ராமர் வசித்த சித்திரக்கூடம் காட்டுப்பகுதியில் இருந்த ரிஷிகள் ராமரை சந்திக்க வந்தார்கள். இக்காட்டில் ராவணனுடைய இளைய தம்பி கரன் என்ற ராட்சசன் அடிக்கடி வந்து எங்களுக்கு தொல்லைகள் கொடுக்கின்றான். எனவே நாங்கள் வேறு இடத்திற்கு செல்ல முடிவு செய்திருக்கின்றோம். தங்களை ஒரு முறை பார்த்து விட்டு செல்லலாம் என்று வந்தோம். உங்களுக்கு விருப்பம் இருந்தால் தாங்களும் எங்களுடன் வந்துவிடலாம் என்றார்கள். ராட்சசனுக்கு பயந்து இங்கிருந்து செல்ல வேண்டாம். இங்கே இருங்கள் வரும் ராட்சசர்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ராமர் அவர்களுக்கு தைரியம் சொன்னார். ஆனால் ரிஷிகள் ராமர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். ரிஷிகள் அனைவரும் சென்றவுடன் ராமருக்கு தனது உறவினர்களின் ஞாபகம் வந்தது. பரதன் தனது மூன்று தாயாருடன் வந்ததும் அங்கே தங்கியிருந்து அவர்களிடம் பேசியதும் ராமரின் நினைவை விட்டு செல்லவில்லை. லட்சுமணனிடமும் சீதையிடமும் நமது நாட்டு மக்களும் உறவினர்களும் வந்து சென்றதும் எனக்கு அவர்களின் நினைவு அதிகமாக இருக்கிறது. வேறு இடத்திற்கு சென்றார் நலமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். நாமும் இங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்கு செல்லலாம் என்றார். லட்சுமணனும் சீதையும் ராமரின் சொல்லை ஆமோதித்து சித்ரகூட மலையில் இருந்து கிளம்ப ஆயத்தமானார்கள்.
சித்ரகூட மலையில் இருந்து கிளம்பியவர்கள் அத்திரி மகரிஷி ஆசிரமத்திற்கு சென்று அவருக்கு வணக்கம் செலுத்தினார்கள். ராமரை வரவேற்ற அத்திரி மகரிஷியும் அவரது மனைவி மகா தபஸ்வியுமான அனுசூசையும் அவர்களை வரவேற்று ஆசிர்வாதம் செய்து உபசரித்தார்கள். அனுசூயை சீதையிடம் காட்டிற்கு செல்ல முடிவெடுத்த கணவருடன் நீயும் வந்து கஷ்டங்களை அனுபவித்து எல்லோருக்கும் வழிகாட்டியாய் இருக்கின்றாய் என்று பாராட்டி தன் அன்புக்கு அடையாளமாக ஆபரணங்களும் ஆடைகளும் கொடுத்தாள். அத்திரி மகரிஷியின் வேண்டுகோளின் படி அன்று இரவு அவரின் குடிசையில் தங்கினார்கள்.
அத்திரி மகரிஷியிடம் நாங்கள் சித்ரகூட மலையில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல தீர்மானித்திருக்கின்றோம். நாங்கள் வசிக்க சிறந்த வேறு வனப்பகுதி சொல்லுங்கள் என்று நடந்தவற்றை சொன்னார் ராமர். அதற்கு அத்திரி மகரிஷி அறநெறியில் செல்லும் வனவாசிகளாக தபஸ்விகள் தண்டகாரண்யத்தில் வசிக்கிறார்கள். அந்த காட்டில் இருக்கும் தவசிகளுக்கு அரக்கர்கள் மிகவும் தொந்தரவு கொடுக்கின்றார்கள். பலவிதமான வடிவங்களை எடுத்து துன்புறுத்துகின்றார்கள். மனிதர்களை தின்னும் அரக்கர்களும் அக்காட்டில் இருக்கின்றார்கள். அங்கு சென்று நீங்கள் அந்த அரக்கர்களை அழிக்கவேண்டும். அக்காடு எளிதில் உள்புக முடியாதபடி அடர்ந்த காடாக இருக்கும். ததபஸ்விகள் பழம் பூ வேள்விக்கான பொருள்களை சேகரித்து செல்லும் வழி ஒன்று உள்ளது அதன்வழியாக உள்ளே செல்லலாம் என்று சொல்லி அக்காட்டிற்கு செல்லும் வழியையும் காட்டினார் அத்திரி மகரிஷி. உங்கள் பயணம் நல்லபடியாக அமைந்து செல்லும் காரியம் நிறைவேற வேண்டும் என்று ஆசிர்வதித்தார் அத்திரி மகரிஷி. ராமர் சீதை லட்சுமணனோடு மேக கூட்டத்தில் பிரவேசிக்கும் சூரியனைப்போல் அந்த காட்டில் புகுந்தார்.
அயோத்தியா காண்டம் முற்றியது.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/09/223.jpg?resize=650%2C420&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/09/224.jpg?resize=592%2C481&ssl=1)
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2020/09/225.jpg?resize=650%2C412&ssl=1)