ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -20

அயோத்தியில் தசரதர் தேரோட்டி சுமந்திரனின் வரவை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தார். ஒரு வேளை மனதை மாற்றிக்கொண்டு ராமர் சுமந்தரனோடு திரும்பி வந்துவிடுவான் என்ற மனக்கோட்டையில் இருந்தார். அயோத்தி நகரை சுமந்திரன் நெருங்கினான். வழக்கமாக நகரத்தில் இருந்து வரும் சத்தம் ஒன்றும் இல்லாமல் பாழடைந்த ஊரைப்போல அமைதியாக இருந்தது அயோத்தி. ரதம் கோட்டை வாயிலை நெருங்கியதும் மக்கள் சுமந்திரனிடம் ராமர் எங்கே அவரை எங்கே விட்டீர்கள் என்று கேட்டுக்கொண்டே அவனை சுற்றிக்கொண்டார்கள். ராமர் கங்கை கரையில் ரதத்தை விட்டு இறங்கி என்னை அயோத்திக்கு செல்லுமாறு உத்தரவிட்டார். மூவரும் கங்கை கரையை கடந்து வனத்தில் தனியாக நடந்து சென்று விட்டார்கள் என்றான் சுமந்திரன். மக்கள் அனைவரும் கதறி அழ ஆரம்பித்தார்கள். பெண்களின் அழுகை சத்தம் ராஜவீதிகள் முழுவதும் சுமந்தரனுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது. துக்கத்தினால் தனது முகத்தை மறைத்துக்கொண்டு அரண்மனைக்குள் நுழைந்தான் சுமந்திரன்.

தசரதரின் அறைக்குள் நுழைந்தான் சுமந்திரன். அங்கே குற்றுயிராக இருந்த தசரதரிடம் ராமர் சொல்லி அனுப்பிய செய்தியை சொல்லினான் சுமந்திரன். தசரதர் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தார். அப்போது கௌசலை தசரதரைப்பார்த்து கடுமையாக பேசினாள். உங்கள் சத்தியத்தை காப்பாற்ற வனத்திற்கு மகனை அனுப்பிவிட்டீர்கள். என்னுடைய துக்கத்தில் யார் பங்கெடுத்துக்கொள்வார்கள். உங்களுடைய துக்கத்தை பார்த்து நான் ஆறுதல் அடைந்து கொள்ளமுடியுமா? இங்கு கைகேயி இல்லை நீங்கள் பயப்பட வேண்டாம். தைரியமாக பேசுங்கள். உலகமே வியக்கும் வண்ணம் வீரனாக இருக்கும் என் மகனை காட்டில் விட்டு வந்த தங்கள் தேரோட்டி வந்து நிற்கின்றார். அவரிடம் ஒன்றும் பேசாமல் இருக்கின்றீர்கள். ராமர் எங்கே எப்படி இருக்கின்றார் என்று விசாரியுங்கள் என்று கோபமாக கூறினாள். புத்திர சோகத்தில் இருக்கும் தசரதரின் மனநிலையை புரிந்து கொள்ளாமல் கௌசலை கடுமையாக பேசினாள்.

சுமந்திரன் கௌசலையிடம் சமாதானமாக பேசினான். தேவி மனக்குழப்பத்தை விட்டு தைரியமாக இருங்கள். அயோத்தில் இருப்பது போலவே ராமர் வனத்திலும் ஆனந்தத்துடன் இருக்கிறார். லட்சுமணன் ராமருக்கு பணிவிடைகள் செய்து தன் தரும வாழ்க்கையின் பயனை அடைந்து வருகிறார். சீதை பிறந்தது முதல் காட்டில் இருந்ததைப்போலவே ராமருடன் சந்தோசத்துடன் இருக்கிறாள். உதய சந்திரனைப்போலவே சீதையின் முகத்தில் அழகு சிறிதும் குறையவில்லை. குழந்தையை போல் பயம் இல்லாமல் விளையாடிக்கொண்டிருக்கின்றாள். வனவாசத்தில் அவர்களை பார்ப்பது அரண்மணை தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பவர்களை பார்ப்பது போலவே இருக்கிறது. நான் சொல்வது எல்லாம் உண்மை. உலகத்திற்கு ஒரு பாடமாக தருமத்தை வாழ்ந்து காண்பிக்கின்றார்கள். அவர்களின் தவம் உலகத்தில் பெரும் புகழுடன் என்றென்றும் நிற்கும் என்று கௌசலையை ஒருவாறு சமாதானப்படுத்தினான். கௌசலை சமாதானமடைந்தாலும் தசரதரை நிந்தித்துக்கொண்டே இருந்தாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.