விதுரர் நீதி

மகாபாரத பாத்திரங்களில் அறிவுக்கும் விவேகத்துக்கும் இலக்கணமாக இருந்தவர் விதுரர். திருதராட்டிரன் பாண்டு ஆகியவர்களின் இளைய சகோதரன். பணிப்பெண்ணுக்குப் பிறந்தவன் என்பதனாலேயே அரச பதவியில் இல்லாமல் இருந்தாலும் அரச குடும்பத்தில் எல்லோருடைய மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராக இருந்தார். விதுரர் மகா நீதிமான். தருமத்திலிருந்து சிறிதளவும் நழுவாதவர். திருதராட்டிரன் தன்னுடைய குழப்பங்கள் எதுவாகினும் விதுரனைக் கலந்தாலோசிப்பது வழக்கம். ஒரு முறை திருதராஷ்டிரன் விதுரரைப் பார்த்து மனிதனுக்கு ஆயுள் 100 வருடங்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இருந்தும் முழுமையான ஆயுள் வரை யாரும் வாழ்வதாகத் தெரியவில்லையே இது ஏன் என்று கேட்டார். அதற்கு விதுரர் 6 கூரிய வாள்கள் தான் மனிதனின் ஆயுளை குறைகின்றன என்றார். திருதராஷ்டிரர் அந்த வாள்கள் என்ன என்று கேட்டார். விதுரர் சொல்ல ஆரம்பித்தார்.

  1. அதிக கர்வம் கொள்ளுதல்

நானே கெட்டிக்காரன் எனக்கே அனைத்தும் தெரியும் மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் செல்வந்தன் நான் கொடையாளி நான் நல்லவன் பிறர் கெட்டவர்கள் என்று நினைப்பதால் கர்வம் அதிகரிக்கிறது. கர்வம் கொண்டவன் தானாகவே அழித்து போவார்கள். கர்வம் கொள்ளாமல் இருக்க வேண்டுமானால் தன் விஷயத்தில் முதலில் குற்றங்களைப் பார்க்க வேண்டும். பிறர் விஷயத்தில் நல்ல குணங்களைப் பார்க்க வேண்டும்.

  1. அதிகம் பேசுதல்

கடுமையில்லாததும் உண்மையானதும் அன்பானதும் நன்மையைக் கொடுக்கின்ற வார்த்தை எதுவோ அது வாக்கினால் செய்யப்படும் தவம். உண்மையில்லாத அன்பில்லாத நன்மையை கொடுக்காத எந்த வார்த்தைகளாக இருந்தாலும் அந்த வார்த்தையை பேசும் சுழ்நிலை அமைந்தால் பேசாமல் இருக்க வேண்டும்.

  1. தியாக மனப்பான்மை இல்லாமை

சுகமானவைகள் அனைத்தையும் நான் மட்டும்தான் அனுபவிக்க வேண்டும். எனது குடும்பம் மட்டுமே அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையின் காரணமாகத்தான் நமக்குத் தியாக மனப்பான்மை ஏற்படுவதில்லை. நாம் இந்த உலகில் பிறந்ததே நமக்காக அல்ல. பிறருக்கு உதவுவதற்காகத்தான் என்று உணர்ந்தால் தியாக மனப்பான்மை ஏற்படும்.

  1. கோபம்

கோபம்தான் மனிதனுடைய முதல் எதிரி. கோபத்தை வென்றவன்தான் வெற்றியாளன். அவன்தான் உலகில் சுகப்படுவான். கோபத்துக்கு வசப்பட்டவன் தர்மம் எது அதர்மம் எது என்ற விவேகத்தை இழந்து பாவங்கள் செய்கிறான். என்ன தீமைகள் ஏற்பட்டாலும் யார் நம்மைக் கோபித்துக் கொண்டாலும் அவற்றைச் சகித்துக் கொள்ளக் கற்றுக் கொள்ள வேண்டும். 

  1. சுய நலம்

சுயநலம்தான் எல்லாத் தீமைகளுக்கும் காரணம். சுயநலத்தோடு இருப்பவர்கள் தங்கள் காரியம் ஆக வேண்டும் என்பதற்காக எந்தப் பாவத்தையும் செய்ய அஞ்ச மாட்டார்கள். பிறர் இன்புறுவதைக் கண்டு இன்புற வேண்டும். பிறர் துன்புறுவதைக் கண்டு துன்புற வேண்டும். இப்படிச் செய்தால் சுயநலம் போய்விடும்.

  1. நண்பர்களுக்கு துரோகம் இழைப்பது

தாயை அடுத்து நண்பனுக்கு என்று வரும் போது உயிரைக் கொடுப்பது நட்பு மட்டுமே. உலகில் அதுபோல் நல்ல நண்பர்கள் கிடைப்பது அரிது. அவர்களுக்குத் துரோகம் செய்வதைப் போன்ற அநியாயம் உலகில் வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்த 6 கருத்துகளையும் சரியாக யார் பின்பற்றுகிறார்களோ அவர்கள் நிச்சயமாக நூறாண்டை நிறைவு செய்வான் என்று விதுரர் சொல்லி முடித்தார்.

மேலும் விதுரர் சொன்ன சில நீதிக் கருத்து

இந்த 3 சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1.பசி வயிற்றை கிள்ளும் போது.
2.தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3.போதையில் இருக்கும் போது.

இந்த 3 சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2.மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3.மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த 3 விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1.நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2.நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3.நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள். 

இந்த 3 பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1.ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2.நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3.நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.

விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது. ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது. இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.