ராமாயணம் 3. ஆரண்ய காண்டம் பகுதி – 17

மாரீசன் ராவணனிடம் பேச ஆரம்பித்தான். ராமர் யுத்தத்தில் மத யானைக்கு ஒப்பானவர். சீதையை அபகரிக்கும் இந்த யோசனையை எனக்கு யார் சொன்னது ராவணா? இதனை செயல்படுத்துவது என்பது கொடிய விஷ பாம்பின் வாயில் கைவிட்டு அதன் பல்லை பிடுங்கி மரணிப்பது போல் ஆகும். எவனோ உன் பகைவன் உனக்கும் உனது ராட்சச குலத்திற்கும் சர்வநாசம் உண்டாக வேண்டும் என்று உன்னுடைய நண்பன் போல் பாசாங்கு செய்து இந்த திட்டத்தை உனக்கு சொல்லியிருக்கிறான். ஏமாந்து அழிந்து போகாதே. ராமருடைய கோபத்தை தூண்டினால் உன் குலம் அழிந்து போகும். ராமர் யுத்தம் செய்யும் போது பாதாளத்தை அடித்தளமாக கொண்ட கடல் போன்று காட்சி அளிப்பார். அவரின் வில்லில் இருந்து வரும் அம்புகள் கடல் அலைகள் போல் நிற்காமல் வந்து கொண்டே இருக்கும். அக்காட்சியை கண் கொண்டு பார்க்க இயலாது அப்படி இருக்கும் போது யுத்தம் செய்வது எப்படி சாத்தியமாகும். அரக்கர்களின் தலைவனான ராவணா நீங்கள் சீதையை ராமருக்கு தெரியாமல் நீங்கள் கவர்ந்து செல்வது உங்களுக்கு நன்மையானது அல்ல. நான் சொல்வதை கேளுங்கள். மனம் அமைதி அடைந்து இலங்கைக்கு திரும்பி சென்று உங்களது மனைவிமார்களுடன் மகிழ்ச்சியுடன்
இன்பத்தை அனுபவியுங்கள். ராமர் தன் மனைவியுடன் காட்டில் மகிழ்ச்சியாக இருக்கட்டும் என்று மாரீசன் ராவணனிடம் புத்தி கூறினார். இதனைக்கேட்ட ராவணன் அனுபவசாலியான மாரீசன் கூறினாள் சரியாக இருக்கும் என்று தன் திட்டத்தை கைவிட்டு இலங்கைக்கு திரும்பிச்சென்றான்.

இலங்கையில் ராவணன் தனது அரசவையில் இந்திரன் போல் ஜொலித்துக்கொண்டு மந்திரிகள் சூழ அமர்ந்திருந்தான். அப்போது சபையில் அதிர்ச்சியை உண்டாக்கும் வகையில் ராவணனின் உடன் பிறந்த சகோதரி சூர்ப்பனகை காது மூக்கு அறுந்த நிலையில் மிகவும் கொடூரமான உருவத்துடன் அரசவைக்குள் நுழைந்து ராவணனிடம் கடுமையான வார்த்தைகளை கூறி பேச ஆரம்பித்தாள். ராட்சச அரசனை நீ அரச சுகங்களை அனுபவிப்பதில் மதிமயங்கி கிடக்கின்றாய். மிக பெரிய ஆபத்து ஒன்று பின்னாளில் வரப்போகிறது என்று நான் சொல்வதற்கு முன்பாகவே ஒற்றர்கள் வழியாக உனக்கு செய்தி வந்திருக்கும். அதனை தெரிந்தும் தெரியாதது போல் சிறுபிள்ளைதனமாக சுகங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றாய்.

உன்னுடைய ஆளுகைக்கு உட்பட்ட உனது இடத்தை ஒருவன் ஆக்ரமிப்பு செய்து உன் குலத்தை சேர்ந்த உன்னை நம்பி தண்டகாருண்ய காட்டை ஆட்சி செய்தவர்கள் அழிந்து விட்டார்கள். பதினான்காயிரம் வீரர்களையும் அரசன் சேனாதிபதி என அனைவரையும் முனிவர்களின் சார்பாக ஒருவன் அழித்திருக்கிறான். உன்னுடைய படைகளை கண்டு நடுநடுங்கிய எதிரிகள் இதனைப்பார்த்து இப்போது சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதனை அறிந்தும் அறியாதவன் போல் அறிவிழந்து கிடக்கிறாய். மரண பயமில்லாமல் நீ இருந்தால் மட்டும் போதுமா அரசன் செய்ய வேண்டிய காரியத்தை நீ செய்ய வேண்டாமா? நீ எப்போது அழிவாய் என்று உனது பகைவர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீ இங்கு சுகமாக சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றாய். உனக்கு அவமானமாக இல்லையா? உன்னை கண்டு நடுங்கிய முனிவர்களுக்கும் ரிஷிகளுக்கும் ராமர் இப்போது அபயம் அளித்து விட்டான். உன்னை பாராட்டி கொண்டிருப்பவர்களின் வார்த்தைகளில் திருப்திப்பட்டு கிடக்கும் உனக்கு ஆபத்து நெருங்கி விட்டது. இலங்கைக்கு இந்த நிலை வந்தால் உன் குடி மக்கள் கூட உன்னை மதிக்க மாட்டார்கள். உனக்கு கோவம் வரவில்லையா கோபம் இல்லாத அரசன் எதற்கும் உதவ மாட்டான் என்று சூர்ப்பனகை ராவணனின் கோபத்தை தூண்டி விட்டாள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.