ராமாயணம் பால காண்டம் பகுதி -2

தசரதமன்னனுடைய வாழ்வில் அனைத்து சம்பத்துக்களும் இருந்தாலும் அவருடைய மனதில் குறை ஒன்று இருந்தது. அவருக்கு திருமணம் நடந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் மகப்பேறு வாய்க்கவில்லை. அதைப்பற்றிய துயரம் அவர் மனதில் அறித்துக்கொண்டிருந்தது. இந்த குறையை முன்னிட்டு அனைத்து மகிழ்ச்சிகளும் பயனற்றவைகளாக தசரத மன்னனுக்கு தெரிந்தது. மகப்பேறு ஒன்றை நாடி அவரின் உள்ளம் தவித்துக்கொண்டிருந்தது.

அயோத்தி மாநகரில் தசரதன் அரசவையில் இருந்தான் இப்போது குலகுருவான வசிஷ்டர் அரசவைக்கு வந்தார். அவரை அடிபணிந்த தசரதன் வழிவழியாக எங்கள் குலத்திற்கு தாயும் தந்தையாய் உயர்ந்த கடவுளாய் இருப்பவர் நீங்களே என்று போற்றி வணங்கி தக்க மரியாதை தந்து வரவேற்று அவருக்குத்தக்க ஆசனம் தந்து அமரவைத்தான். பின்பு அவரிடம் எனக்கு முன்னால் தோன்றிய சூரிய வம்சத்து அரசர்கள் அனைவரும் எல்லா நன்மைகளும் பெற்று அரசாட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தனர். நான் இவ்வுலகை அறுபதினாயிரம் ஆண்டுகள் ஆட்சி செய்து இவ்வுலகை காத்து வந்தேன். பெருந்தவம் புரியும் முனிவர்கள் வேள்விகள் செய்யும் அந்தணர்கள் வரை எவ்வித குறையுமில்லாமல் நலமுடன் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனக்குப்பின் இந்த நாட்டை ஆள வாரிசு இல்லை. ஆகையால் அவர்கள் அனைவரும் பெருந்துன்பத்தில் சிக்கக்கூடும் என்று என் மனம் மிகவும் வருந்துகிறது. எனக்கு வாரிசு கிடைக்க என்ன செய்யவேண்டும் என்று தாங்கள் கூறவேண்டும் என்று வசிஷ்டரிடம் கூறினான். தசரதர் கூறிய அனைத்தையும் கேட்ட வசிஷ்டர் பிற்காலத்தில் தசரதருக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தன் தவவலிமையால் அறிந்துகொள்ள கண்களை முடி பின்வருவனவற்றை கண்டார்.

இலங்கையில் வாழும் அசுர அரசனான ராவணன் தேவர்களுக்கு தாங்க முடியாத துன்பத்தை கொடுத்துவந்தான். மனிதனைத்தவிர எந்த மூர்த்தியாலும் கொல்லமுடியாது என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றிருந்தான். தேவர்கள் அசுரர்கள் கொடுக்கும் துன்பத்தை தாங்க முடியாமல் பிரம்மாவிடம் முறையிட்டார்கள். பிரம்மாவும் தேவர்களுடன் சேர்ந்து வைகுண்டத்திற்கு சென்றனர். திருமாலிடம் தங்கள் குறைகளை முறையிட்டு தங்களை காக்குமாறு தேவர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைக்கேட்ட திருமால் தான் தசரத சக்கிரவர்த்திக்கு மகனாக பிறக்கப்போவதாகவும் ஆதிஷேசன், சங்கு, சக்கரம் ஆகியவை எனக்கு தம்பிகளாக பிறக்கப்போகிறார்கள். விரைவில் அரக்கர்களை அழிப்பதாக வாக்குறுதி அளித்தார். இதனை ஞானதிருஷ்டியில் கண்ட வசிஷ்டர் தசரதனிடம் வருத்தப்படவேண்டாம். புத்திர காமேஷ்டி என்னும் வேள்வியை குறையின்றி செய்தால் உன் கவலை தீரும். ஏழு உலகையும் காக்கும் வலிமையுள்ள மகன் பிறப்பான் என்றார்.

இதைக்கேட்ட தசரதர் பெருமகிழ்ச்சி அடைந்து வசிஷ்டரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினார். புத்திர காமேஷ்டி வேள்வியை எப்படி செய்ய வேண்டும் என்று தாங்கள் கூறுங்கள். உடனே அதற்கான ஏற்பாட்டை செய்கிறேன் என்றான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.