துளசிதாசர்

துளசிதாசர் காசியில் கங்கையில் நீராடி விட்டு விஸ்வநாதரை தரிசிப்பார். எப்போதும் ராமநாம செபம் செய்த படி இருப்பார். இரவில் அசுவமேத கட்டிடத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து ராமாயணம் கதாகாலட்சேபம் சொல்வார். ஒவ்வொரு நாளும் அவர் படகில் ஏறி அக்கரைக்கு சென்று கங்கையில் நீர் எடுத்துக் கொண்டு வெகுதூரம் சென்று ஒரு காட்டில் காலைக் கடன்களை கழிப்பார். பின் உடம்பை சுத்தம் செய்து கொண்டு மீதியுள்ள தண்ணீரை ராம நாமத்தை சொல்லி ஒரு ஆலமரத்தில் கொட்டி விடுவார். அந்த ஆலமரத்தில் துர்மரணம் அடைந்த ஆவி ஒன்று வசித்து வந்தது. அது அந்த ராம நாம நீரை குடித்ததும் தாகம் அடங்கி அதற்கு அமைதி கிடைத்தது. இதன் பயனாக விவேகம் வந்தது. இவர் ஒரு பெரிய மகான் என்று தெரிந்து கொண்டது. அந்த ஆவி ஒரு நாள் துளசிதாசர் திரும்பிப் போகும் வழியில் மறைந்து நின்றது. துளசிதாசரின் நடை தடைப்பட்டது. உரக்க ராமா ராமா என்று சத்தமிட்டு கூவினார். அப்போது அந்த ஆவி கூறியது. பெரியவரே பயப்பட வேண்டாம். நான் ஒரு பாவியின் ஆவி. நீங்கள் வார்த்த நீரைக் குடித்து புனிதமானேன். உங்களுக்கு ஏதாவது உதவி செய்ய விரும்புகிறேன் சொல்லுங்கள் என கேட்டது.

துளசிதாசருக்கு மனதில் ஒரே எண்ணம் தானே. ராம தரிசனத்தை காண வேண்டும் என்ற எண்ணத்தில் எனக்கு ராம தரிசனம் கிடைக்க வேண்டும் என்றார். அதற்கு ஆவி இது உங்களுக்கு வெகு சுலபமாயிற்றே என்றது. திகைத்த துளசிதாசர் எப்படி என கேட்டார். அதற்கு ஆவி உங்களிடம் தான் ராமாயணம் கேட்க தினமும் அனுமன் வருகிறாரே என்றது. அவரிடம் கேட்டால் ராம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்வார் என்றது. மேலும் திகைத்த துளசிதாசர் அனுமன் வருகிறாரா எனக்கு தெரியாதே என்றார் துளசிதாசர். ஆமாம் நீங்கள் நாளும் ராமாயணம் கதாகலட்சேபம் செய்யும் போது ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நேரே மக்களுக்கு பின்னால் உட்கார்ந்திருப்பார். நீங்கள் அங்கு வருவதற்கு முன்பே வந்து விடுவார். பிரசங்கம் முடிந்து மக்கள் திரும்பும் போது ஒவ்வொரு வரையும் விழுந்து வணங்கி விட்டு கடைசியில் தான் அவர் செல்வார் என்றது ஆவி. துளசிதாசருக்கு ஆர்வம் மேலிட்டது. அவர் எப்படி இருப்பார் என்று கேட்டார் துளசிதாசர். உடம்பெல்லாம் வெண் குஷ்டம். அசிங்கமாக இருப்பார். யாரும் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது. ஒதுக்க வேண்டும் என்பதற்காகவே அப்படி வருவார். அவர் கால்களை கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு ஆவி சென்றது.

துளசிதாசர் அன்று இரவு சொற்பொழிவின் ஆரம்பத்திலேயே அனுமனை கவனித்து விட்டார். தன் கண்ணெதிரே ஆனால் சற்று தள்ளி தலையில் முக்காடிட்டுக் கொண்டிருந்தார். அன்று பிரசங்கத்தில் சபரியின் கதை. சபரி ராமன் எப்போது வருவாரோ என்று வழிமேல் வழி வைத்து காத்திருக்கிறாள். வழியிலே போவோர் வருவோரை எல்லாம் கேட்கிறாள் புலம்புகிறாள். ராமா என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு நீ தான் கதி. எனக்கு வேறு எதிலும் நாட்டமில்லை. எங்கே சுற்றுகிறாயோ? உனக்கு யாராவது வழிகாட்ட மாட்டார்களா? நீ இங்கு வரமாட்டாயா? உன்னைத் தேடி நான் அலைய வேண்டும். ஆனால் என்னைத் தேடி நீ வர வேண்டும் என நினைக்கிறேனே? நான் உன்னை தேடி வர முடியாதே? யாராவது அழைத்து வர மாட்டார்களா? ராமனை நான் தரிசனம் செய்வேனா? எனக்கு அந்த பாக்கியம் உண்டா? என்று சபரியின் கதையை கூறி விட்டு மயக்கம் அடைந்து விட்டார் துளசிதாசர். சபை முழுவதும் கண்ணீர் விட்டு கதறியது. எங்கும் ராம நாம கோஷம். பின் வெகு நேரம் ஆகியும் துளசிதாசருக்கு மயக்கம் தெளியவில்லை. சிலர் நெருங்கி வந்து மயக்கம் தெளிய உதவி செய்தனர். அத்துடன் சபை கலைந்து விட்டது. பின் வெகுநேரம் கழித்து கண் திறந்து பார்த்தார் துளசி தாசர். எதிரே குஷ்டரோகி வடிவில் அனுமர் நின்று கொண்டிருந்தார். பிரபோ அஞ்சன புத்ரா என்று கதறி அழுது அவருடைய கால்களை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். அனுமன் கால்களை விடுவித்துக் கொண்டார். பின் தாசரை தோளில் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடந்தார். பொழுது விடிந்து விட்டது.

துளசிதாசரை கீழே கிடத்தினார் அனுமன். துளசி தாசரும் கண் விழித்து நான் எங்கிருக்கிறேன் என்று வினவினார். இது தான் சித்ர கூடம் இந்த இடத்திற்கு ராமகிரி என்று பெயர். ராமன் முதன் முதலில் வனவாசம் செய்த இடம். இங்கே அமர்ந்து ராம நாமத்தை செபியுங்கள் செய்யும். ராம தரிசனம் கிடைக்கும் என்று கூறினார் அனுமன். அதற்கு துளசி தாசர் நீங்கள் கூட இருக்க வேண்டும் என்றார். நீங்கள் ராம நாமத்தை சொன்னால் உங்களுடன் நான் இருப்பேன் என்று கூறிய அனுமன் அங்கிருந்து மறைந்து விட்டார். துளசிதாசரும் ராமஜபம் செய்தார். ராமன் வருவாரா? எப்படி வருவார்? லட்சுமணன் கண்டிப்பாக வருவாரா? எப்படி இருப்பார்? தலையில் ஜடா முடியுடன் வருவாரா? அல்லது வைரக் கிரீடம் அணிந்து வருவாரா? மரவுரி தரித்து வருவாரா? பட்டு பீதாம்பரம் அணிந்து வருவாரா? ரதத்தில் வருவாரா? நடந்து வருவாரா? என்றவாரு இடுப்பில் இருந்த துணியை வரிந்து கட்டிக்கொண்டார். கண் கொட்டாமல் இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டிருந்தார். மலைப்பாதை. ஒற்றையடிப் பாதை. இருபுறமும் புதர். அப்பால் ஒரு பாறாங்கல். அதன் மேல் நின்ற கொண்டு ராம ராம என்று நர்த்தனமாடினார். மலை உச்சியிலிருந்து வேகமாக இரண்டு குதிரைகள் ஓடி வந்தன. அவற்றின் மீது இரண்டு ராஜாக்கள் வந்தார்கள். இவர்களை பார்த்த துளசிதாசருக்கு சந்தேகம் வந்தது. வந்தவர்களின் தலையில் தலைப்பாகை. அதைச் சுற்றி முத்துச் சரங்கள். கொண்டை மீது வெண் புறா இறகுகள். வேகமாக குதிரை மீது வந்தவர்கள் துளசிதாசரைப் பார்த்து சிரித்துக் கொண்டே சென்றார்கள். இவர்களை பார்த்த துளசிதாசர் இவர்கள் பெரிய வீரர்கள் என்றாலும் என் ராம லட்சுமணனுக்கு ஈடாவார்களா? தலையில் ரத்ன கிரீடமும் மார்பில் தங்க கவசமும் தங்க ஹாரமும் கையில் வில்லும் இடுப்பில் அம்புராத் தூளியும் கையில் ஒரு அம்பைச் சுற்றிக்கொண்டே என்ன அழகாக இருப்பார்கள் என்று ராமனை தியானித்தவாறே ராம நாமம் சொன்னார்.

துளசிதாசரிடம் சிறிது நேரம் கழித்து வந்த அனுமன் ராம லட்சுமணர்களை பார்த்தீர்களா என்று கேட்டார். திடுக்கிட்ட துளசிதாசர் பார்க்கவில்லையே என்றார். அதற்கு அனுமன் இந்தப் பக்கமாகதானே குதிரையில் சவாரி செய்து கொண்டு வந்தார்கள் என்றார். வந்தது ராம லட்சுமணர்களா ஏமாந்து போனேனே என்று அலறினார் துளசி தாசர். அதற்கு அனுமன் ராமர் உங்கள் விருப்பப்படி தான் வர வேண்டுமா? அவரின் விருப்பப்படி வர கூடாதா? என்று கேட்டார். உடனே துளசிதாசர் சுவாமி மன்னிக்க வேண்டும். ஒன்றும் அறியாதவன் நான். ஏதோ கற்பனை செய்து கொண்டு வந்தவர்களை அலட்சியம் செய்து விட்டேன். இன்னும் ஒருமுறை தயவு செய்யுங்கள். அவர்கள் எந்த வடிவில் வந்தாலும் பார்த்து விடுகிறேன் என்றார். சரி நீங்கள் அருகில் இருக்கும் மந்தாகினி நதியில் இறங்கி நீராடி ஜபம் செய்யுங்கள். ராமரின் தரிசனம் கிடைக்கும் என்றார். துளசிதாசரும் மந்தாகினிக்கு ஓடி நீராடி ராம நாம செபம் செய்தார். வால்மீகியின் ராமாயணத்தை ஒப்புவித்தார். நதியில் நீராடுதல் இதனிடையே இரண்டு நாட்கள் ஆகி விட்டது. ராமாயணத்தில் பரதன் சித்ர கூடத்திற்கு வரும் முன்னால் ராம லட்சுமணர்கள் சித்ர கூடத்தில் வசித்துக் கொண்டு காலையில் மந்தாகினியில் நீராடுகிறார்கள் என்கிற கட்டத்தை படித்துக் கொண்டிருந்தார். எதிரே மந்தாகினியில் குளித்து விட்டு இரண்டு இளைஞர்கள் கரை ஏறி தாசரிடம் வந்தனர். ஒருவன் நல்ல கருப்பு நிறம். மற்றவன் தங்க நிறம். முகத்தில் பத்து பதினைந்து நாள் வளர்ந்த தாடி. சுவாமி கோபி சந்தனம் தங்களிடம் இருக்கிறதா என்று அவர்கள் கேட்டனர். இருக்கிறது தருகிறேன் என்று சந்தனத்தை எடுத்தார். சந்தனம் கேட்டவர்கள்எங்களிடம் கண்ணாடி இல்லை. நீங்களே எங்கள் நெற்றியில் இட்டு விடுங்கள் என்றார்கள்.

துளசிதாசரும் அதற்கென்ன நாமம் போட்டு விடுகிறேன் என்று இடது கையில் நீர் விட்டுக் கொண்டே கோபி சந்தனத்தை குழைத்தார். அந்த கருப்புப் பையன் எதிரே உட்கார்ந்து முகத்தை காட்டினான். துளசிதாசர் இளைஞனின் முகத்தைப் பார்த்ததும் அவனது கண்கள் குருகுருவென்று இவரைப் பார்த்தது. பார்த்தவுடன் மெய் மறந்து சிலை போல் இருந்தார் துளசிதாசர். அந்தப் இளைஞன் இவருடைய கையில் இருந்த கோபி சந்தனத்தை தன் கட்டை விரலில் எடுத்து தன் நெற்றியில் வைத்துக் கொண்டு அவருடைய நெற்றியிலும் வைத்தான். தன்னுடன் வந்தவனுக்கும் வைத்தான். அப்போது அவர்கள் உட்கார்ந்திருந்திருந்த படித்துறைக்கு அருகே இருந்த மாமரத்தில் ஒரு கிளி கூவியது.

சித்ர கூடகே காடபரே பகி ஸந்தந கீ பீர
துளசிதாஸகே சந்தந கிஸே திலக தேத ரகுபீர

பொருள்: சித்ரக் கூடத்துக் கரையில் சாதுக்கள் கூட்டம். துளசிதாசர் சந்தனம் குழைக்கிறார். ராமன் திலகமிடுகிறார்.

துளசிதாசர் கிளியின் சத்தத்தின் பொருளை உணர்ந்து திடுக்கிட்டு சுயநினைவுக்கு வந்தார். துளசிதாசரை என் நெற்றியில் நாமம் சரியாக இருக்கிறதா என்று கேட்டான் அந்த கருப்பு இளைஞன். ராமா உனக்கு இதை விட பொருத்தமான நாமம் ஏது என்று கதறிக் கொண்டே அந்த இரண்டு இளைஞர்களையும் கட்டி அணைத்துக் கொண்டார் துளசி தாசர். மறுகணம் ராம லட்சுமணர்கள் மறைந்தார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.