கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

அரசன் ஒருவன் கோவிலில் தன் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். அவனது கிழிந்த உடைகளையும் குளிக்காத அழுக்கு உடலையும் பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றார்கள். இதை உணர்ந்த அந்த ஏழை இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நிற்போம் அனைவரும் அன்னதானம் பெற்றச் சென்ற பிறகு நாம் வாங்கிக் கொள்வோம் என்று தள்ளி நின்றான். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவனை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிசொல்? சென்ற ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். நீண்ட நேரம் காத்திருந்தான் இறுதியில் உணவு அனைத்தும் தீர்ந்து விட்டது. சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அப்பனே ஆண்டவா என்ன தவறு செய்தேனோ தெரியவில்லை இப்படி ஒரு இழி பிறவியில் பிறந்து விட்டேன். எனக்கு ஏதேனும் நன்மை செய்யப்பா என்று கோவில் கோபுரத்தை பார்த்து வேண்டிக் கொண்டு கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில் அமர்ந்தான்.

அரசன் அன்னதானம் கொடுத்து முடித்து அந்த படித்துறையில் நடந்து வந்தார். அப்போது பரம ஏழை அரசனின் கண்ணில் பட்டான். என்னப்பா சாப்பிட்டாயா என்று அந்த ஏழையிடம் கேட்டார். தலை குனிந்து இருந்த ஏழை அரசனின் முகத்தைப் பார்க்காமல் கேட்பது அரசன் என்றும் தெரியாமல் ஊரே சாப்பிட்டது என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது என்று விரக்தியாக பதில் சொன்னான். அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் பிறந்த நாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்று தானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம் ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து உனக்கு பசிக்கிறதா எனக்கு உணவு கிடைக்கவில்லை என்றால் அது என் தவறு என்னை மன்னித்து விடப்பா என்றார். தன்னை தொட்டவரை திரும்பிப் பார்த்த பரம ஏழை தலையில் கிரீடம் காதல் குண்டலம் சுற்றிலும் பாதுகாவலர்கள் என்று அரசன் நிற்பதைக் கண்டு திடுக்கிட்டு எழுந்தான். அரசே நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்து கொண்டே பதில் சொல்லிவிட்டேன் மன்னிக்க வேண்டுகிறேன் என்று பதறி எழுந்தான். அரசர் சிரித்தபடியே என்னுடன் வா இன்று நீ என்னோடும் ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய் என்று அவனை பேசவிடாமல் அரண்மணைக்கு அழைத்துச் சென்றார். தன்னுடைய புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். பரம ஏழை குளித்து புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்தார். இன்றிலிருந்து நீ ஏழை இல்லை இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்ந்து கொள் என்று வாழ்த்தினார்.

அரசரின் முன் இதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. இதனை கண்ட அரசர் ஏனப்பா அழுகிறாய் என்று கேட்டார். அதற்கு பரம ஏழை நான் இது நாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன். இப்போது நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்து கொண்டேன் என்று சொன்னான். திடுக்கிட்ட அரசன் ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்டார். வாழ்க்கையில் இன்று தான் முதல் முறையாக கோவிலின் கோபுரத்தை பார்த்து எனக்கு ஏதேனும் நன்மை செய்யப்பா என்று ஆண்டவனிடம் வேண்டினேன் கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே இறைவன் மாற்றி விட்டான். இத்தனை வருடங்கள் இந்த கோவிலில் அமர்ந்திருக்கிறேன். ஆனால் ஒரு முறை கூட கோபுரத்தை கண்டு வணங்கியதில்லை. கோபுர தரிசனத்தை கண்டு வேண்டியதற்கே இறைவன் என் வாழ்க்கையை மாற்றி விட்டார் என்றால் கோவிலின் உள்ளே சென்று கடவுளிடம் கேட்டால் முக்தியையே கொடுத்திருப்பார் என்று இதுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன் என்று சொல்லி அழுதான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.