விஷ்வக்சேனர்

விஷ்வக்சேனர்

வைகுண்டத்தில் திருமாலுக்கு இடைவிடாது தொண்டு செய்பவர்களில் முதன்மையானவர்கள் மூவர். அனந்தன் கருடன் விஷ்வக்சேனர். துலா மாசம் பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் விஷ்வக்சேனர். இவரின் மனைவி பெயர் சூத்ரவதி. இவர் எல்லாத் திசைகளிலும் விஷ்ணுவின் படைகளுக்கு சேனைத் தலைவராக விளங்குகிறார். ஆகையால் இவர் சேனைமுதலி என்றும் சேனாதிபதி ஆழ்வான் என்றும் பெயர் பெற்றார். விஷ்ணு என்ன நினைக்கிறாரோ அதை உணர்ந்து செயல்படுத்தக்கூடிய வல்லமை வாய்ந்தவர் விஷ்வக்சேனர். இவரின் கையில் ஒரு பிரம்பு ஒன்று இருக்கும். செங்கோல் போன்ற இதை ஏந்தி தேவர்கள் முனிவர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் கின்னரர்கள் கிம்புருடர்கள் மருத கணங்கள் வித்யாதரர்கள் ஆழ்வார்கள் மற்றும் அடியார்கள் என்று விஷ்ணுவைப் தரிசிக்க வரும் கூட்டத்தை கட்டுப்படுத்துவார். நம்மாழ்வாருக்கு உபதேசம் செய்த பெருமை உடையவர். பராசர பட்டரால் வணங்கப்பட்ட பெருமைக்குரியவர். சடகோபர் இவரின் அம்சமாகவே அவதரித்தார். இத்தனை பெருமை உடையவர் விஷ்வக்சேனர்.

ஒரு முறை சலந்திரன் என்னும் அரக்கனை அழிக்க விஷ்ணுவுக்கு ஈஸ்வரன் ஒரு சக்ராயுதத்தைக் கொடுத்தார். அந்த சக்ராயுதத்தை விஷ்ணு வீரபத்திரர் மீது கோபத்தில் ஏவினார். வீரபத்திரர் கபாலங்களைக் கோத்து மாலையாக அணிந்திருப்பார். அதில் ஒரு வெண் தலை கபாலம் விஷ்ணு ஏவிய சக்ராயுதத்தை வாயை அகலமா திறந்து விழுங்கி விட்டது. சக்ராயுதத்தை இந்த வெண் தலை கபாலம் விழுங்கி விட்டதே என்று யோசனையில் ஆழ்ந்தார் விஷ்ணு. விஷ்ணு நினைத்ததும் அது விஷ்வக்சேனருக்குத் தெரிந்து விட்டது. வயிரவரின் சூலத்திலிருந்து ஒரு முறை விஷ்வக்சேனரை விஷ்ணு அந்த சக்ராயுதத்தை வைத்து காப்பாற்றி இருந்தார். ஆகையால் அந்த சக்ராயுதத்தை மீட்டு விஷ்ணுவுக்குத் தர வேண்டும் என்று விஷ்வக்சேனர் எண்ணினார்.

வீரபத்திரர் இருக்குமிடம் சென்றார் விஷ்வக்சேனர். அங்கே காவல் காத்துக் கொண்டிருந்த பானுகம்பன் என்ற காவலாளிகள் விஷ்வக்சேனரை உள்ளே விட மறுத்தார்கள். உடனே விஷ்வக்சேனர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து லிங்கத்தையே வீரபத்திரராக நினைத்து வழிபட்டார். இவரின் பக்தியைப் பார்த்த வீரபத்திரர் இவர் முன்னே தோன்றி என்ன வேண்டும் விஷ்வக்சேனா என்று கேட்டார். அதற்கு விஷ்வக்சேனர் விஷ்ணுவின் சக்ராயுதம் வேண்டும் என்றார். அதற்கு வீரபத்திரர் சக்ராயுதம் என்னிடம் இல்லை. என் கழுத்தில் மாலையாக இருக்கும் இந்த வெண் தலை கபாலம் சக்ராயுதத்தை விழுங்கி விட்டது. அது சிறிது குறும்புத்தனம் உடையது அதனிடம் கேள். அந்த வெண் மலை கபாலம் திருப்பிக் கொடுத்தால் எடுத்து செல் என்றார் வீரபத்திரர்.

விஷ்வக்சேனர் யோசனை செய்தார். சண்டையிட்டோ பிடுங்கியோ அந்த வெண் தலை கபாலத்திடமிருந்து சக்ராயுதத்தை வாங்க முடியாது. ஆகையால் அதன் வழியில் அது வழியிலேயே நாமும் குறும்புத்தனம் செய்வோம். அப்போது அது திரும்பிக் கொடுத்து விடும் என்று எண்ணினார். உடனே தன் உடம்பை அஷ்ட கோணலாக மாற்றினார். அதைப் பார்த்த மற்ற கபாலங்கள் எல்லாம் திகைத்துப் பார்த்து சிரித்தார்கள். விஷ்வக்சேனர் எதற்காக இப்படி செய்கிறார் என்பதை அறிந்த வெண் தலை கபாலம் அமைதியாக இருந்தது. திரும்ப கைகாலை முறுக்கி உடம்பை அஷ்டகோணலாக்கி ஆடி நின்றார். அப்போதும் வெண் தலை கபாலத்துக்கிட்ட லேசான சிரிப்பு மட்டுமே வந்ததே தவிர அந்த சக்ராயுதத்தை கொடுக்காமல் அமைதியாக இருந்தது. மற்ற கபாலங்கள் எல்லாம் சிரித்துக் கொண்டே இருந்தது. மூன்றாவது முறையாக விஷ்வக்சேனர் தன் முகத்தை அஷ்ட கோணலாக்கி கண் வாய் மூக்கு அனைத்தையும் அங்கேயும் இங்கேயும் திருகி அகட விகடம் செய்தார். உடனே ஒரு பெரும் சிரிப்புச் சத்தத்துடன் தன்னை மறந்த அந்த வெண் தலை கபாலம் தன் வாயில் பிடிச்சிருந்த சக்ராயுதத்தை நழுவ விட்டது. இதற்காகவே காத்துக் கொண்டிருந்த விஷ்வக்சேனர் அந்த சக்ராயுதத்தை எடுக்க விரைந்தார்.

வினாயகர் அப்போது அந்த இடத்திற்கு விரைவாக வந்து அதனை எடுத்துக் கொண்டார். வினாயகரிடம் சக்ராயுதம் சென்றதை பார்த்த விஷ்வக்சேனர் இது என்ன சோதனைன்னு மீண்டும் யோசிக்க ஆரம்பித்தார். அப்போது வினாயகர் இதே போல் எனக்காக மீண்டும் ஒரு முறை விகடக் கூத்தாடு அப்போது இந்த சக்ராயுதத்தை தருகிறேன் என்றார். விநாயகருக்காக ஒரு முறை தன் உடம்பு கைகால் முகம் கண் வாய் அனைத்தையும் அஷ்டகோணலாக்கி விகடக் கூத்தாடி அங்கிருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார் விஷ்வக்சேனர். கைதட்டி சிரித்து மகிழ்ந்த விநாயகர் அந்த சக்ராயுதத்தை விஷ்வக்சேனரிடம் கொடுத்தார். அதை எடுத்து வந்து விஷ்ணுவிடம் சமர்ப்பித்தார் விஷ்வக்சேனர். இதில் மகிழ்ந்த விஷ்ணு விஷ்வக்சேனரை சேனாதிபதியாக்கி அவரைத் தன் தலைமைத் தளபதியாக நியமித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.