கோத பரமேஸ்வரர் திருக்கோயில் 4

மூலவர் கோதபரமேஸ்வரர் கைலாசநாதர் திருநாகீசர். லிங்க வடிவில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோத என்றால் சமஸ்கிருதத்தில் பசு என்று பொருள். பசு இறைவனை வெளிப்படுத்தியதால் கோத பரமேஸ்வரர் என்று பெயர் பெற்றார். சிவலிங்கத்தில் நாக வடிவில் ராகு இருக்கிறார். அம்பாள் சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் காட்சி தருகிறாள். தலவிருட்சம் வில்வ மரம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர். புராண பெயர் திருநாங்கீசநேரி சங்காணி. காணி என்றால் நிலம் என்றும் செங்காணி என்றால் செம்மண் நிறைந்த நிலம் என்றும் பொருள். செங்காணி என்பதே பின்னர் சங்காணி என்று மறுவியது. மேலும் இந்தப் பகுதியில் சிறு சிறு குன்றுகள் சூழ்ந்து இருப்பதால் குன்றத்தூர் என்ற பெயர் பெற்று பின்னர் குன்னத்தூராக மறுவியது. முற்காலத்தில் இந்த ஊர் கீழவேம்புநாட்டு செங்காணியான நவணி நாராயண சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

தாமிரபரணி ஆற்றின் கரையில் குன்றுகள் நிறைந்த நிலப்பகுதியில் இக்கோயில் அமையப் பெற்றுள்ளது. இங்குத் தனி விமானத்துடன் கூடிய  கிழக்கு நோக்கிய தனி சந்நிதியில் சுவாமியும் தனி விமானத்துடன் கூடிய தெற்கு நோக்கிய சந்நிதியில்  அம்மையும் காட்சி தருகிறார்கள். சுற்றுப் பிரகாரத்தில் நந்தி தட்சணாமூர்த்தி கன்னிமூலகணபதி வள்ளி தெய்வானை உடன் ஆறுமுகநயினார் என்னும் நாகசுப்ரமணியர் உள்ளார். இவரின் சிலையில் இருந்து சப்த ஸ்வரங்களும் எழும் விதமாய் வடிக்கப்பட்டுள்ளது. சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் உள்ளார்கள். முன் மண்டபம் அர்த்த மண்டபம் நடு மண்டபம் என்ற மூன்று மண்டபங்கள் உள்ளன. இங்குச் சுவாமிக்கு எதிரே உள்ள நந்தி பக்தர்களுக்கு ஆபத்து வரும் வேளையில் அவர்களை ஆபத்திலிருந்து மீட்பதற்குத்  தயாராக உள்ளார் என்பது போல கால்களை தூக்கி எழும்புவதற்கு தயாராக இருப்பது போல் உள்ளார்.

ஒரு காலத்தில் குன்னத்தூரில் வாழ்ந்து வந்த அரசன் தங்கியிருக்கும் இடம் அருகே ஒரு அதிசய மரம் இருந்தது. அந்த மரத்தில் ஒரு ஆண்டில் ஒரு பூ பூத்து ஒரு பழம் மட்டுமே பழுக்கும். அந்த அதிசய கனியை அரசன் மட்டுமே உண்ணுவான். ஏனெனில் பழத்தை உண்பவருக்கு நித்திய இளமையையும் வலிமையையும் தரும். ஆகவே அரசன் மரத்தைப் பாதுகாப்பதில் சிறப்பு கவனம் செலுத்தி வந்தான். ஒரு முறை அந்த மரத்தின் பக்கமாக தண்ணீர் எடுத்து சென்ற ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் குடத்தில் மரத்தில் பழுத்திருந்த பழம் விழுந்து விட்டது. இதை அறியாத பெண் வீட்டிற்கு சென்று விட்டாள். மரத்தில் பழத்தை காணாத அரசன் காவலர்களை அனுப்பி வீடு வீடாக பழத்தை தேடச் சொன்னான். கர்ப்பிணிப்பெண் வீட்டில் இருந்த பழத்தை கண்ட காவலர்கள் மன்னனிடம் அழைத்துச் சென்றார்கள். விசாரணை ஒன்றும் செய்யாமல் அரசன் அவளை கழுவேற்ற மன்னன் உத்தரவிட்டான். தான் நிரபராதி என்று எவ்வளவு சொல்லியும் அவளது பேச்சை யாரும் கேட்கவில்லை. அந்த பெண் இறக்கும் தருவாயில் நீதியற்ற இவ்வூரில் நீதி தளைக்கும் வரை பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் தவிர மற்றவை அழியட்டும் என சாபமிட்டாள். பின்னர் அவளின் சாபத்தின் படியே காலப் போக்கில் ஆண்கள் யாரும் அந்த ஊரில் இல்லாமல் போனார்கள். பின்னர் ஆண்கள் இல்லாததால் பெண்களும் அவ்வூரை விட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். அவள் சாபத்தின்படி அந்தப் பகுதியில் பசுக்கள் தவிர அனைத்தும் பாம்புகளால் அழியத் தொடங்கியது. நாளாக நாளாகப் பாம்புகள் பெருகின. அந்த ஊரில் எஞ்சி இருந்த பெண்களை திருமணம் செய்யவும் யாரும் முன்வரவில்லை. அனைவரும் யோசித்து ஈசனை நினைத்துப் பிரார்த்தித்து வழிபாடுகள் செய்ய ஆரம்பித்தார்கள். இவர்களின் பக்தியை இறைவன் ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு சாப நிவர்த்தி கொடுத்து அருள விரும்பினார். ஆகவே உரோமச முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட சிவலிங்கத்தை வெளிப்படுத்த எண்ணினார். இதனால் பாம்புகள் சூழ்ந்திருந்த மண் புற்றுக்கு மேல் அங்கு மேய்ந்து கொண்டிருந்த பசுக் கூட்டங்கள் சென்று மறைந்திருந்த இறைவன் மீது தானாகப் பாலை சொரிந்தன. அதனை கண்ட பசுவை மேய்ப்பவர்கள் இந்தச் செயலை பாண்டிய மன்னரிடம் தெரிவித்தார்கள். மன்னரும் அங்கு வந்து அந்த அதிசயத்தை  நேரில் கண்டு மகிழ்ந்தார். சிவபெருமானுக்கு கம்பீரமான கோவில் ஒன்றை எழுப்ப எண்ணினார். உடனடியாக அந்தப் பகுதியைச் சுத்தம் செய்து இறைவனுக்கு முறையான கோயில் கட்ட உத்தரவிட்டார். இச்செயல் இறைவனின் அருளால் கர்ப்பிணிப் பெண்ணின் சாபத்தை நிராகரிக்க முடிந்தது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நான்காவது மலர் கரை ஒதுங்கிய இடம் குன்னத்தூர். நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் நான்காவதான இக்கோயில் இராகுவுக்கு உரியது. இராகு தலம் என்றும் இராகு கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

இந்தக் கோவிலின் அருகே கீழத்திருவேங்கடநாதபுரம்  வரதராஜ பெருமாள் கோவிலும் சற்று தொலைவில் சிறிய மலைக்குன்றின் மீது மேலத்திரு வெங்கட நாத புரம் கோவில் கோவிலும் உள்ளது. இங்குள்ள கல்வெட்டுக்கள் மூலம் இந்தக் கோவில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. இந்தக் கோவில் பூஜைகள் முறையாக நடைபெற வீரபாண்டிய மன்னன் 4200 ரூபாய் மதிப்புடைய பணம் கொடுத்துள்ளது கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்தக் கோவிலில் நில அளவுகோல் ஒன்று உள்ளது. இது ஊரில் ஏற்படும் நிலம் சம்மந்தமான பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் கல்வெட்டில் குறிக்கப்பட்டு உள்ளது. திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் திருக்கோயிலில் பாதுகாக்கப் பட்டுவரும் செப்பேடு ஒன்றில் இந்தத் திருத்தலத்தின் பெயர் திருநாங்கீசநேரி என்றும் இங்குள்ள இறைவனின் பெயர் திருநாகீசர் என்றும் அழைக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பிடப்பட்டு உள்ளது.

கைலாசநாதர் திருக்கோயில் 5

மூலவர் கைலாசநாதர். லிங்க வடிவில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்திய படியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படி நின்ற கோலத்தில் புன்சிரிப்புடன் காட்சி தருகிறாள். தீர்த்தம் தட்சிணகங்கை. ஊர் திருநெல்வெலி அருகே முறப்பநாடு. சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் முறையிட்ட நாடு என்று பெயர் பெற்று பின்னர் அது முறப்பநாடு என மறுவியதாகவும் முறம்பு என்ற தடித்த கல் வகைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்ததால் முறம்ப நாடு என அழைக்கப்பட்டு பின்னர் முறப்ப நாடாக மறுவியதாகவும் முற்காலத்தில் இங்கு வாழ்ந்த பெண்ணொருத்தி தன் வீட்டு முற்றத்திற்கு வந்த புலியை முறத்தால் அடித்து விரட்டியதால் முறப்பநாடு என்ற பெயர் வந்ததாகவும் மூன்று வகை பெயர்க் காரணங்கள் கூறப்படுகின்றன. புராண பெயர் கோவில்பத்து. தலமரம் பலாமரம். தீர்த்தம் தாமிரபரணி. இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. சோழ மன்னன் மகளின் குதிரை முகமாக பிறந்தது. அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக் கொண்டதால் இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக தலவரலாறு உள்ளது. இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலம் நடுகைலாயம் என்று பெயர் பெற்றது. அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு இறைவன் இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார். இக்கோயிலில் சிவபெருமானே  தட்சிணா மூர்த்தியாகத் தென் திசை நோக்கி  வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.

கோயில் உள்ளே நுழைந்தவுடன் பத்து தூண்களை கொண்ட பந்தல் மண்டபம் உள்ளது. அங்குக் கொடிமரம் பலிப்படம் நந்தி ஆகியவை உள்ளன. அதனை தாண்டி அர்த்த மண்டபமும் அதனை தாண்டிக் கிழக்கு நோக்கிய சுவாமி கைலாசநாதர் கருவறை உள்ளது. வெளியே தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை காட்சி தருகிறாள். கோவிலின் உள்சுற்று பிரகாரத்தில் முறையே அதிகார நந்தி சூரியன் ஜுர தேவர் நால்வர் அறுபத்து மூவர்கள் தெற்கு திசை நோக்கிய தட்சணாமூர்த்தி பஞ்ச லிங்கங்கள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் கஜலட்சுமி சனீஸ்வரர் சண்டிகேஸ்வரர் நடராஜர் சிவகாமி அம்மை சந்திர பகவான் ஆகியோர் பரிவார மூர்த்திகளாகக் காட்சி தருகின்றார்கள். கன்னிமூலை விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். நாய் வாகனத்துடன் காட்சி தருபவர் கால பைரவர். வாகனம் இல்லாதவர் வீர பைரவர். கோயிலுக்கு எதிரே ஆற்றின் மறு கரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது.

முற்காலத்தில் வாழ்ந்த சோழநாட்டு மன்னன் ஒருவனுக்கு முன்வினை பயனால் குதிரையின் முகம் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் அந்த நிலைமையைக் கண்டு வருந்திய மன்னன்  பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அவனுடைய தூய பக்திக்கு இறங்கி அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் அவனது கனவில் தோன்றி இந்த முறப்பநாடு ஸ்தலத்திற்கு சென்று இங்குள்ள தாமிரபரணியில் நீராடி இங்கு லிங்க வடிவிலுள்ள தன்னை வணங்கிடுமாறு கூறினார். அதன் படியே மன்னனும் தன்  மகளை அழைத்துக் கொண்டு இங்கு வந்து தாமிரபரணியில் நீராடி இறைவனை வணங்க மன்னரின் மகளுக்கு இருந்த குதிரை முகம் மறைந்து சுய முகம் தோன்றியது. இதனால் மகிழ்ந்த சோழ மன்னன் லிங்க வடிவிலுள்ள சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். வல்லாள மகராஜா இக் கோயிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தான். நவகைலாய தலங்களில் ஐந்தாவதான இக்கோயில் நவக்கிரகங்களில் குருவிற்குரிய தலமாக விளங்குகிறது. நவகைலாயங்களில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதே போல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை தட்சிணகங்கை என்று பெயர் பெற்றது. இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் ஐந்தாவதான இக்கோயில் குருவுக்கு உரியது. குரு தலம் என்றும் குரு கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது. இந்தக் கைலாசநாதரை மிருகண்டு மகரிஷி மார்க்கண்டேயன் மற்றும் காஞ்சனமாலை ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.

கைலாசநாதர் திருக்கோயில் 6

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கிய கருவறையில் லிங்க வடிவில் சனிபகவானின் அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். இறைவி சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியபடியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் காட்சி தருகிறாள். தீர்த்தம் தாமிரபரணி. தலவிருட்சம் இலுப்பை. சிவன் சன்னதி எதிரிலுள்ள நந்தியை சுற்றிலும் 108 விளக்குகள் உள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சனீஸ்வரருக்கு தனிச்சன்னதி இருக்கிறது. கோயில் இருக்கும் ஊரில் 108 திருப்பதிகளில் ஒன்றான கள்ளபிரான் கோயிலும் அமைந்துள்ளது. திருமாலும் திருமகளும் இத்தலத்தில் தங்கியிருப்பதால் இவ்விடம் ஸ்ரீவைகுண்டம் என்றழைக்கப்படுகிறது. வைகுதல் என்றால் தங்குதல் என பொருள். இது நவதிருப்பதிகளில் சூரியனுக்குரிய தலமாகும். ஊமையாகப் பிறந்து திருச்செந்தூர் முருகன் அருளால் பேசும் சக்தி பெற்ற குமரகுருபர சுவாமிகள் இவ்வூரில்தான் அவதரித்தார்.

கோயில் மூன்று பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கோயிலுக்கு உள்ளே சென்றால் நந்தி கொடிமரம் பலிபீடம் ஆகியவை அமையப் பெற்றுள்ளன. வெளிப்பிரகாரம் முழுவதும் வில்வம் வேம்பு தென்னை வன்னி போன்ற மரங்களும் அரளி நந்தியாவட்டை திருநீற்று பச்சிலை போன்ற செடிகளும் வளர்ந்து நந்தவனமாகக் காட்சியளிக்கிறது. உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களாக முறையே அதிகார நந்தி சூரியன் நால்வர் சுரதேவர் சப்தமாதர்கள் அறுபத்து மூவர் தட்சணாமூர்த்தி கன்னிமூலை கணபதி பஞ்ச லிங்கங்கள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் மகாலட்சுமி துர்கை சண்டிகேஸ்வரர் சந்திரன் பைரவர் காசி விஸ்வநாதர் விசாலாட்சி ஆகியோர் காட்சி தருகிறார்கள். இத்தலத்திலுள்ள நடராஜர் சந்தன சபாபதி என அழைக்கப்படுகிறார். நவ கைலாய தலங்கள் உருவாவதற்கு காரணமாக இருந்த உரோமச முனிவர் மற்றும் நடராஜர் அக்னிபத்திரர் வீரபத்திரர் ஆகியோரின் சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

கோயில் கொடிமரம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் இருந்து கொண்டு வரப்பட்டதாகும். கோவிலின் உட்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தின் மேற்கூரையில் நவ கைலாயங்களைப் பற்றிய செய்திகளும் படங்களும் மூலிகைகளைக் கொண்டு படமாக வரைந்து வைக்கப்பட்டுள்ளது. கோயிலைச் சுற்றி ஒரு கருங்கல் சுவர் அதன் அனைத்து சன்னதிகளையும் சூழ்ந்துள்ளது. மற்ற தென்னிந்தியக் கோயில்களைப் போலல்லாமல் பிரமிடு வடிவ நுழைவுக் கோபுரத்தைக் கொண்ட கோவிலானது தட்டையான நுழைவாயில் கோபுரத்தைக் கொண்டுள்ளது. இங்கு யானை மற்றும் யாளியின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. யாளியின் வாய்க்குள் உருளும் வகையில் உருளை வடிவிலான கல் பந்து ஒன்று உள்ளது. இந்தப் பந்தை நம் கைகளால் உருட்ட முடியும். ஆனால் அதன் வாயில் இருந்து வெளியே எடுக்க முடியாது. இது பண்டைய காலத்து சிற்பக் கலைக்கு சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது.

கோயிலில் பூதநாதர் காவல் தெய்வமாக அருள்பாலிக்கிறார். இச்சிலை மரத்தால் செய்யப்பட்டது. ஆகவே இவருக்கு அபிஷேகம் கிடையாது. சந்தனாதி தைலம் மட்டுமே தடவப்படுகிறது. முற்காலத்தில் இக்கோயிலை பூட்டி சாவியை அர்ச்சகர்கள் பூதநாதர் முன்பாகவே ஒப்படைத்துவிட்டு செல்வார்கள். சித்திரைத் திருவிழாவின் போது முதலில் இவருக்கே முதல் மரியாதை செய்யப்படுகிறது. இவர் சாஸ்தாவின் அம்சமாக கருதப்படுகிறார். இக் கோவிலில் உள்ள பூத வாகனம் பரிவார தெய்வமாக வணங்கப்படுகிறது. 3ம் நாள் விழாவின் போது இவர் மீது சுவாமி எழுந்தருளுகிறார். இந்தப் பூத வாகனம் திருநெல்வேலி அருகே உள்ள செப்பறை நெல்லையப்பர் கோவிலுக்குச் சொந்தமானது என்றும் முற்காலத்தில் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ள பெருக்கினால் செப்பறை பழைய கோவில் சிதிலமடைந்து அங்கிருந்த பொருட்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் அங்கிருந்து ஆற்றில்  அடித்துக் கொண்டு வரப்பட்ட பூத வாகனமே இங்குள்ள பூதநாதர் என்று செப்பறை மஹாத்மியம் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பூத நாதர் திருநெல்வேலி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சங்கிலி பூதத்தாரின் அம்சமாக இங்கு வணங்கப்படுகிறார்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஆறாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் ஆறாவது இக்கோயில் ஆறாவது கிரகமான சனிபகவானுக்கு உரியது. சனிபகவான் தலம் என்றும் சனிஸ்வர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

கோயிலில் கல்வெட்டுகள் அதிக அளவில் உள்ளன. கோயிலின் தல வரலாறு கோயிலுக்குரிய இடங்கள் அதன் அமைப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் இக்கல்வெட்டுகளில் இடம் பெற்றுள்ளன. இதில் இக்கோயிலை கட்டிய குலசேகரபாண்டிய மன்னனின் வரலாறு கோயில்களுக்கு மன்னர்கள் காலத்தில் தானமாக வழங்கப்பட்ட நிலங்கள் கோயிலின் விழாக் காலங்கள் முக்கிய திருவிழா போன்ற தகவல்கள் உள்ளது. இக்கோயில் முதலில் 13 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் சந்திரகுல பாண்டியனால் கட்டப்பட்டது. இங்குள்ள கல்வெட்டுகளில் இக்கோயிலின் விமானங்களையும் மண்டபங்களையும் மதுரை சந்திரகுல பாண்டியன் கட்டினார். கோயில் 16 ஆம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தினர் மற்றும் நாயக்கர்களால் அடுத்தடுத்து புதுப்பிக்கப்பட்டது. மதுரை நாயக்கர் வம்சத்தின் ஆட்சியாளரான வீரப்ப நாயக்கர் கிபி 1609-23 யாகசாலை கொடிமரம் மற்றும் சந்தன சபாபதி மண்டபம் கட்டினார். கோவிலில் உள்ள பல சிற்பங்கள் பெரிய மொட்டை கோபுரம் ஆகியவற்றை திருமலை நாயக்கர் கட்டினார். வேள்விச்சாலை சந்தன சபாபதி மண்டபம் கொடி மரம் அதன் கீழ் அமைந்திருக்கும் பத்தி மண்டபம் ஆகியவற்றை வீரப்ப நயக்கர் கட்டினார்.

கைலாசநாதர் திருக்கோயில் 7

மூலவர் கைலாசநாதர். தாமரை வடிவ பீடத்தின் மீது லிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மை. ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறாள். அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் விருட்சதீர்த்தம் தாமிரபரணி. ஊர் தென்திருப்பேரை. பெரிய கோட்டை இருக்கும் ஊரை பேரை என சொல்வார்கள். இவ்வூர் தமிழகத்தின் தெற்கே பெரிய கோட்டை போல் இருப்பதால் தென்திருப்பேரை என்று பெயர் பெற்றது. நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரையாகும். இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன் சந்திரன் குருபகவான் சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். குருவும் சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும் சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இவ்வூரில் உள்ள மகர நெடுங்குழைக்காதர் (பெருமாள்) கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோயில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. இந்தக் கோவிலில் உறையும் தாயார் திருப்பேரை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெயரால் தென்திருப்பேரை என்றும் அழைக்கப்படுகிறது. மழைக் கடவுளான வருண பகவான் இங்கு இறைவனை வழிபட்டதால் இந்தத் தலம் வருண ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.

தாமிரபரணி ஆற்றின் தெற்கு கரையோரம் அமையப்பெற்றுள்ள இந்தக் கோவிலுக்குள் நுழையத் தெற்கு வாயிலே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுற்று பிரகாரத்தில் நந்தி விநாயகர் தட்சிணாமூர்த்தி சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் நடராஜர் சிவகாமி அம்மை பைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாகக் காட்சி தருகிறார்கள். வல்லப விநாயகர் சக்தி விநாயகர் கன்னிமூல கணபதி சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்கள் உள்ளார்கள். இக்கோயிலில் கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்து இறைவன் வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால் பைரவருடன் நாய் வாகனம் இல்லை. பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனைப் போல வலது கையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார். இவருடன் வள்ளி தெய்வானை இருக்கின்றனர். சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.

அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர் ஒரு தென்னந் தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி அந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தர முடியாது என சொல்லி விட்டார். கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம் இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சு போடு என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்ட முடியாமல் ஒரு இளநீரை பறித்துப் போட்டார். அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்த தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்து விட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் புதன் பகவானுக்கு உரியது. புதன் பகவான் தலம் என்றும் புதன் கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

கோவிலில் உள்ள சுவர்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூணில் முதலாம் குலோத்துங்கனின் கிபி 1109 ஆண்டு கல்வெட்டு உள்ளது. இதில் ராஜராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டுத் திருவழுதி வளநாட்டு தென்திருப்பேர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வீரகேரளவர்மன் கல்வெட்டில் திருவழுதி வளநாட்டு திருப்பேரான சுந்தரபாண்டியச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகைலாசமுடையார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளும் உள்ளன.

கைலாசநாதர் திருக்கோயில் 8

மூலவர் கைலாச நாதர் லிங்க உருவத்தின் நான்கு புறங்களிலும் நான்கு சக்ர வடிவங்கள் உள்ளன. சிவனுக்கு ஆஷூதோஷ என்ற திருநாமமும் உண்டு. அதன் பொருள் எதை விரும்பி சிவனிடம் கேட்கிறோமோ அதை முழு மனதுடன் ஆனந்தமாக வழங்குவார் என்பதாகும். அம்பாள் சவுந்திர நாயகி சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் சௌந்தரிய நாயகி அம்பாள் ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்னகை பூத்த முகத்தவளாகக் அருளுகிறாள். சிவனின் வாகனமான நந்தி பிரதான சன்னதியின் முன் பிரதோஷ நந்தி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். ஊர் இராஜபதி. தலமரம் நெல்லி. தீர்த்தம் பாலாவி. இறைவனுக்கு இங்கு சிவனுக்கு ஈசானம் தத்புருஷம் வாமதேவம் சத்யோஜாதம் அகோரம் என 5 முகங்கள் இருப்பதினால் சிவனைச் சுற்றிலும் பஞ்ச தீபாராதனை காட்டுகின்றனர். பொதுவாக சிவன் கோயில்களில் நவகிரக சன்னதி இருக்கும். இங்கு நவ லிங்க சன்னதி அமைக்கப்பட்டுள்ளது. இத்தலம் நவகைலாயங்களில் கேது தலமாகும். காளஹஸ்திக்கு இணையான தலம் என்பதால் இதை தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது.

கோயில் நுழைவு முன் மண்டபத்தில் அதிகார நந்தியும் எதிரே பைரவரும் வீற்றிருக்கின்றனர். விநாயகர் 63 நாயன்மார்கள் ஆதிகைலாசநாதர் காளத்தீஸ்வரர் வள்ளி தெய்வயானை சமேத முருகன் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். கைலாச நாதர் அம்பாள் நித்ய அக்னி எனப்படும் விநாயகர் ஆகிய மூவருக்கு மட்டும் மூன்று கலசங்கள் வைத்து தினசரி யாகம் நடத்தி பூஜைகளும் ஆராதனைகளும் நடக்கிறது. சுமார் 4 1/2 அடி உயரத்தில் கண்ணப்ப நாயனாருக்கு தனிச் சன்னதி உள்ளது. இவருக்கு மிருகசீரிட நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் இங்கு நடந்து வருகின்றன. நவகிரகத்தில் எந்த கிரக தோஷம் இருக்கிறதோ அந்த கிரக லிங்கத்திற்கு பக்தர்களே தங்கள் கைகளால் அபிஷேகம் பூஜை செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் கேது பகவானுக்கு உரியது. கேது பகவான் தலம் என்றும் கேது கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

உரோமச முனிவர் மிதக்க விடப்பட்ட தாமரை மலர்களில் எட்டாவது மலர் மதுரை சந்திரகுல பாண்டிய மன்னரின் அரண்மனை இருந்த இப்பகுதியில் ஓதுங்கியது. ராஜாவின் அரண்மனை இங்கு இருந்ததால் இவ்வூர் இராஜபதி எனப் பெயர் பெற்றது. அங்கே சிவலிங்கத்தை நிறுவி பூஜை செய்தார். பின் அந்த இடத்தில் சந்திரகுல பாண்டிய மன்னன் கோயில் எழுப்பினார். அக்காலத்தில் அரசர்கள் இத்தல ஈசனை வணங்கிய பின் போரில் வெற்றி பெற்றதாக தல வரலாறு கூறுகிறது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தில் இக்கோயில் அழிந்து போனது. இங்கிருந்த நந்தி விக்கிரகம் தற்போது ஓட்டப்பிடாரம் என்னும் ஊரில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அழிந்த கோயிலைப் பற்றிய தாக்கம் நீண்ட நாட்களாக அப்பகுதி சிவனடியார்கள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. சிவனடியார்கள் ஒன்று கூடி சிறப்பான ஓர் கோயிலை அந்த இடத்திலேயே எழுப்புவதற்கு முடிவெடுத்து அதற்கென ஒரு குழுவை அமைத்தனர். சிவனடியார்களின் பெருமுயற்சியாலும் பங்களிப்புடனும் அழிந்து போன இப் புனித ஸ்தலம் 2008 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி அழகிய வடிவமைப்பில் கட்டப் பெற்றுள்ளது. இதன் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. இத்தனை பெருமைகளைக் கொண்ட இந்த சிவன் கோயிலிற்கு ஆரம்பத்தில் ராஜகோபுரம் இல்லாமல் இருந்தது. பின்பு 7 நிலை ராஜ கோபுரம் கட்டப்பட்டு 14.06.19 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கைலாசநாதர் திருகோயில் 9

மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கிய சன்னதியில் லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார். அம்பாள் சௌவுந்தர்ய நாயகி. புன்னகை காட்டும் முகத்துடன் நின்ற கோலத்தில் தனது ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்க விட்ட படியும் காட்சி தருகிறாள். தலமரம் வில்வ மரம். தீர்த்தம் தாமிர புஷ்கரணி. ஊர் சேர்ந்தபூமங்கலம். நவ கைலாயத்தில் இது சுக்கிரனுக்குரிய தலமாகும். பொதிகை மலையில் தோன்றிய தாமிரபரணி பாபநாசத்தை முதல் திருத்தலமாகக் கொண்டும் கடலில் சங்கமிக்கும் சேர்ந்தபூமங்கலத்தை இறுதித் தலமாக கொண்டும் விளங்குகிறது. தாமிரபரணியின் நீரில் ஒன்பது மலர்களை மிதக்க வைத்தார். ஒன்பதாவது மலர் சேர்ந்த இடமாகையால் சேர்ந்த பூ மங்கலம் என்று பெயர் பெற்றது. இதன் பொருள் மலர் பயணத்தை முடித்த இடம் என்பதாகும். ஒரு நதி கடலுடன் சங்கமிக்கும் இடம் மங்கலம் என்று அழைக்கப்படுகிறது. 

கிழக்கு திசை நோக்கி அமையப்பெற்ற இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்தஉடன் பலிபீடம் கொடிமரம் நந்தி ஆகியவை காட்சித் தருகின்றன. அவற்றை தரிசித்து உள்ளே நுழைந்தால் இடப்புறம் வடக்கு நோக்கிக் காட்சித் தரும் அதிகார நந்தியை தரிசிக்கலாம். பிரகாரத்தில் பரிவார முர்த்திகளாகச் சூரியன் சந்திரன் நால்வர் சுரதேவர் சப்த கன்னியர் அறுபத்து மூன்று நாயன்மார்கள் தட்சிணாமூர்த்தி விநாயகர் மீனாட்சி சொக்கநாதர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் துர்க்கை மகாலட்சுமி சரஸ்வதி நடராஜர் சிவகாமி பைரவர் நவலிங்கங்கள் சனீஸ்வரர் மற்றும் நவக்கிரக சன்னிதி உள்ளது. கருவறைக்கு மேலே உள்ள விமானத்தில் யானை மீது குபேரனின் சிலை அவரது இரு துணைவியார்களான சங்கநிதி மற்றும் பத்மநிதியுடன் செதுக்கப்பட்டுள்ளது. 

அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் சுக்கிர பகவானுக்கு உரியது. சுக்கிர பகவான் தலம் என்றும் சுக்கிர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.

அகத்தியரின் வழிகாட்டுதலின் படி 9 இடங்களில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்ட உரோமச முனிவர் தாமிரபரணி கடலில் சங்கமிக்கும் சங்கு முகத்தில் நீராடி வழிபட்டார். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவபெருமான் முனிவரின் முன்பாக தோன்றி முனிவரின் விருப்பப்படியே முக்தி அளித்து அருளினார். இந்த ஆலயத்தை முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கட்டியுள்ளான்.

அருள்மிகு சுருளிவேலப்பர் திருக்கோயில்

தேனி மாவட்டத்தில் உள்ள சுருளியில் இக்கோவில் உள்ளது. பொதிகை மலையும் சதுரகிரி மலையும் இணைந்த மேற்குத் தொடர்ச்சி மலைப்பிரிவுகளில் சுருளி மலை அமைந்துள்ளது. புராண பெயர் சுருதிமலை. மூலவர் சுருளிவேலப்பர் மற்றும் சுருளி ஆண்டவர். உற்சவர் வேலப்பர். தீர்த்தம் சுரபி தீர்த்தம் சுருளி தீர்த்தம். இத்தலத்தில் இனிய சுருதியுடன் அருவி கொட்டுவதால் சுருதி எனப்பட்ட தீர்த்தம் சுருளி என மருவியது. முருகனுக்கும் சுருளி வேலப்பர் என்ற பெயர் ஏற்பட்டது. ஆண்டிக் கோலத்தில் இருப்பதால் இவர் சுருளியாண்டி என்றும் அழைக்கப்படுகிறார். சுருளி வேலப்பர் மலையில் இயற்கையாகத் தோன்றிய குடவரை சன்னதியில் காட்சி தருகிறார். அருகில் விநாயகர் மகாலிங்கம் சந்தான கிருஷ்ணர் வீரபாகு ராமபிரான் லட்சுமணன் உள்ளனர். முருகன் குடிகொண்டதால் நெடுவேள்குன்றம் என்றழைக்கப்படும் இம்மலையில் அனைத்து தெய்வங்களும் வசிக்கின்றனர் என்பதலால் அனைவருக்கும் தனி சிலைகள் உள்ளன. இங்கு பூதநாராயணப்பெருமாள் கோயிலும் இருக்கிறது. பெருமாள் சன்னதிக்குள் சிவலிங்கம் இருக்கிறது. இதனால் இங்கு விபூதி குங்குமமும் தருகிறார்கள். சடாரி ஆசிர்வாதமும் செய்கிறார்கள். உச்சிக் கால பூஜையின் போது துளசி தீர்த்தம் தருகின்றனர். இக்கோயிலில் பெருமாளுக்கு பரிவார மூர்த்தியாக நரசிம்மரும் சிவனுக்கு தட்சிணாமூர்த்தியும் இருக்கின்றனர். இவர் இடது கையில் சின்முத்திரையுடன் காட்சியளிக்கிறார்.

சுருளியாண்டவர் சந்நதியில் கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள இமயகிரி சித்தர் குகை மிகவும் பிரசித்தி பெற்றது. இமயமலையில் வாழ்ந்த சித்தர் ஒருவர் சுருளி மலையில் தங்கி தவமியற்றி சிவபெருமான் தரிசனம் பெற்றார். இந்த குகையில் சிவலிங்கம் ஒன்றைப் பிரதிஷ்டை செய்துள்ளார். இது இமயகிரி சித்தர் குகை என்று அழைக்கப்படுகிறது. இங்கு ஒருவர் மட்டும் படுத்துக் கொண்டு போகக் கூடிய இந்தக் குகையில் சிறிது தூரம் தவழ்ந்து சென்றதுமே குகையின் உள்ளே பெரிய அறை போன்ற அமைப்பு உள்ளது. சுருளி ஆண்டவர் சன்னதியின் மேற்பாகத்தில் மரத்தின் வேர்களைப் பிடித்து மேலே சென்றால் அங்கு ஆகாசகங்கை வரும் வழியில் பல குகைகளைக் காணலாம். கோயில் உள்ள மலையில் கைலாச குகை என்ற ஒரு குகை உள்ளது. இந்த குகையில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி கொடுத்தபடியால் இந்த குகை கையிலாச குகை என்று அழைக்கப்படுகிறது. சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலைக்குச் சென்று விட வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்தது. இதனால் உலகு சம நிலையை இழக்க சிவன் தென் பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அனுப்பி உலகை சமப்படுத்தினார். பின் இங்குள்ள குகையில் அகத்தியருக்கு மணக் கோலத்தில் சிவன் காட்சியளித்தார். இக்குகை தவிர விபூதிக் குகை சர்ப்பக் குகை பாட்டையா குகை கிருஷ்ணன் குகை கன்னிமார் குகை என பல குகைகள் தனித்தனி தீர்த்தங்களுடன் உள்ளன. சுருளி மலையைச் சுற்றி சுமார் 225 குகைகள் உள்ளது. இவற்றில் ரிஷிகள் தேவர்கள் சித்த புருஷர்கள் ஆகியோர் தவமிருந்துள்ளனர். சில குகைகள் பொதுமக்களின் பார்வையில் தென்படக்கூடியது. பிற குகைகள் அடர் வனத்திற்கு உள்ளே யாரும் காணாத படி அமைந்துள்ளது.

கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டே இருக்கிறது. 48 நாட்கள் இந்நீரில் கிடக்கும் இலை தழைகள் பாறை போல மாறுகிறது. பாறை மீது நீர் விழுவதால் ஏற்படும் பாசை வழுக்குத் தன்மையின்றி இருப்பது வியப்பிற்குரியது. இங்குள்ள மரம் ஒன்றின் மீது தொடர்ந்து நீர் விழுந்ததில் பாறையாக மாறி காட்சியளிக்கிறது. கோயில் வளாகத்தில் விபூதிப்பாறை உள்ளது. இந்த பாறையில் தீர்த்தம் பட்டு ஈரமான மணல் துகள்கள் காய்ந்த பின் வெண்ணிறத்தில் விபூதியாக மாறுகிறது. இந்த விபூதியையே பிரசாதமாக தருகிறார்கள். ஓம்கார வடிவில் உள்ள இம்மலையில் கன்னிமார்கள் நடனமாடிய ரேகைகளுடன் ஒரு பாறை உள்ளது.

மகாவிஷ்ணுவின் மகளான வள்ளியை மலையரசனான நம்பிராஜன் வளர்த்தார். அவளை முருகப்பெருமான் மணந்து கொண்டார். திருமண சீராக நம்பிராஜன் தனது ஆட்சிக்குட்பட்ட மலைப் பிரதேசங்களைக் கொடுத்தார். அதில் இந்த மலேயும் ஒன்று. இம்மலையில் முருகப்பெருமான் குடிகொண்டார். ஒரு சமயம் சனி பகவான் தன் சஞ்சாரப்படி தேவர்களைப் பிடிக்க வேண்டியிருந்தது. தேவர்கள் தங்களைக் காத்தருளும்படி இங்குள்ள முருகனை தஞ்சமடைந்தனர். சுவாமி அவர்களுக்கு அடைக்கலம் தந்து காத்தருளினார்.

ராவணன் தனது தவத்தால் அண்டசராசரங்கள் அனைத்தையும் ஆளும்படி வரம் பெற்று தேவர்களை கொடுமைப்படுத்தினான். அவனுக்கு முடிவு கட்ட எண்ணிய தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ஆகியோர் இங்குள்ள கைலாசநாதர் குகையில் மகாவிஷ்ணு தலைமையில் ஆலோசனை செய்தனர். அவர்களை அழிக்க ராவணேஸ்வரன் தனது அரக்கர் படையுடன் இங்கு வந்தான். தேவர்களைக் காக்க மகாவிஷ்ணு பூத சொரூபத்துடன் பஞ்ச பூதங்களாக விண்ணுக்கும் மண்ணுக்குமாக நின்றார். அவரது கோலத்தை கண்டு பயந்த ராவனேஸ்வரன் தன் அரக்கர் படையுடன் திரும்பி ஓடினான். இவ்வாறு தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் தவம் புரிந்த கைலாசகுகையின் மேல் பகுதியில் சுருளிவேலப்பர் அருள் புரிகிறார். திருமுருகாற்றுப்படையில் மலைகள் அனைத்தும் முருகனுக்கே சொந்தம் எனக்குறிப்பிடும் நக்கீரர் மலைக் கோயில்களை குன்றுதோறாடல் என்கிறார். இத்தலமும் குன்றுதோறாடல் என்றே அழைக்கப்படுகிறது. ஆடி அமாவாசையன்று சுவாமிக்கு விசேஷ பூஜை நடக்கும்.

விராலி மலை

விராலிமலை முருகன் கோயில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது. இம்மலையின் புராண பெயர் சொர்ணவிராலியங்கிரி. மூலவர் சண்முகநாதர் ஆறுமுகம். முருகர் மயில் மீது வீற்றிருக்கிறார். இந்த மயில் தெற்கு பார்த்திருப்பதால் இதற்கு அசுர மயில் என்று பெயர். அம்மன் வள்ளி மற்றும் தெய்வானை. தலமரம் விராலிச்செடி காசிவில்வம். தீர்த்தம் சரவணப் பொய்கை நாக தீர்த்தம். நாகதீர்த்தம் நடுவே நாகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முருகரின் வாகனமான மயில்கள் அதிகமாக நடமாடும் கோயில் இது. இடும்பன் சன்னதி பாறையில் குடைந்து அமைக்கப்பட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

வயலூரில் ஓம் என்று நாவில் எழுதி திருப்புகழ் பாட வைத்த முருகப்பெருமான் அவரை விராலிமலை இருக்குமிடத்திற்கு வர கட்டளையிட்டார். விராலி மலைக்கு வழி தெரியாமல் தவித்த அருணகிரிநாதருக்கு விராலிமலைக்கு செல்லும் வழியை காட்ட முருகன் வேடன் வேடம் பூண்டு வேங்கையைத் துரத்தி வந்து அருணகிரிநாதருக்கு வழிகாட்டி தற்போது இக்கோவில் இருக்குமிடத்தில் உள்ள குரா மரத்தினுள் மறைந்து விட்டார். இந்த விராலிமலைத் தலத்தில்தான் அருணகிரிநாதருக்கு முருகர் அஷ்டமாசித்தி என்னும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை வழங்கினார். திருப்புகழில் 18 தடவை இத்திருத்தலத்தைக் குறித்து அருணகிரிநாதர் பாடியுள்ளார். இத்தலத்தில் பலகாலம் தங்கியிருந்த அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தன் திருப்புகழில் உருகிப்பாடியுள்ளது இத்தலத்தின் பெருமைக்கு சான்று.

சிவன் பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையைக் கொய்தார். அப்போது நாரதர் தன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை என்று சிவனிடம் வாதிட்டார். இதனால் அவர் சிவநிந்தனைக்கு ஆளானார். இதனால் அவரது தம்புரா வளைந்தது. சிவநிந்தையை போக்குவதற்கு இத்தலத்தில் முருகப் பெருமானை வணங்கி விமோசனம் பெற்றார். இதன் அடிப்படையில் இங்கு நாரதர் உற்சவராக இருக்கிறார். இவரது தம்புரா இப்போதும் வளைந்து காணப்படுகிறது. கோயில் திருவிழாவின் போது சுவாமி முன்பாக இவரும் உலா வருகிறார்.

குமாரவாடி என்ற ஜமீனில் நிர்வாகியாகப் பணி புரிந்தவர் கருப்பமுத்து பிள்ளை. வெள்ளிக் கிழமை தோறும் முருகப்பெருமானை தரிசித்த பின்பே உண்ணும் வழக்கம் உடையவர். இவர் தீவிர முருக பக்தர். இக்கோவிலில் நடந்த திருப்பணியில் கருப்பமுத்து ஈடுபட்டார். ஒருநாள் வெள்ளிக் கிழமை பலத்த காற்றுடன் மழை பெய்தது. அருகில் இருந்த நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஆற்றைக் கடக்க முடியவில்லை. எப்படியாவது முருகனை தரிசிக்க வேண்டும் என்று முருகனைப் பிரார்த்தித்தார். குளிர் தாங்காமல் சுருட்டு ஒன்றை பற்ற வைத்தார். அப்போது அவர் அருகே ஒருவர் நடுங்கியபடி வந்து நின்றார். அவர் மீது இரக்கப்பட்ட கருப்பமுத்து உங்களுக்கும் சுருட்டு வேண்டுமா? எனக் கேட்டார். வந்தவரும் சுருட்டை வாங்கிக் கொண்டார். அந்த நபர் கருப்பமுத்துவுக்கு ஆற்றைக் கடக்க உதவி செய்தார். இருவருமாக ஆற்றைக் கடந்து சென்று கொண்டிருக்கும் போது அவர் மறைந்து விட்டார். இதனைக் கண்டு வியப்புற்ற கருப்பமுத்து கோயிலை அடைந்ததும் அங்கு முருகனுக்கு முன்பாக தான் கொடுத்த சுருட்டு இருப்பதைக் கண்டு தம்மிடம் சுருட்டு பெற்றவர் முருகனே என உணர்ந்தார். கருப்பமுத்து அங்கிருந்த அனைவரிடமும் நடந்ததைக்கூற ஆச்சரியமடைந்தனர். அன்று முதல் மாலை வேளை பூஜையில் முருகனுக்கு சுருட்டு நைவேத்யமாக படைக்கும் பழக்கம் உருவானது.

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஒரு முறை விராலிமலை வந்தார். சுருட்டை நிவேதனமாக வைப்பது கண்டு திடுக்கிட்ட மன்னர் இனி சுருட்டை நிவேதனப் பொருளாக வைக்கக்கூடாது என்று உத்தரவிட்டு சென்றுவிட்டார். அன்று மாலை அரண்மனை திரும்பிய மன்னருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. எந்த மருத்துவமும் பலன் தரவில்லை. அன்று இரவு முருகர் அவர் கனவில் தோன்றி எனக்கு சுருட்டு படைப்பது மற்றவருக்கு உதவி செய்யும் மனப்பான்மை வளர வேண்டும். பிறர் துன்பம் கண்டு அன்பை வளர்க்க வேண்டும் என்பதற்காகத்தானே தவிர புகைக்கும் பழக்கத்திற்கு முக்கியத்துவம் தருவதற்காக அல்ல. துன்பப்படும் ஒருவனுக்கு ஏதோ ஒரு வழியில் உதவி செய்ய வேண்டும் என என் பக்தர் விரும்பினார். அதற்காகவே அவர் தந்த சுருட்டை தகுதியற்றதாயினும் அன்புடன் ஏற்றுக் கொண்டேன். இப்பழக்கம் தொடரட்டும். தடை செய்யாதே என்றார். மேலும் நிவேதனமாக சுருட்டை வைக்க வேண்டாம் என்று கூறியதால் தான் அவருக்கு வயிற்று வலியை தோன்ற செய்தேன் என்று கூறினார். அடுத்தநாள் மன்னர் தான் போட்ட தடையை நீக்கினார். முதல் சுருட்டு நைவேத்தியமாக முருகனுக்கு வைத்தவுடன் மன்னரின் வயிற்று வலி குணமானது. அதன்பிறகு இன்று வரை இப்பழக்கம் இருக்கிறது. ஆறு கால பூஜையின் போது பாலும் பழமும் பஞ்சாமிர்தம் நைவேத்தியமாக செய்யப்படுகிறது. உச்சிகால வழிபாட்டின்போது மட்டும் சுருட்டு சேர்த்து நைவேத்தியம் செய்யப்படுகிறது

வசிஷ்டரும் அவரது துணைவி அருந்ததியும் தமது சாபம் நீங்க இத்தலத்தில் தவமியற்றி உள்ளார்கள். திருவாரூரில் இருந்த தட்சிணாமூர்த்தி என்னும் அடியார்க்கு இறைவனே அப்பம் தந்த தலம். சனகர் சனந்தர் சனாதனர் சனத்குமாரர் ஆகிய நால்வருக்கும் முருகன் தோன்றி காட்சி தந்த திருத்தலம். இத்தலத்தின் மீது விராலிக் குறவஞ்சி என்னும் நூலை முத்துப்பழனிக் கவிராயர் இயற்றினார். பங்குனி உத்திரம் கந்த சஷ்டி ஆகிய நாட்களில் இத்தலத்தின் சிறப்பான உற்சவங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பொதுவாக ஆலயங்களில் பிரமோச்சவம் என்பது ஒரு தடவை மட்டுமே நடக்கும். ஆனால் இந்த ஆலயத்தில் விசாகம் மற்றும் பூசம் விழாக்களை ஒட்டி இரண்டு பிரம்மோச்சவம் நடைபெறுகிறது. விஜயநகரப் பேரரசரின் வழிவந்த இரண்டாம் தேவராயரின் (கிபி1422 -1446) காலக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குன்றில் அமைந்துள்ள இயற்கையான குகைகளில் மனிதர்கள் வாழ்ந்திருந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.

சுக்ரீஸ்வரர் கோயில்

மூலவர் சுக்ரீஸ்வரர் மற்றும் மிளகேஸ்வரர் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். குரக்குத்தளி ஆடுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். சுக்ரீஸ்வரர் லிங்கம் 31.5 அடி உயரம் கொண்டதாகும். 28 ஆக விதிகளை கணக்கிட்டு 28 அடி சிலை கருவறையில் புதைக்கப்பட்டு 3.5 அடி சிலை வெளியே தெரியும் வகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வலதுபுறம் ஆவுடை நாயகி தனி சன்னிதியில் அருள்புரிகிறாள். தலமரம் வில்வமரம் மற்றும் மாமரம். ஊர் திருப்பூர். புராண பெயர் முகுந்தாபுரிபட்டணம். சுற்றுப் பிரகாரங்களில் கன்னி மூல விநாயகர் தட்சிணா மூர்த்தி சுப்ரமணியர் சண்டிகேஸ்வரர் பைரவர் சன்னதியும் கருவறைக்கு நேர் எதிரே பத்ரகாளியம்மனும் உள்ளார். நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கங்கள் இக்கோவிலில் அமைந்துள்ளன. பஞ்ச லிங்க கோவிலில் மூலவராக அக்னி லிங்கமாகவும் நீர் நிலம் காற்று லிங்கங்கள் மூன்றும் கோவிலை சுற்றிலும் அமைந்துள்ளன. மற்றொன்று ஆகாச லிங்கம் கண்ணுக்கு தெரியாது. சிவனுக்கு பிடித்த வில்வமரத்தின் கீழ் ஐந்தாவதாக ஆகாச லிங்கம் அமைந்துள்ளது என்று தல வரலாற்றில் குறிப்படப்பட்டுள்ளது. யாக அம்மன் தனியாக அருள் பாலிக்கிறார். வழக்கமாக சிவன் கோவில்கள் கிழக்கு பார்த்து அமைந்திருக்கும். இக்கோவிலில் தெற்கு வடக்கு பகுதியில் மட்டும் வாசல் அமைந்துள்ளது. மற்ற கோவில்களை போல் மூலவரை நேரடியாக எதிரே வந்து தரிசிக்க முடியாது. தெற்கு வாசல் வழியாக மட்டுமே வர முடியும். அதேபோல் மூலவர் சன்னதிக்கு எதிரே வழியே இல்லை.

கோயில் கருவறைக்கு நேர் எதிரே மகா மண்டபத்தில் சூரிய ஒளி இறைவன் மேல் விழுவதற்கேற்ப மூன்று துவாரங்கள் இருந்துள்ளது. தை மாதத்தின் முதல் மூன்று நாட்கள் உத்தராயணமும் தட்சிணாயணமும் சந்திக்கும் வேளையில் சுவாமி சிலையின் நெற்றியில் சரியாக சூரிய ஓளி விழும் அற்புதம் முன்பு நடந்து வந்தது. கோயில் பாதுகாப்பு நலன்கருதி தற்போது துவாரங்கள் அனைத்தும் மறைக்கப்பட்டு விட்டன. கருவறைக்கு அடுத்துள்ள மகா மண்டபத்தில் ஆஞ்சநேயர் சனீஸ்வரர் அருகருகே வீற்றிருக்கின்றனர். நான்கு புறத்திலும் சிவன் அமர்ந்த நிலையில் முழு உருவமாக வீற்றிருக்கிறார். சிவனுக்கு மேல் சிவபெருமானின் சிரசு இருப்பது போன்ற அமைப்புடன் கோபுர விமானம் அமைக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் பேரூர் கோவிலுக்கு அடுத்து சிறப்பான வேலைப் பாடுகளுடன் சக்தி வாய்ந்ததாக சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு என 450 ஏக்கர் நஞ்சராயன் குளம் கோவிலை சுற்றிலும் தண்ணீர் தேங்கும் அகழி தெப்பக்குளம் உள்ளது.

கோவிலில் இரண்டு நந்திகள் உள்ளன. முதலில் உள்ள நந்திக்கு கொம்பு காது இருக்காது. கோவில் நந்தி அருகிலுள்ள விவசாய நிலத்துக்கு சென்று மேய்ந்துள்ளது. ஆத்திரமடைந்த விவசாயி இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து மாட்டின் காதையும் கொம்பையும் அறுத்துள்ளார். மறுநாள் கோவிலுக்கு வந்து பார்த்த போது கற்சிலையான நந்தியின் காதிலிருந்து ரத்தம் வழிந்துள்ளது. அதிர்ச்சியடைந்த விவசாயி தனது தோட்டத்துக்கு வந்தது நந்தி என உணர்ந்து தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு வணங்கியுள்ளார். பின் தவறுக்கு பிராயசித்தமாக மற்றொரு நந்தி சிலை செய்து புதிய நந்தியை பிரதிஷ்டை செய்துள்ளார். பழைய நந்தியை அகற்ற முயற்சித்து முடியாமல் விட்டுள்ளார். மறுநாள் வந்து பார்த்த போது பழைய நந்தி முன்பும் புதிய நந்தி பின்னாலும் மாறி இருந்துள்ளது. சிவன் கனவில் வந்து உறுப்புகள் இல்லை என்றாலும் அதுவும் உயிர்தான் எனவும் பழைய நந்தி முன்னால் இருக்க வேண்டும் மற்றது பின்னால்தான் என கூறியுள்ளார். அதன் அடிப்படையில் இன்றும் இரண்டு நந்திகள் அமைந்துள்ளன. பிரதோஷ காலங்களில் இரண்டு நந்திகளுக்கும் பூஜை நடத்தப்படுகிறது. நவக்கிரகத்தில் ஈஸ்வர பட்டத்தை பெற்றவர் சனீஸ்வரர். இவர் இங்கு சிவனை நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கிறார்.

கோயில் வழியாக பாசிப் பயறுகளை கொண்டு சென்ற வணிகர் ஒருவரிடம் உன் வண்டியில் என்ன கொண்டு செல்கிறாய் என்று மாறுவேடத்தில் வந்திருந்த சிவபெருமான் கேட்டுள்ளார். இவரிடம் ஏன் கூற வேண்டும் என மறைக்க நினைத்த வணிகர் அனைத்தும் மிளகு என கூறியுள்ளார். பொய் கூறியதால் வண்டி மூட்டையில் இருந்த 100 பயறு மூட்டையும் மிளகாக மாற்றிவிட்டார் சிவபெருமான். விற்பனைக்கு கொண்டு சென்ற போது அதிர்ச்சியடைந்த வியாபாரி ஏன்? இப்படி நடந்தது என வியந்து யோசித்துள்ளார். வழியில் ஒருவர் கேட்டாரே என நினைத்த போது கண்முன் தோன்றிய சிவபெருமான் நான்தான் கேட்டது என கூறியுள்ளார். மீண்டும் என் கோயிலுக்கு வந்து நீ மிளகு வைத்து பூஜிக்க வேண்டும் என கூறியுள்ளார். வந்த வழி இடம் தெரியாது என வியாபாரி கூறினார். நீ வந்த வழியில் வாகனத்தை திருப்பு வண்டி மாடு வந்து நிற்குமிடம் என் ஆலயம் என சிவபெருமான் கூறியுள்ளார். கோயிலுக்கு வந்த வியாபாரி மிளகு வைத்து வழிபட்டவுடன் வண்டியில் இருந்த மிளகு பாசிப்பயறாக மாறி விட்டது.

திருப்பூரிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிமீ தொலைவில் சர்க்கார் பெரியபாளையத்தில் சுக்ரீஸ்வரர் கோவில் உள்ளது. ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த வானர அரசன் சுக்ரீவன் தனது அண்ணனைக் கொன்றதற்குப் பிராயச்சித்தம் செய்ய இங்குள்ள ஈசனை லிங்கம் அமைத்து வழிபட்டதால் இக்கோவில் சுக்ரீஸ்வரர் என பெயர் வந்ததாக தல புராணம் கூறுகிறது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில் சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் புடைப்புச் சிற்பம் உள்ளது. இக்கோவில் 2500 ஆண்டுகளுக்கு முந்தையது என தொல்லியல் துறை கூறினாலும் 17.28 லட்சம் ஆண்டுகளை கொண்ட கிரதயுகத்தில் காவல் தெய்வமாகவும் 12.96 லட்சம் ஆண்டுகளை கொண்ட திரேதா யுகத்தில் சுக்ரீவனால் வணங்கப்பட்டும் 8.64 லட்சம் ஆண்டுகளை கொண்ட துவாபரயுகத்தில் இந்திரனின் வாகனமான ஐராவதத்தாலும் வணங்கப்பட்டது எனவும் 4.32 லட்சம் ஆண்டுகளை கொண்ட கலியுகத்தில் தேவர்களாலும் அரசர்களாலும் வணங்கப்பட்டு நான்கு யுகங்களை கண்ட கோவில் என்ற வரலாறும் அதற்கான சான்றுகளும் கோவிலில் உள்ளன.

கோயில் இருக்கும் இடம் அன்றைய அரசாங்கத்தால் (சர்க்காரால்) வழங்கப்பட்ட இடம் என்பதால் சர்க்கார் பெரியபாளையம் என அழைக்கப்படுகிறது. இதன் அருகில் அக்ரஹார பெரியபாளையம் உள்ளது. கோயில் கருவறையை அடுத்துள்ள அர்த்த மண்டபத்தில் மிகப்பெரிய சுரங்கம் ஒன்று கோயிலில் இருந்து வெளியேற வசதியுடன் இருந்துள்ளது. பின்னாளில் அவை மூடப்பட்டு விட்டது. வியக்க தகுந்த கோபுர அமைப்பு மற்றும் கல்வெட்டுகள் உள்ளதால் கடந்த 1956 ம் ஆண்டு இக்கோயிலை மத்திய அரசின் கலாச்சார அமைப்புடன் இணைந்த தொல்பொருள் ஆராய்ச்சித்துறை கையகப்படுத்தி பராமரிப்பு செய்து வருகிறது. தொல்லியில்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மீண்டும் கோவிலை புனரமைக்கும் வகையில் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுத்தது. அதற்காக ஆய்வு செய்ய கோவில் கற்களை பிரித்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். தற்போதுள்ள கோவிலை போலவே பூமிக்கடியிலும் இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் அமைந்துள்ளது. இதனால்தான் பல ஆயிரம் ஆண்டுகளானாலும் கோவில் பூமியில் இறங்காமல் கட்டியபடியேயும் வயது முதிர்ச்சி கூட தெரியாத அளவுக்கு கல் கோவில் கட்டுமானங்கள் அப்படியே உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கோயிலில் சுமார் 11 கல்வெட்டுகள் உள்ளன அவற்றில் ஒன்று கொங்கு சோழருக்கும் 9 கொங்கு பாண்டியர்களுக்கும் ஒன்று மைசூர் உமாத்தூர் மன்னர் வீரநஞ்சராயருக்கும் சொந்தமானது. கல்வெட்டுகளின்படி இத்தலம் வீரசோழவள நாட்டைச் சேர்ந்த முகுந்தனூர் என்றும் சிவபெருமான் குறக்குதலி ஆளுடைய நாயனார் என்றும் அழைக்கப்படுகிறார். வீரராஜேந்திரன் காலத்து கல்வெட்டில் விழா பூஜை அபிஷேகம் போன்றவற்றில் பங்கேற்க 30 கழஞ்சு பொன் சிவபிராமணன் தானமாக வழங்கியதைக் குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியர் காலத்து கல்வெட்டில் சித்தாக்குறிச்சி கிராமத்தில் தானமாக தேவதானா நிலத்தில் விவசாயம் செய்து தண்ணீர் தேவைக்காக கிணறுகள் குளம் ஏரி வாய்க்கால்களை தோண்டி 50% மகசூல் தர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுந்தர பாண்டியரின் இன்னொரு கல்வெட்டில் நொய்யல் ஆற்றின் நீரை முறைப்படுத்தி சூரலூர் கிராம சாகுபடிக்காக நொய்யல் அணை ஆகியவற்றின் மூலம் பேரூர் நாட்டு வெற்றலூர் செம்படவன் பிள்ளையானை அங்கீகரித்து இக்கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியதாகக் குறிப்பிடுகிறது. 15 ஆம் நூற்றாண்டின் மைசூர் உடையார் மன்னர் நஞ்சராய உடையார் தங்கத்திற்கு வாங்கிய நிலத்தில் 200 தென்னைப் பண்ணையை உருவாக்கினார். தென்னை மரங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் இந்த கோவிலின் பூஜைக்கு பயன்படுத்தப் பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்த சுக்ரீஸ்வரர் கோவிலின் திருவிழா செலவுகளைச் சமாளிக்க 64 வணிகர் சங்கங்கள் பொருட்களுக்கு வரி செலுத்த ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. (பழமையான தமிழ் எழுத்துகளில் ஒன்றான வட்டெழுத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்). பாண்டியர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருப்பினும் இங்குள்ள சில சிற்பங்கள் கிபி ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்த சிவ லிங்கத்தை அன்றைய பழங்குடி மக்கள் பூஜைகள் மேற்கொண்டு வந்துள்ளது தெரிகின்றது. தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இக்கோவில் வைப்புதலமாக சமயக் குரவர்களுள் ஒருவரான சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும்.

அச்சன் கோவில் மணிகண்டன்

அச்சன் கோவில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அலுவலர் ஸ்ரீ கார்யம் ஆவார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அச்சன் கோயிலில் ஸ்ரீ காரியம் தர்ம சாஸ்தா மீது அளவற்ற பக்தியோடு அவரை நினைத்தவாறே பணி செய்வார். அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து அதீதமான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகள் காணாமல் போன மரங்களின் விபரங்களை ஸ்ரீ கார்யத்திடம் கேட்டார்கள். கோவிலேயே அதிக நேரம் தினம் இருந்து இறைவனையே நினைத்துக் கொண்டே இருந்தார். அதனால் வேலையில் கவனமின்மை ஆனதால் யார் வெட்டினர் என தெரியாமல் போனது. என்ன விபரம் கொடுப்பது என்று புரியாது அவர் திகைத்தார். சரியான பதில் தராத காரணத்தால் நீதிமன்றதுக்கு வந்து வழக்கை சந்திக்குமாறு அதிகாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். ஒரு தவறும் செய்யாத தன் மேல் வீண் பழி வந்ததே என்று மன வருத்தத்துடன் இருந்தார்.

தர்ம சாஸ்தா கோவிலின் திருவிழா நடைபெற்று வந்த காலம் அது. உன்னை நினைத்து நினைத்து வாழ்ந்த நான் கஷ்டத்தோடு இங்கே இருக்கிறேன். உனக்கு விழாவா என்று எண்ணிக் கொண்டே இரவு படுக்க சென்றார். அன்றிரவு தர்ம சாஸ்தா அவர் கனவில் வந்து நாளை நீதிமன்றத்தில் நீதிபதி மரங்கள் வெட்டியது யார்? என்று கேட்டால் எல்லாம் மணிகண்டனுக்கு தெரியும் என்று மட்டும் சொல் என்றார். மறுநாள் கோர்ட்டில் ஆங்கிலேய நீதிபதி இவரிடம் கேள்விகள் கேட்க இவரும் எல்லாம் தெரிந்தவன் மணிகண்டன் தான் அவன் வந்து சாட்சி சொல்லுவான்’ என்றார். அதை கேட்ட நீதிபதி மணிகண்டனை அழைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற ஊழியர் மணிகண்டன் மணிகண்டன் மணிகண்டன் என மும்முறை அழைத்தார். பின்னர் நீதிபதி சாட்சிக் கூண்டில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் யாரோடு பேசுகிறார் என அங்கே இருந்த அனைவரின் கண்களுக்கு புலப்படவில்லை. நீதிபதி தொடர்ந்து சாட்சி கூண்டில் இருந்தவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். பின்னர் ஸ்ரீகார்யத்தை நோக்கி மணிகண்டன் அளித்த கணக்குகளின்படி நீ நிரபராதி. உன் மேல் தவறில்லை’ என தீர்ப்பளித்தார்.

இந்த நிகழ்வைக் கண்டு நீதிமன்றத்திலிருந்த அனைவரும் ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன ஆனது என பேசிக்கொண்டனர். என்ன நடந்தது யாரிடம் பேசினார் இந்த நீதிபதி. ஸ்ரீ கார்யம் நிரபராதி என ஏன் நீதிபதி கூறினார். புரியாத புதிராக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு. தீர்ப்பு வந்தவுடன் ஸ்ரீ கார்யம் சாஸ்தா மீது கொண்ட பக்தியின் மேலீட்டால் மயங்கி விழுந்தார். தீர்ப்பு முடிந்து நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். வழக்கறிஞர்கள் சிலர் நடந்தது குறித்து நீதிபதியிடம் கேள்வி எழுப்பினர். எங்கள் கண்களுக்கு தெரியாத மனிதரிடம் பேசினீர்கள் என்றனர். நீதிபதி சாட்சி சொல்ல மணிகண்டன் என்பவர் வந்தார். அவர் கூறிய சாட்சிகளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார். வந்தவர் சாதாரண மனிதன் அல்ல, அச்சன் கோவில் அரசன் அந்த தர்ம சாஸ்தா என்று பலரும் பதில் கூறினார்கள். அச்சன் கோவில் வந்தார் ஆங்கிலேய நீதிபதி. மூலஸ்தானத்தை பார்த்தார் நீதிபதி. அவருக்கு கோர்ட்டிற்கு வந்த கோலத்தில் சாஸ்தா காட்சி கொடுத்தார். உடனே வந்தது இவர் தான். இவர் தான் என உணர்ச்சி பூர்வமாக கத்தினார். சாஸ்தாவிடம் சரண் புகுந்தார் அந்த ஆங்கிலேய நீதிபதி.

இந்த ஆலயம் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் தாலுகாவில் அச்சன் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பஞ்ச சாஸ்தா கோவில்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற நான்கு கோவில்கள் குளத்துப்புழா ஆரியங்காவு சபரிமலை மற்றும் கந்தமாலா கோவில்கள் ஆகும். அச்சன் கோவில் என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு ஆறு கோயிலுக்கு அருகில் உருவாகிறது. சபரிமலை கோயிலைப் போலவே அச்சன்கோவில் கோயிலிலும் பதினெட்டு படிகள் உள்ளன. அச்சன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. இந்த பரசுராமரால் நிறுவப்பட்டது. இங்குள்ள ஐயப்பனின் பிரதிஷ்டை கேரளாவில் உள்ள மற்ற சாஸ்தா ஆலயங்களில் இருந்து மிகவும் தனித்துவமானது. இந்த சிலை ருத்ராட்ச சிலை என்று அழைக்கப்படுகிறது. அச்சன் தனது இரண்டு மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலாவுடன் கிரிஹஸ்தாஷ்ரமியாக திருமண வாழ்க்கையை நடத்துபவராக சித்தரிக்கப்படுகிறார். விஷமுள்ள பாம்புக் கடிகளைக் குணப்படுத்துவதில் இந்த ஆலயம் புகழ் பெற்றது. இதனால் அய்யப்பன் பெரும்பாலும் மகாவைத்தியராக அருள் பாலிக்கிறார். சிலையின் வலது உள்ளங்கையில் எப்போதும் சந்தனம் மற்றும் தீர்த்தம் ஆகியவை இருக்கிறது. இவை மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறது. இக்கோயிலில் மாளிகைப்புறத்தம்மா துர்க்கை நாகராஜா நாகயக்ஷி கணபதி முருகர் கருப்பசுவாமி கருப்பாயி அம்மா செப்பனிமுண்டன் சப்பாணிமாடன் மாடத்தேவன் காளமாடன் கொச்சட்டிநாராயணன் ஷிங்காலி பூதத்தன் அருக்கோலத்தன் போன்ற உப தெய்வங்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் நாகர் உள்ளார்.