ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -14

ராமரும் சீதையும் லட்சுமணனும் தசரதரிடம் வீழ்ந்து வணங்கினர். ராமர் தசரதரிடம் பேச ஆரம்பித்தார். தந்தையே சீதையும் லட்சுமணனும் என்னுடன் வருகின்றார்கள். அவர்கள் என்னோடு வரும் முடிவிலிருந்து பின் வாங்க மறுக்கின்றார்கள். நாங்கள் மூவரும் வனவாசம் செல்கிறோம் எங்களை ஆசிர்வதித்து அனுப்புங்கள் என்றார். அதற்கு தசரதர் ராமா கைகேயிக்கு கொடுத்த வரங்களால் நான் கட்டுப்பட்டவனாக இருக்கின்றேன். கைகேயியினால் நாம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறோம். அவளால் இந்த பாவ காரியத்திற்கு நான் துணை போவது போல் ஆகிவிட்டது. நாட்டிலிருந்து உன்னை வெளியேற்ற வேண்டிய இந்த அடாத செயலை கனவிலும் நான் நினைத்துபார்க்கவில்லை. கைகேயியிடம் நான் கொடுத்த வரத்திற்கு நான் கட்டுப்பட்டாலும் நீ கட்டுப்பட வேண்டிய அவசியம் இல்லை. தந்தையின் வாக்கை சத்தியமாக்க வேண்டும் என்று வனம் போக தீர்மானித்துவிட்டாய். நீ உன் பலத்தை பயன்படுத்தி இந்நாட்டின் அரசனாக ஆகியிருக்கலாம். ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்டார்.

அதற்கு ராமர் இந்த நாட்டை நீங்கள் அரசராக இருந்து இன்னும் ஆயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்யவேண்டிய இந்த அரச பதவிக்கு நான் ஆசைப்படவில்லை. என் பலத்தை பயன் படுத்தி அரசபதவியை பெற்றால் நீங்கள் கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் சத்தியத்தை இழந்து பொய்யனாகி விடுவீர்கள். உங்கள் சத்தியத்தை காப்பாற்றுவது என் கடமை அதனை மகிழ்ச்சியுடன் செய்துமுடிப்பேன். பதினான்கு வருடம் வனவாசத்தில் இருந்து விரைவில் திரும்பிவருவேன். பரதனை விரைவில் வரவழைத்து அவனுக்கு பட்டாபிஷேகம் செய்து அவனை ஆசிர்வதித்து உங்களது இரண்டாவது வரத்தையும் நிறைவேற்றுங்கள் என்றார்.

ராமா உன்னிடம் ஒரு சிறு கோரிக்கை வைக்கின்றேன். இன்று இரவு தங்கிவிட்டு நாளை அதிகாலை இங்கிருந்து செல்வாய். உன்னை மனதார பார்த்து திருப்தி அடைய விரும்புகின்றேன் என்றார். அதற்கு ராமர் என் தாய்க்கு கொடுத்த வாக்கின்படி நான் மனதால் அரசபதவியை துறந்துவிட்டேன். என் மனம் வனத்தை பற்றி இருக்கிறது. உங்களுடைய மனதில் வருத்தமும் குறையும் வேண்டாம். ஒரு நாள் செல்வதை ஒத்திப்போட்டால் தாய்க்கு நான் கொடுத்த வாக்கை மீறுவது போலாகும். மேலும் நாளை செல்வதனால் அதிகப்படியான பயன்கள் ஏதும் ஏற்படாது. என்னை ஆசிர்வதியுங்கள் நாங்கள் செல்கின்றோம் எங்களுக்கு உத்தரவு கொடுங்கள் என்றார். தருமத்தில் இருந்து பிறழாத உத்தமனே குலத்தின் பெருமையை பெருக்குவாய். பயம் உன்னை விட்டு விலகி நிற்கட்டும். நீ சென்றுவா என்று அனுமதி கொடுத்தார்.

தசரதன் தேரோட்டியான சுமந்தனிடம் நம்முடைய சேனேத்தலைவர்களிடம் சொல்லி சதுரங்க சேனே ஒன்றை உருவாக்கி ராமர் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடு செய்துவிடு. மேலும் ராமன் காட்டில் சுகமாக வாழ்வதற்கு தேவையான தனம் தானியம் பணியாட்களுடன் சகல பொருட்களையும் ஏற்பாடு செய்து அனுப்பி வைத்துவிடு என்று உத்தரவிட்டார். அருகிலிருந்த கைகேயி சிரித்தாள். ராஜ்யத்தில் உள்ள செல்வத்தை எல்லாம் வாரி ராமருடன் கொடுத்தனுப்பி விட்டு மீதி இருப்பதை பரதனுக்கு தருவீர்களா. வரத்தை மிக அழகாக பூர்த்தி செய்கின்றீர்கள் என்றாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.