ராமாயணம் அயோத்தியா காண்டம் பகுதி -18

லட்சுமணன் குகனிடம் மூன்று உலகத்தையும் யுத்தம் செய்து தனதாக்கிக்கொள்ளும் வல்லமை பெற்ற என் அண்ணன் புல் தரையில் படுத்து ஓய்வெடுக்கிறார். ஜனகர் மகாராஜாவின் புதல்வி சீதை சுகத்தை மட்டுமே அனுபவித்தவர். இப்போது தரையில் படுத்திருக்கிறாள். ராமனை வனத்திற்கு அனுப்பிய பின்பு அயோத்தி நகரம் எப்படி பிழைக்கப்போகிறதோ தெரியவில்லை. அரண்மனை முழுவதும் பெண்களின் அழுகுரலே கேட்டுக்கொண்டிருக்கும். ராமரை பிரிந்த துக்கத்தில் என் அன்னையர்கள் சுமத்ரையும் கௌசலையும் எப்படி உயிரோடு இருக்கின்றார்கள் என்றே எனக்கு தெரியவில்லை. வனத்திற்கு போ என்று தந்தை சொல்லிவிட்டார். அனால் அவர் ராமனை பிரிந்த துக்கத்தில் இனி உயிர் பிழைத்திருப்பது கடினமே. பதினான்கு வருடம் வனவாசம் இப்போது தான் ஆரம்பித்திருக்கின்றது. வனவாசம் முடிந்து நாங்கள் அரண்மனைக்கு திரும்பி செல்லும் போது யார் இருப்பார்கள் யார் இருக்க மாட்டார்கள் என்றே தெரியாது. இவ்வளவு துக்கத்தில் இருக்கும் எனக்கு தூக்கம் வரவில்லை என்றான். லட்சுமணன் கூறியதை கேட்ட குகனும் கண்ணீர் விட்டான். இருவரும் தூங்காமல் ராமருக்கும் சீதைக்கும் காவலாக இருந்து இரவு முழுவதும் பேசிக்கொண்டே இருந்தார்கள்.

அதிகாலையில் எழுந்த ராமர் குகனிடம் கங்கை நதிக்கரையை கடக்க ஒரு ஓடத்தை ஏற்பாடு செய்து தருமாறு கேட்டார். குகனும் தன் பணியாட்களிடம் சொல்லி ஓடம் ஒன்றை ஏற்பாடு செய்தார். மூவரும் கங்கை நதிக்கரையை கடக்க ஓடத்தில் ஏறினார்கள். குகன் ஓடத்தை செலுத்தினான். சீதை கங்கையை பிரார்த்திக்க ஆரம்பித்தாள். அனைனையே எங்கள் பதினான்கு வருட விரதம் முடிந்ததும் உன்னை கடந்து அயோத்திக்கு திரும்பி செல்ல அருள்புரிவாயாக என்று வேண்டிக்கொண்டாள். கங்கையின் மறுகரையை குகன் கடந்தான். குகனுக்கு தர வேண்டிய கூலிக்காக சீதை தன் மோதிரத்தைக் கொடுத்தாள். இதைக் கண்ட குகன் சுவாமி நாம் இருவரும் ஒரு தொழில் செய்பவர்கள். ஆற்றைக் கடக்க வைக்கும் ஓடக்காரன் நான். பிறவிக் கடலைக் கடக்க உதவும் ஓடக்காரர் நீங்கள். ஒரே தொழில் செய்யும் ஒருவருக்கொருவர் கூலி வாங்குவது தர்மம் ஆகாது என மோதிரத்தை வாங்க மறுத்தான். அவனது அன்பைக் கண்ட ராமர் உன்னையும் சேர்த்து தசரதருக்கு ஐந்து பிள்ளைகள் ஆகி விட்டோம் என்று உளமார வாழ்த்தினார்.

மூவரும் யார் துணையும் இன்றி முதன் முறையாக காட்டிற்குள் நடக்க ஆரம்பித்தார்கள். ராமர் லட்சுமணனிடம் நீ தான் இனி எங்களுக்கு காவல் படை என்றார். லட்சுமணனும் நீங்கள் முன்னால் செல்லுங்கள். உங்களை தொடர்ந்து அண்ணி சீதை வரட்டும் அவர்களை தொடர்ந்து நான் வருகிறேன். வனவாசத்தில் உங்களுக்கு கடினங்கள் ஏதும் வராமல் முடிந்தவரை பார்த்துக்கொள்கிறேன் என்றான். லட்சுமணா இக்காட்டின் அருகில் பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமம் உள்ளது. அவரிடம் சென்று அவரின் ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டு பதினான்கு வருட வனவாசத்தை எங்கு கழிப்பது என்று அவருடைய யோசனையை கேட்டு அதன் படி நடந்து கொள்ளலாம் என்றார். லட்சுமணனும் ஆமோதிக்க அங்கிருந்து மூவரும் கிளம்பி பரத்துவாஜர் முனிவரின் ஆசிரமத்துக்கு சென்று சேர்ந்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.