ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -23

பரதனும் சத்ருக்கனனும் அயோத்திக்குள் நுழைந்ததும் கண்ட காட்சி அவர்களை பயம் கொள்ளச்செய்தது. எப்போதும் கலகலவென்று மகிழ்ச்சியுடன் மங்கள வாத்தியங்களுடன் இருக்கும் அயோத்தி நகரம் இப்போது துக்கத்துடன் அமைதியாக இருந்தது. பார்க்கும் அனைவரது முகங்கிளிலும் துக்கமே தென்பட்டது. கவலையை அடக்க முடியாமல் இருவரும் விரைவாக அரண்மனை கோட்டை வாயிலுக்குள் நுழைந்தார்கள். அரண்மனை அலங்காரமில்லாமலும் சரியாக மெழுகி கோலமிடாமலும் இருந்தது. அனைவரும் துக்கத்தில் சாப்பிடாமல் பட்டியினியில் இருந்தது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது. நடக்கக்கூடாத விபரீதம் எதோ நடத்துவிட்டது என்பதை இருவரும் புரிந்து கொண்டார்கள். தசரதரின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கு தசரதர் இல்லை. கைகேயியின் மாளிகைக்குள் நுழைந்தார்கள். பரதனைக்கண்டதும் கைகேயி ஒடிவந்து கட்டி அணைத்தாள். கைகேயியிடம் வீழ்ந்து வணங்கினான் பரதன்.

பரதனிடம் மகாராஜாவாக இருப்பாயாக என்று ஆசிர்வதித்தாள். என்ன ஆயிற்று இங்கு ஏன் அனைவரும் துக்கத்தில் இருக்கின்றார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை. தூதுவர்கள் அவசரமாக வர வேண்டும் இது வசிஷ்டர் ஆணை என்று சொன்னபடியால் விரைவாக வந்திருக்கின்றோம். அயோத்தி நகரம் முழுவதும் சோகத்தில் இருப்பது போல் தெரிகிறது. தந்தையை சந்திக்க அவரது மாளிகைக்கு சென்றோம். அங்கு அவர் இல்லை. அவருக்கு எனது வணக்கத்தை செலுத்த வேண்டும் அவர் எங்கிருக்கின்றார். என்ன நடந்தது. நடந்தவற்றை கூறுங்கள் என்று கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தான் பரதன்.

உன் தந்தை உலகத்தில் பிறப்பவர்கள் அடைய வேண்டிய சுகபோகங்களை அனைத்தையும் அனுபவித்துவிட்டார். பெரும் பாக்கியவானான அவர் பெரும் புகழை பெற்றார். செய்ய வேண்டிய பெரும் வேள்விகள் அனைத்தையும் செய்து முடித்தார். இந்த மண்ணுலகில் உடல் எடுப்பவர்கள் எல்லாம் இறுதியில் சென்று சேர வேண்டிய இடத்திற்கு உன் தந்தை சென்றுவிட்டார் என்றாள். தந்தை மடிந்தார் என்ற செய்தி கேட்டதும் குழந்தை போல் தரையில் வீழ்ந்து கதறிபதறி அழுதான் பரதன். அவனிடம் கைகேயி இந்த வையகத்தை ஆளும் அரசன் ஒருவன் இறந்தவர்களை எண்ணி இப்படி தரையில் விழுந்து புலம்ப கூடாது. அது அரசனுக்கு அழகில்லை. தருமமும் வேள்வியும் செய்யும் பதவியில் அமரப்போகிறாய். உன் முகம் சூரியனைப்போல் ஜோதியாக பிரகாசிக்கறது. உனக்கு ஒரு குறையும் இல்லை. உனக்கு கொடுக்கப்பட்டுள்ள ராஜ பதவியை ஏற்றுக்கொண்டு இந்நாட்டை ஆள்வாயாக. மனக்கலக்கத்தை விட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு எழுந்து நில் என்றாள். பரதனுக்கு கைகேயி கூறியதன் பொருள் புரியவில்லை.

என்னுடைய சகோதரன் ராமருக்கு நான் வந்து விட்ட செய்தியை அனுப்புங்கள். அறம் அறிந்த அண்ணன் தந்தைக்கு சமமானவர். வணக்கத்திற்குறிய அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கவேண்டும் என்றான். இனி எனக்கு அவர் தான் புகலிடம் என்றான். மேலும் நான் திரும்பி வருவதற்கு முன்பாகவே உயிர் போகும்படியாக என்ன நோய் தந்தையை பீடித்தது. அவர் இறப்பதற்கு முன்பாக ஏதேனும் ஆணையிட்டிருந்தால் சொல்லுங்கள். அதனை நான் செய்து முடிக்கிறேன் என்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.