ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -13

ராமனும் சீதையும் வனம் செல்வது உறுதியாகி விட்டது. தனக்கு உரிய செல்வங்கள் அனைத்தையும் சீதை தானம் செய்துவிட்டாள். அரச உடைகளை களைந்து தபஸ்விகளுகான உடைகளை அணிந்து கொண்டு கிளம்ப ஆயத்தமானார்கள். லட்சுமணன் ராமரின் முன்னிலையில் வந்தான். தங்களுடன் நானும் வருகிறேன். தங்களை விட்டு பிரிந்நிருப்பது என்னால் இயலாத காரியம். தங்களையும் அண்ணியாரையும் காவல் காத்துக்கொண்டு தங்களுக்கு காட்டில் கனிவகைகளை தேடிக்கொடுத்து பணிவிடைகளை செய்கிறேன். என்னையும் அழைத்து செல்லுங்கள் என்றான் லட்சுமணன்.

தந்தை கைகேயியிடம் வரங்களை கொடுத்து சிக்கிக் கொண்டிருக்கின்றார். பரதன் ஆட்சி செய்துகொண்டிருப்பான். மாயையில் சிக்கிக்கொண்டிருக்கும் கைகேயியின் பிடியில் கௌசலையும் சுமித்ரையும் இருப்பார்கள். கைகேயி இவர்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பில்லை. நீயும் என்னுடன் வந்துவிட்டால் கௌசலைக்கும் சுமித்ரைக்கும் பணிவிடைகள் செய்ய யாரும் இருக்கமாட்டார்கள் இங்கிருந்து அவர்களை பார்த்துக்கொள் என்றார். தாய் தந்தைக்கு செய்யும் சேவை மிகப்பெரிய தர்மமாகும் இந்த தர்மத்தை செய்து கொண்டு இங்கேயே இரு என்றார்.

அண்ணா கைகேயி மாயையால் மயங்கி இருக்கிறாள். ஆனால் தங்களின் தம்பி பரதன் தங்களுடைய மகிமையால் சிறப்பான ஆட்சியை மக்களுக்கு கொடுப்பதோடு கௌசலையையும் சுமித்ரையையும் கௌரவமாக பார்த்துக்கொள்வார். இதில் எள் அளவும் சந்தேகம் வேண்டாம். மேலும் கௌசலையை சார்ந்து இருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பார்த்துக்கொள்ளும் வல்லமை அன்னை கௌசலையிடம் இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கான கிராமங்கள் அவரிடம் இருக்கிறது. உங்களை விட்டு என்னால் எப்படி பிரிந்து இருக்க முடியாதோ அது போலவே என்னைவிட்டும் தங்களால் பிரிந்து இருக்கமுடியாது. உங்களுடைய வெளியில் இருக்கும் உயிர் நான் என்று ஏற்கனவே சொல்லியிருக்கின்றீர்கள். அப்போதே என்னை தங்கள் செல்லும் இடத்திற்கெல்லாம் என்னையும் அழைத்துச்செல்வதற்கு தாங்கள் அனுமதி அளித்துவிட்டீர்கள். இப்போது என்னை தடுக்காதீர்கள் என்னையும் தங்களோடு வர அனுமதியுங்கள். தங்களுக்கு பின்னே கையில் வில் ஏந்தியவனாக நான் உங்களுடன் காட்டிற்கு வருவேன் என்றான் லட்சுமணன்.

ராமர் லட்சுமணனையும் காட்டிற்கு அழைத்து செல்ல சம்மதித்தார். லட்சுமணனிடம் அரச உடைகளை களைத்து தவஸ்விகளுகான உடைகளை அணிந்து கொள். ஜனகரின் வேள்விச்சாலையில் வருணபகவான் நமக்கு அளித்த இரண்டு விற்கள் எவ்வளவு அம்புகளை எடுத்தாலும் குறையாத அம்பாறத்தூணிகள் சூரியனைப்போல ஒளி வீசும் வாள் ஆகியவற்றை வசிஷ்டரிடம் கொடுத்து வைத்திருக்கின்றோம். வசிஷ்டர் இருப்பிடம் சென்று அவரிடம் கொடுத்து வைத்திருந்த அரிய அஸ்திரங்களை எடுத்துக்கொண்டு தன்னோடு வருமாறு கட்டளையிட்டார் ராமர். மூவரும் தசரதரிடம் விடை பெற்றுக்கொள்வதற்காக அவர் இருப்பிடம் சென்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.