மனம்

புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் பயணம் சென்று கொண்டிருந்தார். ஒரு சீடன் குழப்பத்துடனே இருந்தான். சீடன் குழப்பத்தில் இருப்பதை உணர்ந்த புத்தர் செல்லும் வழியில் ஒரு சிறு நீர்நிலையைக் கண்டார். சீடனிடம் அங்கிருந்து குடிக்க நீர் கொண்டுவருமாறு சொன்னார். சீடன் செல்லும் முன்பே ஒரு மாட்டு வண்டி அந்த நீர் வழியாகச் சென்றது. சீடன் சென்று பார்த்த போது நீர் கலங்கியிருந்தது. இதை எப்படி புத்தருக்குக் கொடுப்பது என்று அவன் திரும்பி வந்து புத்தரிடம் விவரம் சொன்னான். சிறிது நேரம் கழித்து அந்த நீரை கொண்டுவா என்றார். அவன் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தான். நீர் சிறிது தெளிந்திருந்தாலும் இன்னும் கலங்கலாகவே இருந்தது. அவன் திரும்பி வந்து புத்தரிடம் சொன்னான். சிறிது நேரம் சென்றது. புத்தர் மீண்டும் அவனைப் போய் வரச் சொன்னார்.

இம்முறை சென்று பார்த்தபோது நீர் தெளிவடைந்திருந்தது. எடுத்து வந்து புத்தரிடம் கொடுத்தான். புத்தர் அந்தச் சீடனைப் பார்த்துச் சொன்னார் அந்த நீர் தெளிவதற்காக நீ ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருந்தாய். கலங்கிய நீரை அப்படியே விட்டு விட்டாய். நேரம் சென்றதும் நீர் தானே தெளிந்து விட்டது. உன் மனமும் இது போன்றதுதான். குழப்பம் ஏற்படும் போது மனதை அப்படியே விட்டுவிட்டு அமைதியாக இரு. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளியும்.

மன அமைதியைப் பெறக் கடினமாக பயிற்சிகள் எதுவும் செய்ய வேண்டியதில்லை. அமைதியாக இருந்தாலே போதும் மனம் தானே குழப்பத்தில் இருந்து விடுபடும் – புத்தர்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.