ஏழை பணக்காரன்

ஒரு அரசன் இன்னொரு நாட்டின் மீது படை எடுப்பதற்காக ஒரு காட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தான். காட்டிற்குள் ஒரு முனிவர் இருந்தார். அவரிடம் தனது வெற்றிக்காக ஆசி பெறச் சென்றான் அரசன். காட்டில் கடும் குளிர் அடித்தது. முனிவரோ இடையில் மட்டுமே ஆடை உடுத்தியிருந்தார். தியானத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு தனது மேலாடையை எடுத்துப் போர்த்தினான் அரசன். கண் விழித்த முனிவர் அரசனைப் பார்த்தார். யாரப்பா நீ எதற்காக இங்கே வந்தாய் என்று கேட்டார். அதற்கு அரசன் முனிவரே நான் பண்ணைபுரத்தின் அரசன். பக்கத்து நாட்டின் மீது படையெடுத்துச் செல்கிறேன். நான் வெற்றி பெற தங்களிடம் ஆசி பெறவே காத்திருக்கிறேன் என்றான். அதற்கு முனிவர் எனக்கு அணிவித்த இந்த மேலாடையை எடுத்துச் செல் என்றார். திடுக்கிட்ட அரசன் நான் ஏற்கனவே பணக்காரன். என்னிடம் இதுபோல் பல சால்வைகள் உள்ளன. அதில் ஒன்றைத் தான் உங்களுக்கு கொடுத்தேன். இதை தாங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள் என்றான். அதற்கு முனிவர் அரசனே உன்னிடம் ஏற்கனவே ஒரு நாடு இருக்கிறது. அது போதாதென்று இன்னொரு நாட்டையும் பிடிக்கச் செல்கிறாய். ஒரு நாடு இருக்கும் போது இன்னோரு நாடு உனக்கு தேவைப் படுகிறது. அது போல் எத்தனை சால்வைகள் இருந்தாலும் இதுவும் உனக்கு தேவைப்படும் என்றார். அரசன் பதில் பேச முடியாமல் விழித்தான். முனிவர் தொடர்ந்தார். தேவை உடையவனே ஏழை அவனுக்கே பொருட்கள் தேவை. உனக்கு தேவை இருப்பதினால் நீயே இதனை எடுத்துச் செல். நான் தேவை இல்லாதவன் ஆகவே நானே பணக்காரன் ஆகவே எனக்கு வேண்டாம் என்று கண்ணை மூடி மீண்டும் தியானத்தை தொடர்ந்தார். அரசனுக்கு துறவியின் வார்த்தைகள் சம்மட்டியால் அடித்தது போல் இருந்தது. போர் எண்ணத்தைக் கைவிட்டு நாடு திரும்பினான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.