வியாச தீர்த்தர்

காவிரி நதியும் கபினி நதியும் கலக்கும் இடத்துக்கு அருகே உள்ள தலைக்காடு எனும் தலத்தின் ஒரு பகுதியாகத் திகழ்ந்த பன்னூரை ஆண்டு வந்தவர் வேங்கடகிரி நாயக். அவரிடம் அமைச்சராகப் பணி புரிந்தவர் ராமதேவர். உயர்ந்த கல்வியறிவு தெளிவு பெற்ற சிந்தனை நிர்வாகத் திறன் ஆகியவற்றில் தலை சிறந்து விளங்கியவர் ராமதேவர். ராமதேவரின் மனைவி சீதம்மா (லக்ஷமம்மா) என்றும் சொல்வார்கள். இந்தத் தம்பதியருக்கு பீமக்கா எனும் பெண் குழந்தை இருந்தது. அந்தத் தம்பதியினர் ஆண் குழந்தை ஒன்று வேண்டுமென தவம் இருந்தார்கள். அவர்களின் கனவில் வேதவியாசர் தோன்றி காவிரிக் கரைக்கு அருகில் ஒரு துறவி வருவார். அவரைச் சரண் அடையுங்கள் என்று சொல்லி மறைந்தார். நாட்கள் கடந்தன அவர்கள் அங்கு செல்லவில்லை. ஒரு நாள் ராமதேவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் மயக்கம் அடைந்து விட்டார். அவர் இறந்து விட்டதாக அனைவரும் நினைத்தார்கள். சீதம்மா உடன் கட்டை ஏறத் தீர்மானித்தார். அந்தக் கால கட்டத்தில் உடன் கட்டை ஏறி உயிர் துறக்கும் பெண் யாராவது ஒரு பெரியவரிடம் ஆசி வாங்க வேண்டும். என்பது வழக்கத்தில் இருந்து வந்தது. அதன்படி அப்போது அங்கு விஜயம் செய்திருந்த மகான் பிரமண்ய தீர்த்தர் என்பவரிடம் ஆசி பெறும்படி சீதம்மாவை மற்றவர்கள் அறிவுறுத்தினார்கள். சீதம்மா தாங்க முடியாத வேதனையுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள அப்பூர் மடத்தின் தலைவரான பிரம்மண்ய தீர்த்தரை வணங்கினார்.

தீர்க்க சுமங்கலி பவ புத்ரவதீ பவ என்று ஆசிர்வாதம் செய்தார் பிரம்மண்ய தீர்த்தர். சீதம்மாவைச் சுற்றி இருந்தவர்கள் திடுக்கிட்டார்கள். நடந்ததை மகானிடம் விவரித்து சுவாமி கணவருடன் சேர்ந்து தானும் உயிர் துறக்க வேண்டும் என்பதற்காகவே இவள் தங்களிடம் ஆசி பெற வந்தாள் எனக் கூறினார்கள். அவர்களை பார்த்த பிரம்மண்ய தீர்த்தர் சீத்தம்மாவின் வீட்டுக்குச் சென்றார். தன் கையில் வைத்திருந்த கமண்டல நீரை ராமதேவர் உடம்பின் மீது தெளித்தார். உடனே ராமதேவர் உயிர்த்தெழுந்தார். எழுந்தவர் மனைவியுடன் சேர்ந்து பல முறை ஸ்வாமிகளை வணங்கினார். அவர்களுக்கு ஆசி கூறிய பிரம்மண்ய தீர்த்தர் உங்களுக்குப் பிறக்கப் போகும் முதல் குழந்தையை மடத்துக்குத் தந்து விடுங்கள் அதன் பிறகு உங்களுக்கு மற்றோர் ஆண் குழந்தை பிறக்கும் என்றார். அதன்படி சீதாம்மா கருவுற்றாள். குழந்தை பிறக்கப் போகும் நாளை அறிந்த பிரம்மண்ய தீர்த்தர் மடத்தில் இருந்து ஒரு தங்கக் தட்டைக் கொடுத்தனுப்பி குழந்தை பூமியில் படாமல் பிறக்க ஏற்பாடு செய்தார். பிரபவ வருடம் வைகாசி மாதம் பிறந்த குழந்தை பூமியைத் தொடாமல் தங்கத் தட்டில் ஏந்தப்பட்டது. ஏற்கெனவே வாக்களித்தபடி குழந்தையை மடத்துக்கு அனுப்பி வைத்தார்கள். அங்கே சுவாமிக்கு அபிஷேகம் செய்த பாலை உண்டு வளர்ந்தது குழந்தை. யதிராஜன் என்று குழந்தைக்கு பெயரிட்டார்கள். சுவாமிகளின் நேரடிப் பார்வையில் வளர்ந்த யதிராஜனுக்கு ஐந்து வயதாகியது. உபநயனம் செய்தார்கள். ஏழாவது வயதில் யதிராஜனுக்கு சந்நியாச தீட்சை தந்து வியாச தீர்த்தர் என்ற திருநாமம் சூட்டினார் பிரம்மண்ய தீர்த்தர்.

திருவரங்கம் கோவிலுக்கும் திருவானைக் கோயிலுக்கு இடையே ஒருமுறை எல்லைப் பிரச்சனை எழுந்தது. அனைவரின் உள்ளங்களிலும் மாற்றுக் கருத்துக்கள் இருந்தது. பிரச்சனை நாட்டை ஆண்ட சாளுவ நரசிம்மன் என்ற மன்னரிடம் கொண்டு செல்லப்பட்டது. சாளுவ நரசிம்மருடன் அங்கு வந்த வியாச தீர்த்தர் பிரச்சனை தீர ஒரு வழி சொன்னார். கோவிலில் இருந்து ஒருவர் மூச்சு விடாமல் ஓடத் தொடங்க வேண்டும். அவர் எங்கு செல்லும் போது மூச்சு விடுகின்றாரோ அதுவே எல்லை என்றார். இதை சாளுவ மன்னன் உட்பட அனைவரும் ஒப்புக் கொண்டனர். ஆனால் மற்றொரு பிரச்சனை எழுந்தது. யார் ஓடுவது என்பதில் கருத்து வேறுபாடு எழுந்தது. முடிவில் நானே ஓடுகிறேன் என்றார் வியாச தீர்த்தார். அனைவரும் ஒப்புக் கொண்டார்கள். திருவரங்கம் திருக்கோயிலிலிருந்து வியாச தீர்த்தர் ஓடத் துவங்கினார். ஒரு குறிப்பிட்ட எல்லை வந்ததும் மூச்சுவிட்டு நின்றார். அதுவே அரங்கநாதனின் எல்லையாக தீர்மானிக்கப்பட்டது. அந்த இடத்தில் ஒரு அனுமன் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து இரு கோவிலின் எல்லைப் பிரச்சனையை தீர்த்து வைத்தார் வியாச தீர்த்தார்.

கிருஷ்ண தேவராயர் கலிங்கப் போரில் வெற்றி பெற்று தலைநகர் திரும்பினார். அப்போது அவரை அணுகிய அரண்மனை ஜோதிடர்கள் ஒரு சில நட்சத்திரங்களின் சேர்க்கையால் மன்னருக்கு குறிப்பிட்ட நாளில் மரணம் நேரும் என்றார்கள். கிருஷ்ண தேவராயர் வியாச தீர்த்தரிடம் நடந்ததைக் கூறி அவரது பாதங்களில் சரணடைந்தார். ஆபத்து நேர்வதாக இருந்த அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் வியாச தீர்த்தர் தானே மன்னராக இருப்பதாக வழி கூறினார். அரசாட்சியை வியாச தீர்த்தரிடம் ஒப்படைத்தார் கிருஷ்ண தேவராயர். குறிப்பிட்ட நேரம் நெருங்கியது. சிம்மாசனம் காலியாக இருந்தது. வியாச தீர்த்தர் சிம்மாசனத்துக்குப் பூஜை செய்தார். தன் மேல் இருந்த காவி மேலாடையை எடுத்துச் சிம்மாசனத்தின் மீது எறிந்தார். பேரிரைச்சலுடன் அந்த ஆடை தீப்பிடித்து எரிந்தது. அதன் சாம்பல் மட்டுமே எஞ்சியது. கிருஷ்ண தேவராயருக்கு வரவிருந்த ஆபத்து நீங்கியது. அதன் பின் தான் வழிபட்டு வந்த தெய்வ வடிவத்தைச் சிம்மாசனத்தில் அமர்த்திய வியாச தீர்த்தர் தானும் சிம்மாசனத்தில் அமர்ந்தார். ஆபத்தை நீக்கிய வியாச தீர்த்தர் கிருஷ்ண தேவராயரிடமே மீண்டும் பதவியைத் தந்து அவரையே மன்னராககினார். அன்று முதல் வியாச தீர்த்தர் வியாசராஜர் என்று அழைக்கப்பட்டார்.

வியாச தீர்த்தர் டெல்லியில் ஒரு மேடான பகுதியில் தங்கி இருந்தார். அந்த மேடு சுல்தான் பலுல்லோடியின் மகன் சமாதி என்று தெரிய வந்தது. தோண்டுங்கள் இதை என்றார் மகான். சமாதி தோண்டப்பட்டது. அதனுள் இருந்த சடலத்தின் மேல் கமண்டல நீரைத் தெளித்தார் வியாச தீர்த்தர். உடனே சுல்தான் மகன் உயிர் பெற்றான். மாண்டவன் மீண்டதைக் கண்ட சுல்தான் பலுல்லோடி மகிழ்ந்தான். யானை ஒட்டகம் ஏராளமான சன்மானங்கள் ஆகியவற்றுடன் வாத்தியங்கள் முழங்க வந்து வியாச தீர்த்தருக்கு சமர்ப்பணம் செய்து வணங்கினான்.

இவர் இந்திய நாட்டின் பல்வேறு இடங்களில் அனுமன் சிலைகளை நிறுவினார். இவர் கன்னடத்தில் பல பாடல்களை இயற்றியுள்ளார். நியாயமிர்தம் தர்க்கதாண்டவம் ஆகியன இவரின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கன. சோமநாத கவியின் வியாசயோகி சரிதம் மற்றும் அவரது சீடரான ஸ்ரீனிவாச தீர்த்தரின் வாழ்க்கை வரலாறு ஆகிய நூல்களில் வியாச தீர்த்தரின் வரலாறு உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.