ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -33

ராமர் லட்சுமணனிடம் தொடர்ந்து பேசினார். பரதன் இப்போது இங்கே ஏன் வருகின்றான் என்பதை நான் அறிவேன். பரதன் எள் அளவும் தருமம் தவறாதவன். நம்மில் யாருக்கும் தீமை செய்யும் எண்ணம் கூட இது வரை பரதனுக்கு வந்தது இல்லை. ராஜ்யத்தை எனக்கு கொடுத்து விடுவதற்காகவே வந்து கொண்டிருக்கின்றான். கைகேயின் மேல் கோபம் கொண்டும் தந்தையை சமாதானம் செய்தும் என்னை அழைத்துப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் வந்து கொண்டிருக்கின்றான் பரதன் என்றார் ராமர். பரதனைப்பற்றி நீ கோபமாக பேசியதெல்லாம் அதர்மம் அப்படி பேசக்கூடாது. ராஜ்யத்தை அடைய வேண்டும் என்று ஆசை உன்னிடம் இருக்கின்றதா நீ சொல். பரதன் வந்ததும் அவனிடம் சொல்கிறேன். லட்சுமணனுக்கு ராஜ்யத்தின் மீது ஆசை இருக்கின்றது. அவனுக்கு ராஜ்யத்தை கொடுத்துவிடு என்று சொல்கிறேன். இந்த வார்த்தையை கேட்டவுடன் பரதன் எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி ராஜ்யத்தில் உன்னை அமர வைத்துவிடுவான் என்று ராமர் லட்சுமணனிடம் கூறினார்.

லட்சுமணன் வெட்கத்தில் தலை குனிந்து ராமரின் அருகில் சென்று கைகூப்பிய வண்ணம் அமர்ந்தான். நமது தந்தையார் வந்து கொண்டு இருக்கலாம் என்று எண்ணுகிறேன் என்றான் லட்சுமணன். ராமர் கூட்டத்தை பார்த்தார். நாம் இந்த காட்டில் கஷ்டப்பட்டுக் கொண்டு இருக்கின்றோம் என்று எண்ணி நம்மை அழைத்துப்போக தந்தையாரும் இந்த கூட்டத்தில் வந்திருக்கலாம். ஆனால் சக்கரவர்த்திக்கு உண்டான வெண்கொற்றக் குடையை காணவில்லை. ஆகவே தந்தை வந்திருப்பது சந்தேகமே என்றார் ராமர்.

உறவினர்களையும் படைகளை தூரத்தில் நிறுத்திவிட்டு புகை கிளம்பும் இடத்தில் குடில் ஏதும் இருக்கின்றாதா என்று பார்த்து வருமாறு சில வீரர்களை அனுப்பினான் பரதன். புகை வரும் இடத்தில் குடில் இருப்பதை பரதனிடம் உறுதி செய்தார்கள் வீரர்கள். பரதன் படைகளை அங்கேயே இருக்குமாறு உத்தரவிட்டு சிலருடன் மட்டும் ராமர் இருக்குமிடம் சென்றான். புல் தரையில் அமர்ந்திருந்த ராமரை கண்டதும் பரதன் அண்ணா என்று கதறியபடியே ஓடி வந்து ராமரின் காலடியில் வீழ்ந்தான். அண்ணா என்ற வார்த்தைக்கு மேல் பேச முடியாமல் தொண்டை அடைக்க விம்மி அழுதான். பரதனின் பின்னே சுமந்திரனும் குகனும் வந்து சேர்ந்தார்கள். தபஸ்விகளுக்கன உடை அணிந்தும் உடல் மெலிந்தும் இருந்த பரதனை தூக்கிய ராமர் பரதனை அணைத்துக் கொண்டார். தம்பி அயோத்தியில் தந்தையை தனியாக விட்டுவிட்டு நீ இப்படி வெகுதூரத்தில் இருக்கும் வனத்திற்கு வரலாமா? ஏன் இது போல் உடல் இளைத்து இருக்கிறாய் என்று கேட்டார். பரதன் பேச்சு வராமல் அழுதபடியே இருந்தான். பரதனை மனநிலையை சராசரி நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் ராமர் பரதனிடம் பேசினார். நமது ராஜ்யம் எப்படி இருக்கின்றது. தந்தை தசரதர் தாய் மூவர் மற்றும் நமது உறவினர்கள் அனைவரும் எப்படி இருக்கின்றார்கள் என்று கேட்டார் ராமர்

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.