ஆரம்பம் ஆகின்றது என்று சொல்லி தேரில் ஏறினான். வீதியில் காலை முதல் குதூகலத்துடன் கொண்டாட்டத்தில் இருந்த மக்கள் இப்போது துக்கத்துடன் இருந்தார்கள். புறப்பட்ட ரதத்தை தடுத்த மக்கள் ராமரை கண்குளிர பார்த்துக்கொள்கின்றோம் சிறிது நேரம் நிறுத்திவைக்கும் படி மக்கள் கூப்பாடு போட ஆரம்பித்தார்கள். இங்கிருந்தால் மக்களிடம் இன்னும் துக்கம் அதிகமாகும் என்று எண்ணிய ராமர் ரதத்தை வேகமாக செலுத்த உத்தரவிட்டார். மிகவும் கஷ்டப்பட்டு ரதத்தை சுமந்திரன் அரண்மணை வாயியில் இருந்து ரதத்தை வெளியே கொண்டு வந்து வேகமாக செலுத்தினான். தசரதர் வெளியே வந்து ரதம் புறப்பட்டதில் இருந்து கண்ணை விட்டு மறையும் வரை ரதத்தை பார்த்துக்கொண்டே வெகு நேரம் நின்றார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.