இறைநம்பிக்கை

சீடன் ஒருவன் குருவிடம் இறைநம்பிக்கை இல்லாமல் நம்மால் நேர்வழியில் செல்ல முடியாதா என்று சந்தேகம் கேட்டான். சமயம் வரும் போது சொல்கிறேன் என்றார் குரு. சில நாட்கள் கழித்து அந்தச் சீடன் ஆஸ்ரமப் பசு ஒன்றை மேய்ச்சல் முடிந்து தொழுவத்தில் கட்டி வைக்க கூட்டிச் சென்றான். அச்சமயம் அங்கு வந்த குருநாதர் சீடனே பசுவுடன் நீ வருகிறாயா? அல்லது பசு உன்னுடன் வருகிறதா? பசுவை நீ ஓட்டுகிறாயா? பசு உன்னை அழைத்துச் செல்கிறதா? எனக்கேட்டார். குழம்பிய சீடன் குருவே தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றான்.

இந்தப் பசுவை நீதானே பராமரிக்கிறாய் இது உன் பேச்சை இந்த பசு கேட்கும் ஆனாலும் நீ ஏன் கயிறு கட்டி இழுத்துச் செல்கிறாய் என்றார். கயிறு இல்லை என்றால் பசு ஓடிவிடும் ஆகையால் கயிற்றால் கட்டி கொண்டு செல்கிறேன் என்றான். அப்படியென்றால் பசு உன் கட்டுப்பாட்டில் இல்லையா என்று கேட்டார். அதற்கு சீடன் குருவே பசு எனக்குப் பழக்கம்தான். பன்னிரண்டு வருடங்களாகப் பராமரிக்கிறேன் என்றாலும் அது எங்காவது ஓடி விடக்கூடாது என்பதால் அதைக் கயிறால் கட்டி அழைத்து வருகிறேன் என்றான்.

உன்னைப் போலத்தான் இறைவனும் மனிதர்களாகிய நாம் கட்டுப்பாடு தளர்ந்து சீரழிந்து விடக்கூடாது என்பதற்காக இறை நம்பிக்கையையும் மதக் கடமைகளையும் கொண்டு நம்மைக் கட்டுப்படுத்தி நேர்வழியில் செலுத்துகிறார். உனது அன்றைய கேள்விக்குப் பதில் இதுதான் குரு சொல்ல இறை வழிபாட்டின் அவசியத்தை உணர்ந்தான் சீடன்.

கருத்து:

பிறந்த பசு கன்று ஒன்று தன்னைப் பெற்ற பசுவிடம் மிகுந்த பாசம் இருந்தாலும் விளையாட்டால் துள்ளித் திரிந்து தூரத்திற்கு ஓடும். அக்கன்றைப் பெற்ற பசுவோ மனம் உருகி அதைப் பிரிந்து விடாமல் அதன் பின்னே தொடர்ந்து ஓடி அதைச் சுற்றிச்சுற்றி வரும். அப்பசுவின் நிலையே இறைவன் நிலை. சிவ சிவ என்று தெய்வத்தின் நாமத்தின் பெயரை மனம் உருகிச் சொல்லுபவர்கள் பின்னே அச்சிவன் செல்வான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.