திரிலோசனதாசர்

திரிலோசனதாசர் பொற்கொல்லர் இனத்தைச் சார்ந்தவர் தனது தொழிலில் மிகவும் நேர்மையானவர் இறை பக்தி மிக்கவர் பாண்டுரங்கனிடம் அளவு கடந்த அன்பும் பக்தியும் கொண்டவர். இவர் இயற்றியுள்ள பக்திப் பாடல்கள் சீக்கிய கிரந்தத்தில் இடம் பெற்றுள்ளன. இவர் மன்னரின் அரண்மனைப் பொற்கொல்லராக இருந்தார். மன்னரின் மகளுக்குத் திருமணம் நடக்கவிருந்தது. மகளுக்கான நகைகளை திரிலோசனதாசர் செய்ய வேண்டுமென மன்னன் விரும்பி பொன் மற்றும் நவரத்தினக் கற்களை திரிலோசனரிடம் கொடுத்து நான்கு நாட்களுக்குள் நகை செய்து தரவேண்டும் எனக் கட்டளையிட்டான். திரிலோசனரும் சம்மதித்தார். ஆனால் இவர் அரண்மனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தவுடன் இவர் வீட்டிற்கு பஜனை கோஷ்டி ஒன்று வந்து இரண்டு நாட்கள் தங்கியிருந்து திரிலோசனாருடன் பாண்டுரங்கனை பற்றி பஜனை செய்ய விரும்புவதாகச் சொன்ன போது மிகவும் மகிழ்ந்து போனார் திரிலோசனார். இரண்டு நாட்கள் அவரின் வீடு பாண்டுரங்கன் பஜனையால் கோலாகலமாய் இருந்தது. பஜனை கோஷ்டி விடை பெற்றுச் சென்றது. அதன் பின்னர் தான் இவருக்கு நகை செய்ய வேண்டுமென்ற நினைவு வந்தது. நவரத்தினம் பதித்த நகைகளை செய்யும் வேலையில் இறங்கினார். அந்நகையைச் செய்வது அவ்வளவு எளிதாய் இல்லை. நான்கு நாள் கெடுவில் ஏற்கனவே பஜனையில் இரண்டு நாட்கள் கழிந்து விட்டதால் மீதமிருந்த இரண்டு நாளில் என்ன முயன்றும் திரிலோசனதாசரால் நகைகளைச் செய்ய முடியவில்லை. மன்னரின் ஆட்கள் நான்கு நாட்கள் முடிந்து விட்ட நிலையில் நகை செய்தாகி விட்டதா எனக் கேட்டு வந்தார்கள். இவர் இன்னும் இரண்டு நாட்கள் தரும்படியும் அதற்குள் செய்து முடித்து விடுவதாகவும் சொல்ல இன்னும் இரண்டு நாட்களில் செய்து முடித்து தராவிட்டால் மன்னரின் கோபத்திற்கு ஆளாகி தண்டனை பெறுவீர்கள் என எச்சரித்து விட்டுச் சென்றார்கள். என்ன சோதனையோ இரண்டு நாளில் இவரால் முடிக்க முடியவில்லை பயந்து போனார் திரிலோசனார். மன்னர் என்ன தண்டனை தருவாரோ என்ற பயத்தில் மனைவியிடம் கூடச் சொல்லாமல் அடர்ந்த காட்டிற்குள் சென்று ஓர் மரத்தடியில் அமர்ந்து பாண்டுரங்கனை நினைத்து தியானத்தில் ஆழ்ந்துவிட்டார்.

பாண்டுரங்கனின் அவதாரமான கிருஷ்ணரின் பால லீலைகலைப் பாடல்களாகப் புனைந்து பாடியபடியும் பாண்டுரங்கனை நினைத்து தியானித்தபடியும் காட்டில் காலத்தைப் போக்கினார். கணவரைக் காணாது அவரின் மனைவி கலங்கிப்போனார். அப்போது பாண்டுரங்கன் திரிலோசனதாசராக உருவெடுத்து அவருடைய வீட்டிற்கு வந்தார். அவருடைய மனைவி அவரிடம் திடீரென உங்களைக் காணவில்லையே எங்கு சென்றீர்கள் எனக் கேட்கவும் என்னிடம் கேள்வி கேட்பதைத் தவிர் என்றார் திரிலோகரின் உருவில் இருந்த பாண்டுரங்கன். மேலும் எதுவும் கேள்விகள் கேட்காமல் மௌனமாகிவிட்டார் திரிலோகரின் மனைவி. திரிலோசனாரின் வீட்டுக்கு அவரின் உருவில் வந்த பாண்டுரங்கன் மன்னரின் மகளுக்காக அழகிய நகைகளைச் செய்து முடித்தார். அது சந்திரனைப் போல் ஒளி வீசியது. அதனை அவரே அரண்மனைக்கு எடுத்துச் சென்றார். ஒளி வீசும் நகைகளைப் பார்த்த மன்னரின் கண்கள் வியப்பால் விரிந்தன. நகைகள் மிகவும் அழகு என வியந்து பாராட்டினார் மன்னர். இவ்வளவு அழகான நகைகளைச் செய்த உங்களுக்கு எவ்வளவு பொருள் தந்தாலும் தகும் எனச் சொல்லி ஒரு பை நிறைய பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினார். திரிலோசனாரின் உருவில் இருந்த பாண்டுரங்கன் பொற்காசுகளுடன் வீட்டிற்கு வந்தார். அவற்றை திரிலோசனதாசரின் மனைவியிடம் கொடுத்து பொற்காசுகளில் சிலவற்றை எடுத்துச் சென்று உணவுப் பொருட்கள் வாங்கி வந்து விருந்து தயாரிக்கும் படியும் தான் போய் பக்தர்கள் சிலபேரை விருந்துண்ண அழைத்து வருவதாகவும் சொல்லிச் சென்றார். திரிலோசனாரின் மனைவிக்கு அதிக அளவு பொற்காசுகளைப் பார்த்து அதிசயமாக இருந்தது. ஆனாலும் கணவரை ஒன்றும் கேட்கவில்லை. கணவர் சொல்லிச் சென்றது போல் விருந்து தயார் செய்தார்.

பாண்டுரங்கனும் சில பக்தர்களை உணவுண்ண அழைத்து வந்தார். தானும் அவர்களோடு அமர்ந்து உணவு உண்டார். பின்னர் விருந்தில் தயாரித்திருந்த அனைத்துப் பதார்த்தங்களையும் பொட்டலங்களாகாக் கட்டி எடுத்துக் கொண்டு திரிலோசனார் ஒளிந்திருந்த காட்டிக்கு அடியவர் வேடத்தில் வந்தார். அப்போது திரிலோசனார் கண்களை மூடி தியானத்தில் இருந்தார். அடியவர் வேடத்தில் வந்திருந்த பாண்டுரங்கன் ஐயா கொஞ்சம் விழித்துக் கொள்ளுங்கள் என்று பலமுறை வேண்டினார். திரிலோசனாரும் கண்களைத் திறந்து அடியவரை பார்த்து இந்த காட்டில் உங்களைப் பார்த்தால் வியப்பாக உள்ளது. நான் தங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். அடியவர் வேடத்தில் இருந்த பாண்டுரங்கன் இன்று இன்னாட்டின் மன்னர் மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம். மன்னரின் மகளான மணமகள் அணிய கண்டோர் வியக்கும் வண்ணம் நகைகளை பொற்கொல்லர் ஒருவர் செய்து கொடுத்திருக்கிறார். இதனால் மகிழ்ந்த மன்னர் அளவுக்கதிகமாக பொற்காசுகள் கொடுத்திருக்கிறார். அந்த பொற்கொல்லார் அடியவர்களை அழைத்து நல்லதொரு விருந்தளித்தார். அவ்விருந்தில் நானும் கலந்து கொண்டேன். திருப்தியாய் சாப்பிட்ட நான் திரும்பி வருகையில் பாதை தவறி இக்காட்டிற்குள் வந்து விட்டேன். விருந்தில் அளிக்கப்பட்ட பதார்த்தங்களை மீண்டும் பசியெடுத்தால் உண்ணலாமென கொஞ்சம் அந்த பொற்கொல்லரிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டு வந்துள்ளேன். உங்களைப் பார்த்தால் மிகவும் பசியோடு இருப்பவர் போல் தெரிகிறது. இந்தாருங்கள் இதனை நீங்கள் உண்ணுங்கள் என்று கொண்டு வந்திருந்த உணவுப் பொட்டலத்தை அளித்தார்.

பாண்டுரங்கன் வடிவில் இருந்த அடியவர் கூறிய செய்தி திரிலோசனதாசருக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. நாம் இல்லை என்பதை தெரிந்து கொண்ட மன்னர் வேறொரு பொற்கொல்லரை வைத்து நகைகளை செய்து வாங்கிக் கொண்டார். இனி நமக்கு பயமில்லை. இனி நாம் நம் வீடு திரும்பலாம் என நினத்தார். அந்த நினைப்பே அவருக்குப் பசியைத் தூண்டியது. அடியவர் அளித்த உணவை ஏற்று அதனை உண்டார் திரிலோசனார். வீட்டுக்குக் கிளம்பியவர் அந்த அடியவரிடம் சுவாமி எனக்கு உணவளித்த நீங்கள் என்னுடன் என் இல்லம் வரவேண்டும். உங்களுக்குத் தக்க மரியாதை செய்ய விரும்புகிறேன் என்றார். அடியவரின் உருவில் இருந்த பாண்டுரங்கனும் சம்மதித்தார். இருவரும் திரிலோசனாரின் இல்லம் அடைந்தனர். அடியவர் திரிலோசனாரின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்து கொள்ள திரிலோசனதாசர் உள்ளே சென்றார். வீட்டில் குவிந்து கிடந்த மளிகைப் பொருட்களைக் கண்டு வியந்த திரிலோசனார் மனைவியிடம் இவ்வளவு மளிகைப் பொருட்கள் குவிந்து கிடக்கின்றன எப்படி வந்தது என்று வியப்போடு கேட்டார். அவரின் கேள்வியில் திகைத்துப் போன மனைவி இதென்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நீங்கள் தானே நகைகளை செய்து கொடுத்ததற்காக மன்னர் அளித்த பொற்காசுகளை என்னிடம் கொடுத்து அடியவர்களுக்கு விருந்து வைக்க மளிகைப் பொருட்கள் வாங்கி வரச் சொன்னீர்கள். அவ்வாறு நானும் வாங்கி வர அடியவர்களுக்கு விருந்தும் வைத்தோமே? நீங்களும் அவ்விருந்தில் இருந்த பதார்த்தங்களைப் பொட்டலமாகக் கட்டிக் கொண்டு எங்கோ சென்றீர்களே? ஒன்றுமறியாதவர் போல கேள்வி கேட்கிறீர்களே என்றாள். மனைவி சொன்னதைக் கேட்டு வியந்து போன அவர் தன்னைக் காட்டில் சந்தித்தவரும் இதைத்தானே சொன்னார் என்று அதிசயத்தபடி வெளியே வந்து பார்த்த போது திண்ணையில் அந்த அடியவர் இல்லை. இப்போது திரிலோசனதாசருக்கு நன்கு புரிந்தது. தான் மன்னனுக்கு பயந்து காட்டில் சென்று ஓளிந்து கொண்ட போது பாண்டுரங்கனே தம் உருவில் இங்கு வந்து நகைகளைச் செய்து மன்னனிடம் கொடுத்து கூலிபெற்று அதில் மளிகை வாங்கி அடியவர்களுக்கு விருந்து படைத்துள்ளார். அவிருந்தில் அளிக்கப்பட்ட உணவினை எனக்கும் கொண்டு வந்து அளித்துள்ளார் என மிகுந்த பக்தியோடு தன்னை மறந்து பாண்டுரங்கன் மீது பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.