சிற்றம்பல நாடிகள்

சிற்றம்பல நாடிகள் என்பவர் 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சைவப் பெரியார். இவர் எப்போதும் மாணவர் திருக்கூட்டத்தோடு வாழ்ந்துவந்தார். வேளாளர் குலத்தில் பிறந்தவர். சீரை என்னும் சீர்காழிப் பகுதியிலுள்ள வேளைநகர் என்னும் புள்ளிருக்குவேளூர் இவரது ஊர். சீர்காழியில் வாழ்ந்த கங்கை மெய்கண்டார் என்பவர் இவரது ஆசிரியர். தில்லைச் சிற்றம்பலத்தை இவர் நாடி சிற்றம்பலத்தையே தனது நாடித்துடிப்பாகக் கொண்டிருந்ததால் சிற்றம்பல நாடிகள் எனப் போற்றி அழைக்கப்பட்டார். 63 சீடர்கள் உள்ள இவருக்கு இவரையும் சேர்த்து 64 பேர் ஒரு திருக்கூட்டமாய்த் திகழ்ந்து வந்தார்கள். இவர்கள் அனைவரும் காழி சிற்றம்பல நாடிகளின் அருளால் ஒரே சமயத்தில் முத்தி பெற்றனர். திருஞான சம்பந்தருக்குப் பின்னர் தம் திருக்கூட்டத்துக்கு ஒரே சமயம் முத்தி பெறச் செய்தவர் காழி சிற்றம்பல நாடிகளே.

சிற்றம்பல நாடிகள் ஒரு நாள் தம் திருக்கூட்டத்துடன் உணவு உண்ண அமர்ந்திருந்தார். உணவு பரிமாறிய சமையல்காரர் தவறுதலாக நெய் என எண்ணி வேப்ப எண்ணையைப் பரிமாறிவிட்டார். சிற்றம்பல நாடிகளும் சீடர்களில் 62 பேரும் அமைதியாக வேப்ப எண்ணெயை நெய்யாகக் கருதி உணவு உண்ண ஆரம்பிக்க கண்ணப்பர் என்னும் ஒருவர் மட்டும் குமட்டினார். சிற்றம்பல நாடிகள் அவரைப் பார்த்து கண்ணப்பா நம் திருக்கூட்டத்தில் இப்படிப் பக்குவமில்லாத ஒருவன் இருப்பது தகுமோ? எனக் கேட்க மனம் வருந்திய அந்தக் கண்ணப்பர் என்னும் சீடர் திருக்கூட்டத்தில் இருந்து விலகி வட தேச யாத்திரைக்கு போய்விட்டார். சிறிது காலத்திற்குப் பின்னர் சிற்றம்பல நாடிகள் ஜீவ சமாதியடையத் திருவுளம் கொண்டார். அப்பகுதியை ஆண்ட அரசனை அழைத்துத் தாம் தம் சீடர்கள் 62 பேரோடும் ஒரே சமயம் சமாதி அடையப் போவதாய்ச் சொல்லிச் சித்திரைத் திருவோண நாளில் அந்நிகழ்ச்சி நடைபெறும் எனவும் கூறினார். தாம் சமாதியில் இறங்க வசதியாகத் தனித்தனியாக 63 சமாதிகள் அமைக்கும்படியும் கூறினார். வியப்படைந்த மன்னனும் அவ்வாறே 63 சமாதிக் குழிகளை அமைத்தான். இந்த அதிசய நிகழ்வைக் காண மக்கள் கூட்டம் கூடியது. சிற்றம்பல நாடிகள் கூடி இருந்த மக்களை வாழ்த்தி ஆசிகள் வழங்கினார். மூன்று வெண்பாக்களைப் பாடித் தமக்கென நிர்ணயிக்கப் பட்ட சமாதிக்குழியில் இறங்கினார். அவ்வாறே சீடர்களும் ஆளுக்கு ஒரு வெண்பாவைப் பாடிவிட்டு அவரவருக்கென நிர்ணயித்த சமாதிக் குழியில் இறங்கினார்கள்.

சிற்றம்பல நாடிகள் தம் குருநாதர் திருவடியில் மனம் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து ஜீவ சமாதி அடைந்தார். அவ்வண்ணமே மற்றச் சீடர்களும் தங்கள் குருநாதரான சிற்றம்பல நாடிகளின் திருவடியில் ஒன்றி நிட்டையில் ஆழ்ந்து சமாதி அடைந்தனர். கூடி இருந்த மக்கள் 63 பேர் இருந்த திருக்கூட்டத்தில் ஒருவர் குறைவதைக் கண்டு வியப்புற்று ஒருவருக்கொருவர் அந்த மறைந்த சீடர் எங்கே சென்றாரோ இங்கே நடக்கும் விஷயங்கள் அவருக்குத் தெரியுமோ தெரியாதோ எனப் பேசிக் கொண்டனர். அப்போது திடீரென அங்கே கண்ணப்பர் வந்து சேர்ந்தார். தம் குருவானவர் மற்றச் சீடர் திருக்கூட்டத்தோடு சமாதி அடைந்து கொண்டிருந்ததைக் கண்ட கண்ணப்பர் நமக்கும் இங்கே சமாதிக்குழி அமைக்கவில்லையே என்று மனம் வருந்தி குருநாதரின் சமாதியை வலம் வந்து வணங்கித் தமக்கும் ஓர் இடம் தருமாறு வேண்டி பாடல் பாடினார். அந்த பாடலைப் பாடி முடித்ததுமே சிற்றம்பல நாடிகளின் சமாதி திறந்தது. சிற்றம்பல நாடிகள் கண் விழித்துத் தம் சீடனாம் கண்ணப்பரை நோக்கிக் கையைப் பற்றி அழைத்துத் தம் மடி மீது அமர்த்திக் கொண்டார். தம்மோடு இரண்டறக் கலக்கச் செய்தார். கூடி இருந்த மக்களும் மன்னனும் ஏற்கெனவே தாங்கள் அடைந்திருந்த வியப்புப் போதாது என இப்போது நேரில் கண்ட இந்நிகழ்வால் மேலும் வியந்து போற்றினர். இவரது சமாதி ஒரு கோயிலாகக் கட்டப்பட்டது.

சிற்றம்பல நாடிகள் வரலாற்றில் இந்நிகழ்வு நடந்த இடம் மயிலாடுதுறையிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் மயிலாடுதுறைக்கு மேற்கே சித்தர்காடு என்ற ஊராக உள்ளது. இப்போதும் இந்த இடம் ஒரு கோயிலாக உள்ளது. சித்தர்காடு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் மற்றும் சம்பந்தர் கோவில் என அழைக்கப்படும் இந்தக் கோயிலின் முக்கிய மூர்த்திகளாக பிரம்மபுரீசுவரர் உடனுறை திரிபுரசுந்தரி அருள் பாலிக்கின்றனர். ஈசனின் லிங்கத் திருமேனி இருக்கும் இடமே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி அடைந்த இடம் எனவும் சுற்றிலும் மற்றவர்கள் சமாதி அடைந்தனர் எனவும் கோவில் வரலாறு உள்ளது. ஒவ்வொரு வருடமும் சித்திரைத் திருவோணத்தில் இங்கே சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதியடைந்த தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப் படுகிறது.

சிற்றம்பல நாடிகள் இயற்றிய நூல்கள்

இரங்கல் மூன்று
சிவப்பிரகாசக் கருத்து
சிற்றம்பலநாடி கட்டளை
ஞானப் பஃறொடை
திருப்புன்முறுவல்
துகளறுபோதம்
சிற்றம்பலநாடி சாத்திரக்கொத்து

சிற்றம்பல நாடிகளின் மாணாக்கர்கள் இயற்றிய நூல்கள்

அறிவானந்த சித்தியார்
அனுபூதி விளக்கம்
சிற்றம்பல நாடிகள் கலித்துறை
சிற்றம்பலநாடி பரம்பரை
திருச்செந்தூர் அகவல்
சிற்றம்பல நாடி தாலாட்டு
சிற்றம்பல நாடி வெண்பா

2 thoughts on “சிற்றம்பல நாடிகள்

  1. R.Karthikeyan Reply

    இந்த”வருடம் 2023 சித்திரை மாத பூஜை நாள் மற்றும் தேதி அறிய வேண்டுகிறேன் ஐயா

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.