ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -17

ரதத்தில் அன்று முழுவதும் பயணப்பட்டு கங்கா நதிக்கரையை அடைந்தார்கள். அயோத்திக்கு திரும்பி போகும்படி தேரோட்டி சுமந்திரனுக்கு ராமர் கட்டளையிட்டார். சுமந்திரன் ராமரை விட்டு பிரிய மனமில்லாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தார். சுமந்திரனுக்கு ஆறுதல் சொன்ன ராமர் நாங்கள் மூவரும் மகிழ்ச்சியுடனேயே வனம் செல்கின்றோம் என்பதை அரண்மனையில் இருக்கும் அனைவரிடமும் தெரிவித்துவிடு என்றும் கைகேயியினால் நடைபெற்ற அந்த சம்பவங்களால் மனவருத்தம் ஏதும் அடையவில்லை என்று கைகேயியிடம் சொல்லிவிடு என்றும் சொல்லி ராமர் சுமந்திரனுக்கு விடை கொடுத்தார். மிகுந்த துயரத்துடன் காலி ரதத்தை ஒட்டிக்கொண்டு சுமந்திரன் திரும்பிச்சென்றான்

கங்கா நதிக்கரையின் அழகை அனுபவித்துக்கொண்டே மூவரும் நடந்தார்கள். கங்கை நதியில் ஓரிடத்தை கண்ட ராமர் இங்கு மிகவும் அழகாக இருக்கிறது இன்று இரவு நாம் இங்கை தங்கலாம் என்று சொன்னார். மூவரும் ஓர் மரத்தடியில் அமர்ந்தார்கள். அப்போது அந்த பிரதேசத்தின் தலைவனாக இருந்த குகன் ராமரின் மேல் அபார அன்பு கொண்டவன். ராமர் லட்சுமணன் வந்திருப்பதை அறிந்ததும் தன் பரிவாரங்களுடன் அவர்களை தரிசிக்க வந்தான். தூரத்தில் குகன் வருவதை அறிந்த ராமர் தானே குகனிடம் சென்று குகனை கட்டி அனைத்தார். குகனுடைய உபசாரங்கள் அபாரமாக இருந்தது. பலவிதமான உணவு பண்டங்களை குகனின் ஆட்கள் கொண்டு வந்து கொடுத்தார்கள். ராமரின் தவகோலத்தை கண்ட குகன் அயோத்தி உங்களுக்கு எப்படியோ அதேபோல் இந்த நகரமும் உங்களுடையது ஆகும். நீங்கள் இங்கு வசதியாக இருந்து கொள்ளலாம். பதினான்கு வருடங்களையும் தாங்கள் இங்கே இருந்து எங்களுடனேயே கழித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றேன் என்றான் குகன்.

ராமர் குகனிடம் பதினான்கு வருடங்கள் தவவாழ்க்கை முறையை வாழுவதாக எண்ணி இருக்கின்றேன். தவவாழ்க்கை விரதத்தில் கனிகளை தவிர்த்து வேறு எதையும் உண்ணக்கூடாது. உன் அன்புக்கு கட்டுப்பட்டு கனிகளை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். இங்கே இருந்து உங்கள் உபசாரங்களை பதினான்கு வருடங்களும் ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் அது நான் கொண்ட சத்தியத்தில் இருந்து விலகுவது போலாகும். ஆகவே தன்னால் இங்கு இருக்க முடியாது நாளை இங்கிருந்து கிளம்பிவிடுவோம் என்றார்.

ராமருக்கும் சீதைக்கும் மரத்தடியில் புல்களை பரப்பி அன்று இரவில் தூங்க ஏற்பாடு செய்தான் லட்சுமணன். குகன் லட்சுமணிடம் நீங்கள் தூங்க தனியாக இடம் ஏற்பாடு செய்திருக்கின்றேன். இந்த இடத்தில் என்னை மீறி யாரும் வரமாட்டார்கள். எந்த பயமும் இல்லை. நீங்கள் நிம்மதியாக தூங்குங்கள் நான் காவலுக்கு இருக்கின்றேன் என்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.