கடவுள்

கடவுள் தான் இருப்பதை ஏன் மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதில்லை என்று குருவிடம் சீடன் கேட்டான். குரு ஒரு கதை சொன்னார்.

கடவுளிடம் ஒரு மனிதன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்றான். அப்போது குயில் ஒன்று பாடியது. அதைக் காதில் வாங்காத அவன் கடவுளே என்னோடு பேசுங்களேன் என்று உரத்த குரலில் கத்தினான். உடனே உரத்த இடியோசை எழுந்தது அதையும் பொருட்படுத்தாத அவன் என்னிடம் பேசாவிட்டாலும் பரவாயில்லை உன் தரிசனத்தை கொடு என்று இறைவனிடம் கேட்டான். சுடர்விட்டுப் பிரகாசித்த படி வானில் ஒரு நட்சத்திரம் உதித்தது நட்சத்திரத்தை கவனிக்காத அவன் தரிசனம் கொடுக்க மாட்டேன் என்கிறாய். பரவாயில்லை. ஏதாவது ஓர் அற்புதத்தை நிகழ்த்திக்காட்டு என்றான். கடவுள் மெல்ல கீழே இறங்கி பட்டாம்பூச்சியாக அவனைத் தீண்டினார் அவனோ தன் மேல் அமர்ந்த பட்டாம்பூச்சியை கைகளால் தட்டிவிட்டு
நடந்தபடி சொன்னான். கடவுள் இல்லை. கடவுள் இருந்திருந்தால் என்னோடு பேசி இருப்பார். அவரின் குரலை கேட்டிருப்பேன். கடவுள் இருந்திருந்தால் தரிசனம் கொடுத்திருப்பார். நன்றாக பார்த்திருப்பேன். கடவுள் இருந்திருந்தால் அற்புதத்தை காட்டியிருப்பார். நன்றாக ரசித்திருப்பேன். எதுவுமே நடக்கவில்லை ஆகவே கடவுள் இல்லை என்றான்

கதையைக் கேட்ட சீடன் சொன்னான் புரிந்தது குருவே கடவுள் தான் இருப்பதை வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறார். நாம் தான் புரிந்து கொள்வதில்லை நான் புரிந்து கொண்டேன் என்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.