ஸ்ரீ வாதிராஜர்

ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தை ஒட்டி தனியார் ஒருவருக்குச் சொந்தமான பரந்த நிலப்பரப்பு இருந்தது. அதன் உரிமையாளர் கடலையை விதைத்திருந்தார். அது செழிப்பாக வளர்ந்திருந்தது. ஒரு நாள் காலையில் உரிமையாளர் நிலத்தைப் பார்வையிட வந்தபோது ஒரு பகுதியில் வளர்ந்திருந்த பயிர்கள் சிதைவடைந்து அலங்கோலமாக இருந்தன. கவலையுடன் வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையிலும் போய்ப் பார்த்தார். அன்றும் மேலும் சில பகுதிகள் சேதம் அடைந்திருந்தன. எப்படியும் இன்று இதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்த உரிமையாளர் அன்று இரவு நேரத்தில் அங்கேயே ஒரு பக்கத்தில் மறைவாகக் காத்திருந்தார். சற்று நேரத்தில் ஸ்ரீ வாதிராஜரின் ஸ்ரீ மடத்தில் இருந்து, கண்ணைக் கவரும் வெள்ளை நிற குதிரை ஒன்று வெளிவந்தது. அது நேராக வயலை அடைந்தது. கடலைச் செடிகளைச் சேதப்படுத்தியது. இதைக் கவனித்த நிலத்தின் உரிமையாளர் குதிரையை விரட்டினார். அந்தக் குதிரை அவரிடமிருந்து தப்பித்து ஓடி ஸ்ரீ மடத்துக்குள் புகுந்தது. வீடு திரும்பிய உரிமையாளர் மறு நாள் காலையில் ஸ்ரீ வாதிராஜரிடம் போய் நடந்ததை விவரித்து நியாயம் கேட்டார்.

மடத்தில் அப்படிப்பட்ட குதிரை எதுவும் கிடையாதே நிஜமாகத்தான் சொல்கிறாயா எனக் கேட்டார் ஸ்ரீ வாதிராஜர். நானே என் இரண்டு கண்களாலும் பார்த்தேன் சுவாமி எதற்கும் இன்று இரவு மறுபடியும் பார்த்து விட்டு நாளை காலையில் வந்து சொல்கிறேன் என்ற உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரை வணங்கி விடை பெற்றார். அன்று இரவும் அதே வெள்ளை குதிரை மடத்திலிருந்து வெளி வந்தது. வழக்கம் போல் நிலத்தில் புகுந்து கடலைச் செடிகளைத் தின்று சேதப்படுத்தியது. பிறகு முந்தைய நாள் போலவே ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்தது. ஸ்ரீ மடத்தின் வாயில் வரை அதை துரத்தி வந்த உரிமையாளரால் அன்றும் பிடிக்க முடியவில்லை. எனவே மறு நாள் பொழுது விடிந்ததும் ஸ்ரீ வாதிராஜரின் முன்னால் வந்து நின்றார். சுவாமி நேற்றிரவும் என் கண்ணாரக் கண்டேன். வெள்ளை வெளேர் என்ற குதிரை ஒன்று இந்த ஸ்ரீ மடத்தில் இருந்து வெளியே வந்தது. எனது நிலத்தில் புகுந்து செடிகளை நாசப்படுத்தியது. விடாமல் துரத்தி வந்த என் கைகளில் அகப்படாமல் அது ஸ்ரீ மடத்துக்குள் நுழைந்து விட்டது என்றார் உரிமையாளர். நான் நேற்றே சொன்னேன். ஸ்ரீ மடத்தில் குதிரை கிடையாது. ஆனால் நீயோ இப்படி சொல்கிறாய். இதற்கு என்ன பதில் சொல்வதென்றே எனக்கு தெரியவில்லை என்றார். தான் சொன்னதையே மீண்டும் வலியுறுத்திய நில உரிமையாளர் சுவாமி ஏற்கெனவே என் நிலத்தில் நிறையச் செடிகள் பாழாகிவிட்டன. இனிமேலும் இழப்பு வந்தால் என்னால் தாங்க முடியாது சுவாமி என்று மன்றாடினார். அவருக்கு ஆறுதல் சொன்ன ஸ்ரீ வாதிராஜர் சரி உனது வார்த்தையை நான் நம்புகிறேன். நீ போய் உனக்கு எவ்வளவு சேதமாகியுள்ளது என்று மதிப்பிட்டுச் சொல். இங்கிருந்து குதிரை வருகிறது என்று நீ சொல்வதால் அந்த இழப்பை நானே ஈடு செய்கிறேன் என்றார். நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு வழி பிறந்தது என்ற ஆறுதலுடன் நிலத்தை நோக்கிப் போனார் உரிமையாளர். போனதை விட வெகு வேகமாகத் திரும்பி ஓடி வந்தார் உரிமையாளர்.

ஸ்ரீ வாதிராஜரை வணங்கிய சுவாமி என் கண்கள் கூசுகின்றன. எனது நிலத்தில் அற்புதம் விளைந்திருக்கிறது. சேதமாகியிருந்த பகுதியில் எல்லாம் இப்போது தங்கக் கடலைகள் இறைந்து கிடக்கின்றன. சுவாமி தங்கள் மடத்துக் குதிரை சாதாரணமானதல்ல தெய்வீகமானது என்று ஆச்சரியத்துடன் கூறினார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட ஸ்ரீ வாதிராஜர் பின்னர் தியானத்தில் அமர்ந்தார். வெள்ளை குதிரையாக வந்தது ஹயக்ரீவர் என்பதைப் புரிந்து கொண்டார். அவரது தியானம் கலைந்தது. சுவாமி தெரியாமல் வெள்ளைக் குதிரையை விரட்டி விட்டேன். அற்புதம் செய்த அந்தக் குதிரையை இன்று இரவில் மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் நில உரிமையாளர். இனிமேல் உன்னால் அந்தக் குதிரையைப் பார்க்க முடியாது. பார்க்க முயன்றால் உன் பார்வை போய்விடும் என்று எச்சரித்தார் ஸ்ரீ வாதிராஜர். எனது பார்வை முற்றிலுமாகப் போனாலும் பரவாயில்லை. அந்த குதிரையை நான் பார்த்தே ஆக வேண்டும் சுவாமி என்ற நில உரிமையாளர் ஸ்ரீ வாதிராஜரிடம் விடைபெற்று வீடு திரும்பினார்.

தனது நிலத்தில் இரவு நேரத்தில் குதிரையின் வரவை எதிர்பார்த்து காத்திருந்தார் நில உரிமையாளர். வழக்கம் போல் குதிரை வந்தது. அதைப் பார்த்த சற்று நேரத்துக்குள் அவரது பார்வை பறிபோனது. அதற்காக அவர் கவலைப்படவில்லை. அதற்கு பதிலாக குதிரையாக தினமும் வந்தது தெய்வமே என்பதை உணர்ந்து மெய்மறந்து அப்படியே உட்கார்ந்திருந்தார் அவரது உன்னதமான பக்தியை கண்ட ஸ்ரீ வாதிராஜர் நில உரிமையாளருக்கு மீண்டும் பார்வை தருமாறு ஸ்ரீ ஹயக்ரீவரிடம் வேண்டிக்கொண்டார். சுவாமியின் அருளால் உரிமையாளருக்கு கண் பார்வை திரும்ப கிடைத்தது. ஸ்ரீ மடத்தில் இருந்து வெளிப்பட்ட தெய்வக் குதிரையின் திருப்பாதங்கள் பதிந்த எனது நிலம் இனிமேல் ஸ்ரீ மடத்துக்கே சொந்தம் என்று சொல்லி தனது நிலத்தை ஸ்ரீ மடத்துக்கு தானமாக கொடுத்துவிட்டார்.

அந்த நிலத்தில் இருந்து விளையும் கடலையை வேக வைத்து வெல்லம் தேங்காய் துருவல் ஆகியவற்றை கலந்து இறைவனுக்கு நைவேத்தியம் செய்யும் பழக்கத்தை உண்டாக்கினார் ஸ்ரீ வாதிராஜர். சுவாமிக்காக தயாரிக்கப்பட்ட அந்த நைவேத்தியத்தை ஒரு தட்டில் வைத்து இரண்டு கைகளாலும் பிடித்து தன் தலைக்கு மேல் வைத்து கொள்வார் ஸ்ரீ வாதிராஜர். அவருக்குப் பின்புறமாக ஸ்ரீ ஹயக்ரீவர் வெண்மையான குதிரை வடிவில் வந்து தனது முன்னங்கால்கள் இரண்டையும் தூக்கி ஸ்ரீ வாதிராஜரின் தோள்களின் மீது வைத்தபடி நைவேத்யத்தை முழுவதுமாக உண்ணாமல் கொஞ்சம் மீதி வைப்பார். அந்த மீதியை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். இது அன்றாட நிகழ்ச்சி. இவ்வாறு நடக்கும் போது கோயிலில் உள்ள அர்ச்சகர்களுக்கு நைவேத்தியத்தில் தினமும் ஒரு சிறு பாகம் குறைவது பற்றி சந்தேகம் உண்டாயிற்று. வாதிராஜரே அந்த பகுதியை உட்கொள்கிறார் என்ற முடிவுக்கு வந்தனர். இதனால் ஸ்ரீ வாதிராஜரிடம் பொறாமை கொண்ட ஒரு சிலர் ஒரு நாள் நைவேத்தியத்தில் விஷம் கலந்தனர். வழக்கப்படி நைவேத்தியத்தை ஸ்ரீ வாதிராஜர் உண்பார். அவர் கதை முடிந்து விடும் என்று நம்பினர். வழக்கம்போல் நைவேத்தியத்தை வாதிராஜர் எடுத்துக்கொண்டு சந்நிதியினுள் சென்று கதவைத் தாழிட்டார். நைவேத்தியத்தை உட்கொள்ள ஹயக்ரீவரைப் பணிந்து துதித்தார். பிறகு பாத்திரத்தைத் தாழ்த்தியபோது அதில் வழக்கம்போல் மீதம் நைவேத்தியம் இல்லாமல் வெறும் பாத்திரம் மட்டுமே உள்ளதைக் கண்டு வியந்தார். இந்தப் புனிதப் பிரசாதத்தை உட்கொள்ள தகுதியற்றுப் போனோமோ என்று கடவுளை வேண்டினார்.

வெளியே அர்ச்சகர்கள் சந்நிதியினுள் என்ன நிகழ்கிறதோ என்ற ஆவலுடன் காத்திருந்தார்கள். வாதிராஜர் திட்டமாக ஆனால் வாடிய முகத்துடன் வெளியே கால் பதித்தது கண்டு வியப்படைந்தார்கள். பகவான் சிறிதளவு பிரசாதத்தைக்கூட என்று நமக்கு வைக்கவில்லை என்று மெல்லிய குரலில் கூறினார். சந்நிதியினுள் சென்ற அர்ச்சகர்கள் நைவேத்தியத்தைப் படைக்கும் பாத்திரம் சுத்தமாக நக்கப்பெற்று வெறுமனே உள்ளதைக் கண்டார்கள். ஆனால் பகவானின் உருவம் நீல நிறமாக மாறியிருந்தது. உடனே சுவாமியே இவ்வளவு நாட்களாக பிரசாதத்தை உண்கிறார் என்றுணர்ந்து வாதிராஜரிடம் ஓடிவந்து உண்மையை உரைத்து அவரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கோரினார்கள். வாதிராஜரோ பெருந்துயரத்தில் ஆழ்ந்தார். நான் மன்னிக்க முடியாத குற்றத்தைச் செய்தேன். என் கையாலேயே பகவானுக்கு விஷம் கலந்த நைவேத்தியத்தைப் படைத்தேன் ஆனால் பகவான் தன் எல்லையற்ற கருணையினால் ஒரு துளிகூட மிச்சமில்லாமல் உட்கொண்டாரே என வருந்தினார். இவரை அறியாஅல் இக்குற்றம் நடந்தாலும் விஷத்தின் அறிகுறி பகவானின் திருவுருவில் தோன்றியது. பொழுது புலரும் வேளையில் வாதிராஜரின் கனவில் கடவுள் தோன்றி விதைகள் உள்ள ஒரு பொட்டலத்தைக் கொடுத்து மட்டி என்ற ஊரில் இவ்விதைகளை விதையிடு. இவை காய்க்கும். காய்ந்த காய்களிலிருந்து 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படை. விஷத்திற்கு இது முறிவாக இருக்கும் என்று அருளிச்செய்தார். விழித்தவுடன் வாதிராஜர் மட்டி என்ற ஊருக்குச் சென்று அந்த விதைகளை விதைத்தார். அந்தச் செடியினில் காய்ந்த காய்களைக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து நைவேத்தியத்தைப் படைத்தார். இவ்வாறு நைவேத்தியம் செய்யச் செய்ய திருவுருவினின்று நீல நிறம் சிறிது சிறிதாக இறங்கிற்று. 48 நாட்களுக்குப் பிறகு சிறு நீல நிறக் கீறல் ஒன்றே நெஞ்சில் இருந்தது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.