போகர்

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி வேறு செய்திகள் இல்லை. அகத்தியரின் சீடனாக இருந்தார். திருமூலரின் சீடரான நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவராகவும் இருந்தார். இவர் பதினெட்டு சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு நவசித்தர்களே பிரதானமாகக் கருதப்பட்டனர். மேரு மலையும் இமய மலையும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு இடமாகவே விளங்கியது. இங்கே தான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர் காலாங்கி நாதர். போகர் வந்த சமயம் அவர் மகாசமாதியில் இருந்தார். போகர் சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும் வானவெளியில் பறப்பது நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால் அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள் என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார். இதனால் இமய மலையில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர் நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார். மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம் போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண் விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள் பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது. அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி தான் கற்ற தாதுவித்தை எல்லாம் அந்த தவத்தின் முன்னால் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள் போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள். ஒரு சித்தர் போகர் மீது பெரும் கனிவு கொண்டு அமிர்தமணிப்பழம் என்னும் தேவக்கனி மரம் ஒன்றை காட்டி அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள் முழுக்க பசிக்காது நரைக்காது முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை சாப்பிட்டு விட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறினார்கள்.

போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய பசி தாகம் மூப்பு என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார். தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் போகர் ஏழாயிரம் போகர் நிகண்டு 17000 சூத்திரம் 700 யோகம் போன்றவை. நோயின்றி வாழ வைக்கும் பல அரிய குறிப்புகளை எழுதினார். இதனால் இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர். சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர் அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார். அந்த மந்திரம் தம்பணா மந்திரம் எனப்படுகிறது அமிர்தத்துக்கு இணையான ஆதி ரசத்தையே இவர் கண்டறிந்தார். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர். தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குவதற்காக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர் போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவே செய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள் குளிகைகள் பெற்றுச் சென்றனர். மொத்தத்தில் மனித சமூகத்தை இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார். அண்டை நாடான சீன தேசமும் நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும் புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால் மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது. அங்கே போ யாங் என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள் கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து சீனராகவே வாழ்ந்தார். போகர் தமிழில் ஏராளமான நூல்களை இயற்றியிருந்த போதும் அவற்றைவிட அதிகமாக சீன மொழியில் எழுதியுள்ளார். அகத்தியர் தமது சௌமிய சாகரத்தில் போகர் இயற்றிய நூலின் பட்டியலைத் தருகிறார்.

  1. போகர் – 12,000
  2. சப்த காண்டம் – 7000
  3. போகர் நிகண்டு – 1700
  4. போகர் வைத்தியம் – 1000
  5. போகர் சரக்கு வைப்பு – 800
  6. போகர் ஜெனன சாகரம் – 550
  7. போகர் கற்பம் – 360
  8. போகர் உபதேசம் – 150
  9. போகர் இரண விகடம் – 100
  10. போகர் ஞானசாராம்சம் – 100
  11. போகர் கற்ப சூத்திரம் – 54
  12. போகர் வைத்திய சூத்திரம் – 77
  13. போகர் மூப்பு சூத்திரம் – 51
  14. போகர் ஞான சூத்திரம் – 37
  15. போகர் அட்டாங்க யோகம் – 24
  16. போகர் பூஜாவிதி – 20

இவைகளில் போகர் 12000 மற்றும் இரண வாகடம் நூல்கள் கிடைக்கவில்லை. போகரின் நூல்கள் யாவுமே அமுதமாகும் என்று காக புஜண்டர் தமது பெருநூல் காவியம் 144வது பாடலில் கூறியுள்ளார். அவர் இயற்றிய சப்தகாண்டம் என்ற நுலில் 1799 1800 ஆம் பாடலில் விமான தொழில் நுட்பத்தை பற்றிய குறிப்பையும் அதை எப்படி செய்யவேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாக கூறிப்பிட்டிருக்கிறார் அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி இஞ்சின் (steam engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் மாடலையும் குறிப்பிட்டிருக்கிறா­ர்.

போகர் தான் உருவாக்கிய மரக்கப்பலில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். அதன்படி ஒரு மரக்கப்பல் 2400 அடி நீளம் 300 அடி அகலம் 300 அடி உயரம் 7 மாடிகள் 64 அறைகள் அவற்றிற்கு கிழக்கும் மேற்குமாய் வாயில்கள் தெற்கும் வடக்குமாக ஜன்னல்கள் ஒவ்வொரு மாடியிலும் 128 வாயில்கள் இவற்றை சிந்தித்து பார்த்தால் ஒரு அரண்மனை போல் இருக்கும். இந்த கப்பல் நீராவியின் மூலம் இயங்கும் தொழில் நுட்பத்தில் செய்திருக்கிறார். சீனாவில் இருந்தபோது அமைத்த அந்த கப்பலில் சீன மக்களையும் ரிஷிகள் பலரையும் ஏற்றிக்கொண்டு உலகைச் சுற்றி ஏழு கடல்களையும் காண்பித்ததாக பல பாடல்களின் மூலமாக அறிந்து கொள்ளலாம். போகர் தனது மரக்கப்பலில் உலகைச் சுற்றிய அனுபவம் உலகுக்கும் பற்பல அறிவியல் நன்மைகளை வழங்கின. நிலம் ஒரு பங்கு நீர் மூன்று பங்கு என்று புவிச்சூழல் அமைப்பை முதலில் சொன்னவர் போகர். கடல் பயணத்தின் போது கடும் பாறையை பாயும் சுறாவைக் கண்டறிந்து விலகிச் செல்ல கப்பலுக்குள் கண்ணாடிக் கருவி கண்டுபிடித்து அமைத்திருந்தார் போகர்.

போகர் தான் உருவாக்கிய விமானத்தில் என்னனென்ன எப்படி இருக்கிறது என்று தன்னுடைய நூலில் விவரித்திருக்கிறார். இதற்கு அவர் பட்டம் என்று பெயரிட்டிருக்கிறார். 30 அடி நீளம் 30 அடி அகலம் என சதுர பரப்பில் பட்டம் செய்தார். ஒரு குடை ராட்டினம் போல் அதை அமைத்து பறக்க வைத்தார். காந்த கொலுசுகளும் நார்ப்பட்டு கயிறுகளையும் வைத்து உருவான தொழில்நுட்பத்தில் பட்டம் செய்து பறக்கவிட்டார். மக்களை ஏற்றிக் கொண்டு முதலில் முப்பது மைல் தூரம் பறந்து இருக்கிறார். போகர் இந்த பட்டத்தின் துணையுடன் சென்ற நாடுகள் அதன் வழியாக சித்தர்கள் அதிகமான பாடங்களை கற்றிருக்கிறார்கள். இதனைப் பற்றி சித்தர்கள் பாடல்கள் பல உள்ளன. பட்டம் தயாரிப்பதற்காகவே போகர் அஸ்வினி மகரிஷியை சந்தித்ததாக புலிப்பாணியார் ஒரு பாடலில் சொல்லியிருக்கிறார். அஸ்வினி மகரிஷி பஞ்சலோகத்தை உருக்கிச் செய்தவர். போகரின் பெருமைகளையும் திறமைகளையும் அஸ்வினி மகரிஷி ஏற்கனவே அறிந்திருந்ததால் போகரை வாழ்த்திப் போற்றியதோடு தான் வைத்திருந்த ஆகாயப் புரவியையும் அதிலிருந்த தொழில்நுட்பத்தையும் அதற்கேற்ற சித்த மந்திரங்களையும் சொல்லிக் கொடுத்தார். இந்த பட்டம் பறக்கும் போது ஒளி பொருந்திய சிவரதம் போல் இருக்குமாம். இந்த வானரதம் தயாரித்த போகர் அன்பர்களை நண்பர்களை ஏற்றிக்கொண்டு உலகம் சுற்றி வந்தார்.

தானான ரோமாபுரி சுற்றி வந்தேன்
தக்காண எண்ணாயிரம் காதமப்பா
வேனான சித்தர்களை ஏற்றிக்கொண்டு
வேகமுடன் தானடத்தி வந்தேனப்பா
கோடி பேர் சமாதிநிலை தன்னைக் கண்டேன்
கொற்றவனாம் ரோமாபுரி சமாதியோரம்.

இப்படித் தொடர்கிறது போகரின் வான்வெளிப் பயணம். போச்சா என்பவர் தென் அமெரிக்கா வந்து எண்ணற்ற சீர்திருத்தங்கள் செய்ததாக கலாச்சார மாற்றம் ஏற்படுத்தியதாக எழுதி வைத்திருக்கிறார். சிலி நாட்டு வரலாற்றாசிரியர் மைகாஸ் என்பவர் தன் வரலாற்று ஆய்வின் மூலம் அந்த போச்சா என்பவர் தான் போகர் என்கிறார். வெப்பக் காற்றை நிரப்பி உயரே பறக்கும் பலூனை போகர் கண்டுபிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் கூண்டு வித்தை. பாராசூட்டை கண்டு போகர் பிடித்தார். அதற்கு அவர் வைத்த பெயர் குடை வித்தை.

போக சித்தருக்கு 63 சீடர்கள் இருந்தனர். பொதிகை மலைச்சாரலில் போகர் தங்கியிருந்த போது ஒரு நாள் இரவு நீர் வேட்கையால் அருகிலிருந்த சிற்றூருக்குச் சென்றார். ஒரு வீட்டுத் திண்ணையில் கும்பலாக அந்தணர்கள் அமர்ந்து வேதம் ஓதிக் கொண்டிருந்தனர். போகர் அவர்களிடம் தாகத்திற்கு தண்ணீர் கேட்டார். யார் நீ அந்தப்பக்கம் போ அருகில் வந்தாலே நாற்றமடிக்கிறது என்று எரிந்து விழுந்தனர். போகர் அவர்களின் அறியாமையைக் கண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட நினைத்து அந்த வழியாக வந்த பூனை ஒன்றின் காதில் போகர் வேதத்தை ஓதிவிட்டார். பூனை நன்றாக உட்கார்ந்து கொண்டு உரத்த குரலில் வேதத்தை ஓதத் தொடங்கியது. அந்தணர்கள் தாங்கள் அறியாமல் செய்த அவமதிப்பை பொறுத்தருளும்படி வேண்டினர். ஐயனே எங்கள் வறுமை அகல தாங்கள் வழி செய்ய வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர். போகர் அவர்களுடைய வீடுகளில் இருந்த உலோகங்களால் ஆன பொருட்களை எல்லாம் தன்னிடம் இருந்த ஆதி ரசத்தால் பொன்னாக மாற்றி அவர்களை மகிழ்வித்தார். போகர் பழனி மலையில் கடும் தவத்தில் ஈடுபடத்துவங்கினார். அவருடைய தவத்தின் பயனாக முருகப் பெருமான் அவர் முன் காட்சியளித்தார். அப்பொழுது போகரிடம் முருகப்பெருமான் பழனி மலையில் தன்னை மூலவராக வடிவமைத்து விக்கிரகமாகச் செய்து அதை எப்படி பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்பதையும் கூறி காரியசித்தி உபாயத்தையும் சொல்லி மறைந்தார். போகர் முருகப்பெருமான் சொன்னபடியே நவபாசாணம் என்னும் ஒன்பது விதமான கூட்டுப்பொருட்களைக் கொண்டு பழனி ஆண்டவர் தண்டாயுதபாணி சிலையைச் செய்து முடித்து அவர் சொன்ன வண்ணமே பிரதிஷ்டை செய்தார். இதே மாதிரியான நவபாஷாண மூர்த்தியான திருச்செங்கோடு அர்த்த நாரீஸ்வரரையும் போகர் உருவாக்கினார். பழனியில் சிலகாலம் வாழ்ந்த போகர் அங்கேயே சமாதியடைந்தார். அவரது சமாதி பழனி ஆண்டவர் ஆலயத்தின் உட்பிரகாரத்தின் தென்மேற்கு மூலையில் உள்ளது. போகர் பூசித்து வந்த புவனேச்வரி அம்மையின் திருவுருவம் பழனியாண்டவர் சந்நிதியில் இன்றும் உள்ளது. போகரின் சமாதி அமைந்துள்ள இடத்திற்கும் புவனேச்வரி அம்மன் சந்நதிக்கும் இடையே சுரங்கப் பாதை ஒன்று உள்ளது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.