சமர்த்த ராமதாசர்

சத்ரபதி சிவாஜி வீர சிவாஜி என்றெல்லாம் பேரும் புகழும் பெற்ற சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. நதியில் இறங்கி சிவாஜி தன் கை கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச்சுவடியை எடுத்துப் பார்த்த போது அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி அவரை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அங்கே மர நிழலில் ஒரு பாறையின் மீது இருந்தபடி ஞானி ஒருவர் இனிய குரலில் ராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும் மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த விதமான பயமும் இல்லாமல் அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டு கண்களிலிருந்து நீர் வழிய அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தன. ஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட ராம மந்திர இசை ஓசையில் தாம் ஒரு மன்னர் என்பதையே மறந்தார். அது வரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார். அன்று முதல் அந்த ஞானியை தம் மானசீக குருவாக ஏற்றுக் கொண்டார் சிவாஜி.

ராம நாம மந்திரத்தை சொல்லியபடி ஞானி ஒரு நாள் தனிமையில் இருந்தார். விலங்குகள் எதுவும் அருகில் இல்லை. சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது திருவடிகளில் விழுந்து வணங்கினார். குருநாதா அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள் என வேண்டினார். அப்போது தான் அந்த ஞானியின் பெயர் சமர்த்த ராமதாசர் என்பதை சிவாஜி அறிந்து கொண்டார். சமர்த்த ராமதாசர் சிவாஜிக்கு ராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார். குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் ராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார். ஒரு நாள் சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த ராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க ஒரு பெரும் படையை அனுப்பி வைத்தான். இரவு நேரம் நெருங்கியது. பயணம் செய்து கொண்டிருந்த சிவாஜி காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார். அதன்படியே காட்டில் ஆங்காங்கு கூடாரமிட்டுப் படைவீரர்கள் தங்கினார்கள். சிவாஜி மட்டும் தனிமையை விரும்பிச் சற்றுத் தள்ளியே கூடாரத்தை அமைத்து அதில் தங்கியிருந்தார்.

ராம நாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு ராம மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். எந்த நேரமும் சிவாஜியும் அவரது படையும் கைது செய்யப்படலாம் என்ற அந்தச் சூழ்நிலையில் அந்த இரவு நேரத்தில் காட்டிலிருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன. முகலாயப் படை திகைத்தது. இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய் சின்னாபின்னமாகி ஓடியது. சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. அனுமன் வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார். அதனால் விடிந்ததும் புறப்பட்ட சிவாஜி நேரே போய் சமர்த்த ராமதாசரைத் தரிசித்து வணங்கி நடந்ததையெல்லாம் அவரிடம் கூறி ராமர் தனக்கு அருளியதை எண்ணி பெரு மகிழ்ச்சியில் இருந்தார்.

ராம நாம மந்திரத்தை சொல்லிக் கொண்டிருந்த சிவாஜியைப் பார்ப்பதற்காக சமர்த்த ராமதாசர் ஒரு நாள் அரண்மனைக்கு வந்தார். அந்த நேரத்தில் சமர்த்த ராமதாசரின் தலைமைச் சீடரான உத்தமர் என்பவர் அரண்மனை நந்தவனத்தில் இருந்த பழங்களைப் பறிப்பதற்காக சமர்த்த ராமதாசரிடம் அனுமதி கேட்டார். அதற்கு நானே பறித்துத் தருகிறேன் என்று சொல்லி கீழே கிடந்த கல்லை எடுத்துக் கனிகளின் மீது வீசினார் சமர்த்த ராமதாசர். அந்தக் கல் தவறுதலாக ஒரு பறவை மீது பட்டு பறவை துடிதுடித்துக் கீழே விழுந்து இறந்தது. அதைப் பார்த்து அங்கிருந்தவர்கள் கல்லை எடுத்து அடித்துப் பறவையைப் பரலோகம் அனுப்பிவிட்டாரே இந்த ஞானி என்று பரவலாகப் பேசினார்கள். அதைக்கேட்ட சமர்த்த ராமதாசர் ராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை பாடினார். பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார். அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது. சமர்த்த ராமதாசர் இறந்து போன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும் பரவியது. அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது. அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகியிருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். அப்படிப்பட்ட அந்த மன்னன் தான் சமர்த்த ராமதாசரைப் பணிந்து என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள் என வேண்டினான். சமர்த்த ராமதாசரும் பார்த்தார். இந்த மன்னனை நல்வழிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அவர் மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ராம பஜனை செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த ராமதாசர். இந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த ராமதாசரிடம் வழி கேட்டான். அதற்கு ராமதாசர் மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ராம் ராம் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டார். அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம் மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ராம் ராம் எனச் சொல்லிக் கொள்ள அரசன் உத்தரவிட்டான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.