மகாபாரதம் ஆதிபருவம் பகுதி – 1

தாய்நாடு பண்டைய காலத்தில் ஆரியவர்த்தம் என்னும் பெயருடன் இருந்தது. நல்லவர்கள் உடைய நாடு என்பது அதன் பொருள் ஆரியன் என்னும் சொல் ஒரு இனத்தையோ சாதியையோ குறிக்காது. பண்பட்டவன் என்பது அதன் பொருள். அய்யன் ஐயா ஐயர் ஆரியன் ஆகிய சொற்கள் ஒரே கருத்திற்கு உரியவையாகும் இன்றைக்கு ஆரியவர்த்தம் என்னும் சொல் இலக்கியத்தில் மட்டுமே கையாளப்படுகிறது பேச்சுவார்த்தையில் பின்னுக்குப் போய் விட்டது. இந்த ஆர்ய வர்த்தத்திலே பண்டை காலத்தில் சூரிய வம்சம் சந்திர வம்சம் என்னும் இரண்டு வம்சத்தவர்கள் தலைசிறந்த பாங்கிலே நாட்டை ஆண்டு வந்தார்கள் மகாபாரதம் நூல் சந்திர வம்சத்தை பற்றியதாகும்.

பரதன் என்னும் பெயர் தாங்கிய பேரரசன் ஒருவன் இருந்தான். இவன் துஷ்யந்தனுக்கும் சகுந்தலைக்கும் பிள்ளையாகப் பிறந்தவன் பண்புகள் பலவும் வாய்க்கப் பெற்றவனாக இருந்த காரணத்தை முன்னிட்டே இந்த நாடு நாளடைவில் பாரதம் என்னும் பெயர் பெற்றது. பரதனுடைய சந்ததியினர் அனைவரும் பாரதர்கள் என அழைக்கப்பட்டார்கள் அந்த வழி முறையிலேயே குரு என்னும் பெயர் தாங்கிய மற்றொரு பேரரசன் இருந்தான். அவனுடைய வம்சத்தை சேர்ந்தவர்கள் நாளடைவில் குருக்கள் என அழைக்கப்பட்டனர். கௌரவர்கள் என்னும் பெயரும் அதே அடிச் சொல்லிலிருந்து வந்தது குருசேத்திரம் என்னும் இடமும் குரு என்னும் இந்த கோமகனை முன்னிட்டு வந்தது.

குரு வம்சத்தில் வந்த வேந்தர்களில் சந்தனு என்பவன் மிகத் திறமை வாய்க்கப் பெற்றவன். தன்னுடைய முற்பிறப்பிலே இவன் சூரிய வம்சத்தை சேர்ந்த இக்ஷ்வாகு வம்சத்திற்குரியவனாய் இருந்தான். அதே வம்சத்தில் தான் ஸ்ரீராமனும் பிறப்பெடுத்து இருந்தான். சந்தனு தனது பழைய பிறவியிலே அவனுக்கு பெயர் மகாபிஷன் என்பதாகும். சொர்க்கத்திலே மகாபிஷன் நெடுநாள் வாழ்ந்திருந்தான் அங்கு அப்போது நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தேவர்கள் பலர் ஒன்று கூடி விருந்து ஒன்று வைத்திருந்தார்கள் அந்த விருந்தில் மகாபிஷனும் கங்காதேவியும் இடம் பெற்றிருந்தனர் விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது காற்றடித்து கங்காதேவியின் மேலாடை அப்புறப்படுத்தியது. இந்த சந்தர்ப்பத்தில் பண்பை அடிப்படையாகக் கொண்டிருந்த தேவர்கள் எல்லோரும் தங்களுடைய கண் பார்வையை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள் ஆனால் மகாபிஷன் மட்டும் அப்படிச் செய்யவில்லை இந்த இக்கட்டில் அவன் கங்காதேவியை பார்த்த வண்ணம் இருந்தான் இருந்தான் அவன் அப்படி செய்தது பெரும் பிழையாகும். சிருஷ்டி கர்த்தாவாகிய பிரம்மதேவன் அப்பிழைக்கு ஏற்ப சாபம் ஒன்றை கொடுத்தார். கங்காதேவியும் மகாபிஷனும் மண்ணுலகில் மானிடராகப் பிறந்து அக்கர்மத்தை முடித்தாக வேண்டும் என்பது அச்சாபமாகும். இதுவே சந்தனு மன்னனின் பூர்வஜென்ம வரலாறு இதை பற்றி அவனுக்கு இப்பிறவியில் ஒன்றும் தெரியாது.

குரு வம்சத்தை சேர்ந்த சந்தனு மன்னன் தன் நாட்டை நன்கு ஆண்டு வந்தான் ஒரு நாள் அவன் கங்கா நதி கரையில் உலாவிக் கொண்டிருந்தான். அப்போது அழகான பெண்ணொருத்தியை அங்கு கண்டான். அப்போதே அங்கு அவள் மீது காதல் கொண்டான். சிறிதேனும் தயங்காது உன்னை மணந்து கொள்கின்றேன் என்று தன் கருத்தை அவளிடம் தெரிவித்தான். அவளை மணந்து கொள்வதற்கு அவள் என்ன நிபந்தனை விதித்தாலும் அதற்கு உட்பட்டு நடப்பதாக அரசன் உறுதி கூறினான். தன்னை மணப்பதற்கு நிபந்தனைகள் என்னென்ன என்று அந்தப் பெண் கூறினாள். அப்பெண்ணின் பெற்றோர் யார் என்று கேட்கக் கூடாது என்பது முதல் நிபந்தனை. நல்லதோ கெட்டதோ அவளுடைய செயல் எதுவாக இருந்தாலும் அது குறித்து அவன் பேசக்கூடாது என்பது இரண்டாவது நிபந்தனை. எக்காரணத்தை கொண்டும் அவள் மீது கோபித்துக் கொள்ளக்கூடாது என்பது மூன்றாவது நிபந்தனை. அவளுக்கு அதிருப்தி உண்டாகும் படியான செயல் எதையும் செய்ய கூடாது என்பது நான்காவது நிபந்தனை. இந்த நான்கு நிபந்தனைகள் ஏதேனும் ஒன்றை அவன் மீறினால் அக்கணமே அவள் அவரிடமிருந்து விலகிக் கொள்வாள். நிறைவேற்றுவதற்கு மிகக் கடினமான இந்த நிபந்தனைகளை காதலில் மயங்கி போன சந்தனு மன்னன் ஏற்றுக்கொண்டான். அவர்கள் இவ்விருவரும் மணந்துகொண்டு இன்புற்று வாழ்ந்து வந்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.