இவரது பூர்விகம் வடநாட்டிலிருந்து வந்தவர் என்று கூறப்படுகிறது. திருவொற்றியூர் சுடுகாட்டில் சுடுகாட்டுச் சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு திகம்பரராக திரிந்தவர் இவர். சித்தரென்று அறியாமல் இவரைப் பித்தனென்று ஏசியும் கல்லெறிந்தும் விரட்டிய போதெல்லாம் அனைத்தையும் ஒரு புன்னகையுடன் ஏற்றுக் கொண்டவர் இவர். இவரது நிர்வாணக் கோலத்தைக் கண்ட காவல் துறையினர் ஒருநாள் இவரைப் பிடித்துப் போய் காவல் நிலையத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். இரவு நேரத்தில் காவலர் ஒருவர் அந்த அறையினுள் எட்டிப் பார்த்த போது சுவாமிகளின் உடல் பாகங்கள் தனித் தனியாகக் கிடப்பதைக் கண்டு திடுக்கிட்டுத் தனது மேலதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து பார்த்த போது சுவாமிகள் முழு உடலுடன் அவர்களைப் பார்த்து நகைத்தார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் சுவாமிகளின் பெருமை வெளி உலகிற்கு தெரிந்தது.
சுவாமிகளுக்கு சாலையோரக் கடைகளில் தேநீர் குடிப்பது மிகவும் பிடித்தமானது. அருகிலிருந்த கடைக்காரர் ஒருவர் தினமும் அதிகாலையின் முதல் தேநீரை சுவாமிகளுக்குக் கொடுத்துவிட்டுத் தான் வியாபாரத்தை துவங்குவார். வீரராகவ சுவாமிகள் ஏதேனும் ஒரு வீட்டின் முன் நின்று உணவு கேட்டால் அந்த வீட்டிலிருக்கும் துன்பங்கள் நீங்கிவிடும் என்று இப்பகுதி மக்களிடம் ஒரு நம்பிக்கை இருந்தது. பல அதிசயங்களைச் செய்து பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்த சுவாமிகள் தாம் சமாதியாகும் நாளை முன்னதாகவே தெரிவித்து தமது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்ய வேண்டிய லிங்கத்தையும் அடையாளம் காட்டினார். 1964 ஆம் ஆண்டு சித்திரை மாதம் முதல் தேதி சதய நட்சத்திரத்தில் தமது உடலிலிருந்து ஆன்மாவை நீக்கிக் கொண்டார். அவரது சமாதியின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்கத்தை, இங்கு வரும் பக்தர்கள் தொட்டு வணங்கவும் தாங்களாகவே அபிஷேகம் செய்யவும் பூஜை செய்யவும் இங்கு அனுமதிக்கப்படுகிறது. சுவாமிகளை தரிசிக்க திருவொற்றியூரில் எண்ணூர் முதன்மை சாலையில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டின் வெளி காம்பவுண்டில் சுவாமிகளின் ஆலயம் அமைந்துள்ளது.
