வசிஷ்டர் ராமரிடம் பேசினார். ராஜ்யத்தின் அரச பதவியை மூத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது உனது குல தர்மம். இன்னொரு பக்கம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டும் என்ற தர்மம். இரண்டில் பெரிய தர்மம் தந்தையின் ஆணையை நிறைவேற்ற வேண்டியது என்ற உன்னுடைய செயல் சரியானதாக இருந்தாலும் உன்னுடைய தம்பி தன் மேல் விழுந்த பழி பாவத்திற்கு அஞ்சி உன்னை தஞ்சம் அடைந்திருக்கின்றான். தஞ்சம் அடைந்தவர்களை காப்பாற்றவேண்டும் கைவிட கூடாது என்பது உன்னுடைய விரதமாயிற்றே. நீ உன்னுடைய விரதத்தையும் காப்பாற்ற வேண்டும் ஆகையால் பரதனுக்காக உன்னுடைய தர்மத்திலிருந்து சிறிது இறங்கிவா என்றார்.
தாங்கள் எனக்கு கூறிய சொற்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்க கூடியதாகவும் என்னால் செய்யக்கூடியதாக இருந்தாலும் இச்செயல் நல்ல வழி போல் தோற்றமளிக்கும். ஆனால் இது தவறான பாதையே ஆகும். அறநூல்களின் உபதேசங்களின் படி நடக்காதவன் தனது ஒழுக்கம் சிந்தனையில் இருந்து வேறுபட்டு பாவங்களை செய்தவன் ஆகின்றான். தந்தையும் தாயும் குழந்தைகளுக்கு செய்யும் சேவைக்கு கைமாறாக அக்குழந்தைகள் வளர்ந்தபின் காலம் முழுவதும் என்ன செய்தாலும் தீர்க்க முடியாது. அதிகபட்சம் அவர் கொடுத்த உத்தரவிற்காவது கட்டுப்பட்டு நடக்க வேண்டும். என் தந்தை எனக்கு காட்டிற்கு 14 வருடங்கள் செல்ல கட்டளையிட்டிருக்கிறார். நான் அவரின் கட்டளைக்கு சம்மதம் தெரிவித்து காட்டிற்கு வந்துவிட்டேன். அவரின் சொல்லை ஒரு போதும் பொய்யாக்க மாட்டேன். இருக்கும் தர்மத்தில் கடைபிடிக்க வேண்டிய பெரிய தர்மம் சத்தியத்தை காப்பாற்றுவதாகும். அவருக்கு கொடுத்த சத்தியத்தை நான் மீற மாட்டேன் என்றார் ராமர்.
ராமர் இவ்வாறு பேசியதும் பரதன் தன்னுடன் வந்தவர்களிடம் முறையிட்டான். எனது அண்ணன் என் மீது சிறிதும் இரக்கம் காட்ட மறுக்கிறார். ஆகையால் இங்கேயே நான் பட்டினி கிடந்து உயிர் துறக்கபோகின்றேன் என்று சொல்லி சுமந்தரனிடம் தர்பை புல்லை கொண்டு வர உத்தரவிட்டான் பரதன். சுமந்திரன் ராமரைப்பார்த்து தயங்கிய படியே நின்று கொண்டிருந்தான். பரதன் தானே சென்று தர்பை புல்லை எடுத்து வந்து ராமரின் முன்பாக போட்டு அமர்ந்தான் சுற்றி இருக்கும் மக்களிடம் பேச ஆரம்பித்தான். ராமர் வந்து அரச பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் இல்லையெனில் நான் இங்கேயே பட்டினி இருந்து உயிர் துறப்பேன் என்றான். மக்கள் பரதனிடம் ராமர் சத்தியம் தவறாதவர். தந்தைக்கு கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற தன் எண்ணத்தில் அசையாமல் நிற்கின்றார். அவரின் குணம் நமக்கு தெரியும். அவர் அயோத்திக்கு வரமாட்டார். அவரை வற்புறுத்துவதில் பயன் ஒன்றும் இல்லை என்றார்கள்.
ராமர் பரதனை பார்த்து சத்ரிய தர்மத்துக்கு விரோதமான செயலை செய்யாதே எழுத்திரு. அரசன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே செல்வார்கள். நாம் சத்தியத்தை இத்தனை நாட்கள் மீறாமல் காத்தபடியால் மக்களும் சத்தியத்தை மீறாமல் காப்பாற்றுகிறார்கள். மக்களின் பேச்சையும் கேள். அயோத்திக்கு சென்று அரச பதவியை எற்று உனது கடமையை செய் என்றார்.
