சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள்

தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையில் ராமச்சந்திராபுரத்தில் 1551 ஆம் ஆண்டு பங்குனி மாதம் திருவோண நட்சத்திரத்தில் வேங்கடய்யர் பத்மாவதி தம்பதியர்க்கு மகனாகப் பிறந்தவர் தத்தாத்ரேயர். வேத பாராயணங்களை பாலகனாக இருந்த போதே கற்று தேர்ந்தார். பரமக்குடி வேதாந்த மடத்தின் ஆச்சாரியர் இலட்சுமண அய்யரிடம் அதர்வண வேதத்தை முழுமையாக பயின்றார். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் சன்னதியில் தூபக்கால் ஏந்தி பெருமாளுக்கு தூப நித்ய கைங்கர்யம் செய்து வந்ததால் இவரது இயற்பெயர் மறைந்து சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள் என்ற பெயர் நிலைத்தது. இவர் கும்பகோணம் மகாமக குளத்தை சுற்றியுள்ள 16 மண்டபங்களையும் கட்டியவர். இவரை மக்கள் ஐயன் என்று மரியாதையுடன் அழைப்பார்கள். இவரைப் போற்றி பெருமைப் படுத்தும் விதமாக ஐயன் பேட்டை (அய்யம்பேட்டை) என ஒரு ஊருக்கே பெயரிட்டு அழைத்தனர்.

இவர் வாழ்ந்த காலத்தில் தொடர்ந்து நான்கு ஆண்டு காலம் மழை பொழியாததால் கடும் வறட்சியைச் சந்தித்தது தஞ்சை பூமி. தஞ்சையை ஆண்ட அரசர் அச்சுதப்ப நாயக்கர் கவலையுடன் அரசவையைக் கூட்டி மழை வருவதற்கான யாகங்களை நடத்த வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள் என்று உத்தரவிட்டார். மிகப் பெரும் வேத விற்பன்னர்களை எல்லாம் வரவழைத்து யாகங்கள் தொடங்கப் பட்டு ஏழுநாட்கள் ஆன பிறகும் மழை வருவதற்கான அறிகுறிகளே இல்லை.
அப்போது தலைமை வேதவிற்பன்னர் அரசரிடம் சென்று திருவரங்கப் பெருமாளின் சன்னதியில் தத்தாத்ரேயர் என்கின்ற 20 வயது இளைஞர் ஒருவர் தினம்தோறும் தீப தூபங்கள் காட்டி பாடல்களைப் பாடி கைங்கர்யம் செய்து கொண்டிருக்கிறார். இந்த யாக குண்டத்திற்கு முன் அவரை வரவழைத்து பாடச் செய்தால் நம் நோக்கம் நிறைவேறும் என்று கூறினார். உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டார் மன்னர். புரோகிதர் குழு தத்தாத்ரேயரை அனுகி விபரத்தைச் சொல்லி யாகம் நடத்தும் இடத்திற்கு அழைத்தார்கள். அதற்கு அவர் மழைதானே வர வேண்டும் வரவைக்கிறேன் என்று சொல்லி யாகத்தில் வைக்கும் கலசம் போல் ஒரு கலசத்தை ஏற்பாடு செய்ய சொல்லி அந்த கும்ப கலசத்தை தலையில் வைத்துக் கொண்டு அரங்கனை நினைத்து காவிரி ஆற்றில் நின்று வருண ஜபம் செய்து காவிரி ஆற்றில் நின்ற நிலையில் மேகராகக் குறிஞ்சி ராகத்தில் அரங்கனை மனதில் நிறுத்தி வருணனை நோக்கி மனம் உருகிப் பாட ஆரம்பித்தார். காலை வேளையில் தொடங்கிய அந்த நிகழ்வை புரோகிதர்கள் உள்ளிட்ட மக்கள் திரண்டு வந்து பார்த்தார்கள். மாலைப் பொழுது வந்ததும் மேகக் கூட்டம் திரண்டது. மக்கள் மகிழ்ச்சியில் ஆரவரித்தார்கள். மழை பெய்யத் தொடங்கியதும் கரைக்கு வந்தார் தத்தாத்ரேயர். மழை மாமழையாக மாறி மூன்று நாட்கள் இடைவிடாது பெய்தது. தஞ்சையைச் சுற்றி உள்ள ஏரி குளம் கிணறு என அனைத்துமே மழை நீரில் நிரம்பியது. இனியும் மழை தொடர்ந்தால் நாட்டிற்கே கேடாக முடியம் என்று எண்ணிய மக்கள் மீண்டும் தத்தாத்ரேயரை வணங்கி மழை போதும் என்று கேட்டுக் கொண்டார்கள். தத்தாத்ரேயர் மீண்டும் பாடலைப் பாடி மழைப் பொழிவினை நிறைவு செய்தார்.

தஞ்சை மன்னர் தத்தாத்ரேயரை அழைத்து அரச மரியாதையைச் செய்து தங்கக்காசுகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை வழங்கினார். அனைத்தையும் புன்னகையுடன் மறுத்து அங்கிருந்து கிளம்பினார். அப்போது அரசர் தான் அணிந்திருந்த ரத்தின மாலையை அவரது கழுத்தில் போட்டு மறுக்காமல் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொண்டார். அவரது அன்புக் கட்டளைக்காக அதனை ஏற்றுக் கொண்ட தத்தாத்ரேயர் நேராக திருவரங்கக் கோயிலுக்கு வந்து மன்னர் அணிவித்த ரத்னமாலையை அரங்கனுக்கு அணிவிக்க அர்ச்சகரிடம் வழங்கினார். இதையறிந்த மன்னர் ஒருநாள் திருவரங்கக் கோயிலுக்கு வந்து என்னிடமிருந்து எந்தப் பொருளையும் பெற்றுக் கொள்ளாத தத்தாத்ரேயர் அவர்களுக்கு முதல் மரியாதையாக அதிகாலையில் வழங்கப்படும் பிரம்ம துளசி தீர்த்தத்தை வழங்க வேண்டும் என்றும் தத்தாத்ரேயர் காலத்திற்குப் பிறகு அதிகாலை வேளையில் அரங்கனின் விசுவரூப தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் அவருடைய வம்சத்தினர் யாரேனும் இருந்தால் அவர்களுக்குத்தான் முதல் தீர்த்தம் வழங்கப்பட வேண்டும் என்று பட்டயம் எழுதி மன்னர் ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்திற்கு வழங்கினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.