கருவூரார்

சிவலிங்கத்தை தழுகிய நிலையில் ஈசனோடு ஐக்கியமானவர் கருவூரார் சித்தர். அன்பு பூண்ட சித்தர்களிடமும் முனிவர்களிடமும் இளமையிலேயே ஞானப்பால் உண்டவர். இதற்கு சான்று கருவூராருக்கு கருவான ஞானப்பால் அழித்தபோதே என்ற அகத்தியர் 12000 நூல் விரிவாக கூறுகிறது.

சங்ககால சேர நாட்டு தலைநகர் வஞ்சி எனப்பெறும் கருவூரில் பிறந்தார் கருவூரார். கருவூராரின் தாய் தந்தையார் ஊர் ஊராகச் சென்று ஆங்காங்குள்ள கோவில்களில் விக்ரகங்கள் செய்யும் தொழில் செய்து கொண்டு வாழ்ந்து வந்தார்கள். அதனால் கிடைத்த பொருள் கொண்ட முனிவர்களுக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொடுப்பார்கள். கருவூரார் செம்பு பித்தளை உலோகங்களை கொண்டு தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தவர் என்றும் இவர் போகரின் சீடர் என்றும் அகத்தியர் 12000 என்னும் பெருநூல் கூறுகிறது. சிறிய வயதிலேயே ஞான நூல்களைக் கற்று அம்பிகையிடம் மாறாத பக்தி கொண்டவர் கருவூரார். இவரது பக்தியை கண்டவர்கள் இவருக்கு இனி பிறவி இல்லை. இனி இவர் எக்கருவிலும் ஊரார் எனவே இவர் கருவூரார் என்று வியந்து கூறினார்கள். இதுவே இவரது பெயர் ஆயிற்று. இளம் வயதிலேயே வேதம் மற்றும் ஆகமங்களைக் கற்று தேர்ந்து மானுட வாழ்வின் நிலையாமையை உணர்ந்து காய சித்தி மாய சித்தி அதிகம் நிறைந்த மாமுனியாக திகழ்ந்தவர். போகரை குருவாகக் கொண்டு உபதேசம் பெற்றார். போகரை கருவூரார் சந்தித்த போது உனக்கு அம்பிகையே சரியாக வழிகாட்டுவாள் என்று ஆசீர்வாதம் செய்தார். ஞான நூல்கள் பலவற்றையும் ஆராய்ந்து சிவயோக முதிர்வு பெற்றார். புறக்கருவிகளாகிய ஞானேந்திரியங்கள் கன்மேந்திரியங்களை அதன் போக்கில் போக விடாமல் உள்ளிழுத்து அகக் கருவியாகிய சித்தத்தினை சமாதியில் இறுத்தி வெற்றி பெற்று அட்டமா சித்தி பெற்ற சித்தர் கருவூரார் ஆவார்.

வசியம் மோகனம் தம்பனம் உச்சாடனம் ஆக்ருசணம் பேதனம் மாரணம் எனும் அஷ்ட கர்ம மந்திரங்கள் அனைத்தையும் கற்று உணர்ந்தார் கருவூரார். ஒருநாள் கருவூரார் முன் ஒரு காகம் தன் காலில் கவ்வியிருந்த ஒரு ஓலையை வைத்தது கருவூரார் ஆச்சரியத்துடன் அந்த உரையை வாசித்தார். கருவூராரே நீர் உடனே தன்னை வந்து சேரும் என்று இருந்த அந்த ஓலையில் இருந்தது. அந்த ஓலையை அவரது குருவான போகர் எழுதி இருந்தார். தஞ்சையை ஆண்ட இராஜராஜ சோழ மன்னனுக்கு ஒரு சங்கடம் ஏற்பட்டிருந்தது அதனைப் போக்கவே அவரை அழைத்து இருந்தார். தஞ்சையில் சோழ மன்னன் ஒரு பிரம்மாண்டமான சிவாலயம் கட்டுகிறான். அற்புதமான அந்த ஆலயத்தில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ய முயன்று பந்தனம் செய்ய முடியாமல் மருந்தானது வழிந்து கொண்டே இருக்கிறது. சோழ மன்னனுக்கு இதற்கான காரணம் புரியவில்லை .இந்த குறை தீர்க்கவே கருவூரார் அழைக்கப்பட்டிருந்தார்.

கோவிலுக்குள் நுழைந்த கருவூரார் சிவலிங்கத்தின் அருகில் சென்று பார்த்த போது அங்கு அஷ்ட பந்தனம் செய்ய விடாமல் ஒரு பிரம்ம ராட்சசி தடுத்துக் கொண்டு இருப்பதைக் கண்டதும் மந்திர உச்சாடனம் செய்து அதன் மீது காறி உமிழ்ந்தார். கருவூராரின் வாயில் எச்சில் பட்டு பொசுங்கி கருகியது பிரம்ம ராட்சசி. பக்தர்கள் கருவூராரின் அசைவுகளையும் கோபக்கனல் பொங்கும் கண்களையும் கவனித்தார்கள். ஆனால் என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியவில்லை. இப்போது லிங்கத்தை அஷ்டபந்தனம் சாத்தி பிரதிஷ்டை செய்யுங்கள் என்று அர்ச்சகர்களிடம் சொன்னார் கருவூரார். அர்ச்சகர்களும் அவ்வாறே செய்ய லிங்கம் தனது இடத்தில் அமர்ந்தது. மேலும் அதில் இருந்து வெளிப்பட்ட ஜோதி கருவூராரின் நெஞ்சில் பாய்ந்தது. கருவூரார் இனம்புரியாத பரவசநிலைக்கு ஆளானார். அதன் பிறகு அவர் அஷ்ட பந்தனம் செய்து சிவலிங்கப் பிரதிஷ்டையும் அபிஷேகம் செய்து வைத்தார். அப்போது கருவூரார் அண்ட ரண்ட மந்திரத்தை உபதேசித்தார். சிவபெருமானின் ஐந்து முகமாகவே ஈசானம் தத்புருஷம் அகோரம் வாமதேவம் சத்தியோசாதம் என்பதை அகோரம் எனப்படுவது தான் அண்டரண்டம் மந்திரம்.

தில்லையம்பலமாகிய சிதம்பரத்துக்கு வடநாட்டை ஆண்ட இரணியவர்மன் ஒருமுறை வந்தான். சிவகங்கை தீர்த்ததில் நீராடிக் கொண்டிருந்தான். அப்போது தண்ணீருக்குள் சிவனின் நாட்டியக் காட்சியை கண்டான். அக்ககாட்சி அவனை பெரும் பரவசப்படுத்தியது. தண்ணீரில் இருந்து எழுந்து மீண்டும் தண்ணீருக்குள் மூழ்கி கண்களைத் திறந்து பார்த்தான். அங்கே யாரையும் காணவில்லை. சிவனின் நாட்டியக்காட்சி அவன் நெஞ்சை  விட்டு அகல மறுத்தது. எப்படியாவது இந்த நடன சிவனை சிலையாக வடிக்க வேண்டும். அதுவும் தங்கத்தில் வடித்தால் அது பூமி உள்ளளவும் நம் பெயர் சொல்லும் என்று எண்ணினான்.

சிற்பிகள் அனைவரையும் வரவழைத்தான். தங்கத்தை அள்ளி அள்ளிக் கொடுத்து நான் கண்ட காட்சியைக் கூறி நடன சிவன் சிலையை 48 நாட்களுக்குள் வடிக்க வேண்டுமென்றும் அதற்குள் சிலை வடிக்காவிட்டால் அவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பேன் என்றும் உத்தரவிட்டான். சிற்பிகளும் வேலையை தொடங்கினர். தங்கத்தை வளைக்க வேண்டுமென்றால் சிறிதளவு செம்பு சேர்க்க வேண்டும். மன்னனோ எக்காரணம் கொண்டும் செம்பு சேர்க்கக் கூடாது என்றும் என்ன வித்தை செய்தாவது தூய தங்கத்தை வளைத்தே சிலை செய்ய வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருந்தான். சிற்பிகளும் ஒரு தைரியத்தில் வேலையைத் தொடங்கி விட்டனர். 47 நாட்கள் கடந்து விட்டது. யாருக்குமே சிலை சரியாக வரவில்லை. நாளை மன்னன் வருவார். அவர் சிலையை எங்கே என்று கேட்டால் என்ன செய்வது? சிறையில் அடைத்து விடுவாரே என்று சிற்பிகள் பயந்தனர். இந்த சம்பவம் போகரின் சித்தத்திற்கு எட்டியது. அவர் திருவூராரை அழைத்து சிதம்பரத்தில் நடந்து கொண்டிருக்கும் விஷயத்தை விளக்கினார். கருவூரா நீ உடனே சிதம்பரம் செல். அந்த சிலைப் பணியை முடித்துக் கொடு என்றார். கருவூரார் கண்ணிமைக்கும் நேரத்தில் சிற்பிகள் முன்பு நின்றார். சிற்பிகளே உங்கள் மனக் கலக்கத்தை நான் அறிவேன். நீங்கள் எதற்கும் கலங்க வேண்டாம். இன்னும் இரண்டே நாழிகையில் சிலையை நான் தயார் செய்து விடுகிறேன் என்றார். அதற்கு சிற்பிகள் துறவியே நீங்கள் யாரோ எவரோ? சிவனின் அடியார் போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் தமிழகத்தின் பெரும் சிற்பிகள். எங்களாலேயே 48 நாட்களில் செய்து  முடிக்க முடியாததை உங்களால் எப்படி இரண்டு நாழிகையில் சாதிக்க முடியும்? என்று கேட்டார்கள். உங்களுக்கு மாயமந்திரங்கள் தெரியுமா? மனம் நொந்து போயுள்ள எங்களை புண்படுத்துகிறீர்களா? அடியாரான உங்களுக்கு இது அழகா? என கோபமாகக் கேட்டனர். அவர்கள் அப்படி சொன்னதற்காக பண்பட்ட மனம் கொண்ட கருவூரார் கோபிக்கவில்லை.

கருவூரார் தன்னால் இயலும் என்று தன் வாதத்தில் உறுதியாக இருந்தார். ஒரு நாள்தான் இருந்தபடியால் வேறுவழியில்லாமல் சிற்பிகளும் சம்மதித்தார்கள். கருவூரார் தான் சிலை செய்யும் அறைக்கு யாரும் உள்ளே வரக்கூடாது என கட்டளையிட்டார். சொன்னபடி இரண்டு நாழிகையில் அறைக் கதவு திறந்தது. சிற்பிகளே உள்ளே போய் பாருங்கள். சிலை தயாராகி விட்டது என்றார். சிற்பிகள் ஓடிச்சென்று பார்த்தார்கள். நடராஜப் பெருமான் ஜொலித்தார். இப்படி ஒரு சிலையை எங்கள் வாழ்வில் பார்த்தில்லையே என சிற்பிகள் ஆச்சரியமடைந்தனர். அந்த ஆனந்த சிவனைப் போலவே இவர்களும் தாண்டவமாடினர். கருவூராரிடம் கோபப்பட்டதற்காக மன்னிப்பும் கேட்டனர். மறுநாள் மன்னன் இரணியவர்மன் வந்தான். நடராஜரைப் பார்த்ததும் தான் கண்ட காட்சி எப்படி இருந்ததோ அப்படியே சிலை வடித்தமைக்காக சிற்பிகளை மிகவும் பாராட்டினான். அந்த நேரத்தில் அமைச்சர் இந்த சிலை தூய்மையான தங்கத்தில் செய்யப்பட்டதா என்று சந்தேகத்தைக் கிளப்பினார்.

மன்னன் தங்கத்தை பரிசோதிக்க அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார். அமைச்சர் அதிகாரி வந்து சோதிக்க கட்டளை இட்டார். சிலை பரிசோதிக்கப்பட்டது. அதிகாரி அமைச்சரிடம் அரசே இது முழுமையான தங்கச் சிலை இல்லை. இதில் குறிப்பிட்ட அளவு செம்பு கலக்கப்பட்டிருக்கிறது என்றார். அமைச்சர் கொதித்துப் போனார். அரசரிடம் ஓடிவந்தார். மன்னா தங்களையே இந்த சிற்பிகள் ஏமாற்றி விட்டார்கள். சிலையில் செம்பு கலக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் முழுமையான தங்கச்சிலை வேண்டும் என்ற தங்களது உத்தரவு மீறப்பட்டிருக்கிறது. மேலும் எஞ்சிய தங்கம் எங்கே என்ற கேள்வியும் எழுகிறது. தாங்கள் தகுந்த விசாரணை நடத்தி இந்த சிற்பிகளைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றார். சிற்பிகள் நடுங்கி விட்டனர். மன்னரின் காலடியில் விழுந்தனர். மன்னா தவறு நடந்து விட்டது. நாங்கள் இதோ நிற்கிறானே இந்தத் துறவியை நம்பி மோசம் போனோம். நடராஜ பெருமானின் சிற்பத்தை வடிக்க சுத்த தங்கத்தால் பல நாள் முயற்சித்தோம். நாங்கள் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை. கடைசி நேரத்தில் வந்த இவன் சில நாழிகைகளுக்குள் சிலைப் பணியை முடித்து விட்டான். அதுகண்டு நாங்களே ஆச்சரியம் கொண்டோம். இந்த அதிசய செயல் கண்டு அவனைக் கொண்டாடினோம். அவன் தனிமையில் அந்த அறையில் அமர்ந்து சிலை செய்தான். எங்களை அனுமதிக்கவில்லை. எனவே என்ன நடந்ததென்றே எங்களுக்கு தெரியவில்லை. எங்களை மன்னித்து விடுவியுங்கள் என்று கதறினர். மன்னனுக்கு கோபம் அதிகமானது.

துறவி வேடமிட்டு தங்கத்தை அபகரித்த அந்தக் கயவனை இழுத்துச் செல்லுங்கள். சிறையில் தனியறையில் வைத்து சித்ரவதை செய்யுங்கள். இந்த சிற்பிகளையும் விசாரணை முடியும் வரை சிறையில் வையுங்கள் என்றான். எல்லாச் சிற்பிகளும் கை கூப்பி தில்லையம்பல நடராஜரை வணங்கி பிரார்த்தித்தவாறு சென்றனர். இந்தத் தகவல் போகர் சித்தரின் சித்தத்துக்கு எட்டியது. அவர் தன் சீடர்களுடன் வானமார்க்கமாக கணநேரத்தில் தில்லையம்பலத்தை அடைந்தார். கோபமாக இரணியராஜன் முன்பு தோன்றினார். தன் முன்னால் திடீரென கோபக்கனல் பொங்க நின்ற ஒரு துறவியைக் கண்டு அதிசயித்தனர் இரணியராஜன். நான் போக சித்தர் என்ன காரணத்தினால் என் சீடனை சிறையில் அடைத்தாய். தங்கத்தை வளைக்க செம்பு தேவை என்ற அடிப்படை ஞானமில்லாத நீ இப்படிப்பட்ட முட்டாள் தனங்களைச் செய்வாய் என்பதிலும் ஆச்சரியமில்லை தான் இருப்பினும் குற்றமற்ற என் சீடன் செய்த செயலை மனதில் கொள்ளாமல் என் சீடனிடம் தக்க விசாரணை செய்யாமல் சிறையில் தள்ளி விட்டாய். மூடனே அவனை உடனே வெளியே அனுப்பு என்றதும் இரணியரஜன் கலங்கி விட்டான். சித்தரே தங்கள் தரிசனம் கிடைக்க என்ன பாக்கியம் கிடைக்க என்ன பாக்கியம் செய்தேன். தங்கள் சீடனை வேண்டுமென்றே அடைக்கவில்லை. தங்கத்தால் சிலை செய்ய முடியாது என்ற தகவலை சிற்பிகள் பயத்தில் மறைத்திருக்கின்றனர். தங்கள் சீடர் கருவூராரும் ஒன்றும் சொல்லாமல் சிலையை செய்யவே இப்படி செய்து விட்டேன் என்னை மன்னியுங்கள் என்றான். இப்போதே என் பக்தனை விடுதலை செய் என்று போகர் கூற மன்னன் விடுதலை செய்ய கட்டளையிட்டான். காவலர்கள் சிறைக்குச் சென்றனர். அங்கே கருவூர் சித்தரைக் காணவில்லை. அவர்கள் ஓடிவந்து தகவல் கூறினர்.

கருவூரான் இன்னும் ஒரு நாழிகைக்குள் வந்தாக வேண்டும். தங்கத்துக்காக தானே அவனை சிறையில் அடைத்தாய். இதோ பிடி தங்கம் அந்த சிலையையும் விட மேலான அளவுக்கு உனக்கு நான் தங்கம் தருகிறேன் என்ற போகர் நடராஜர் சிலையின் எடைக்கும் மேலாக தங்கத்தை அங்கே உருவாக்கி இதோ நீ விரும்பும் தங்கம் எடுத்துக் கொள் என் சீடனை என்னிடம் ஒப்படைத்துவிடு என்றார். மன்னன் நடுங்கினான். தில்லையம்பல நடராஜரை மனம் உருகி வேண்டினான். அவனது நிலையை கண்ட போகர் இரணியராஜா கலங்காதே. கருவூரான் சிறையில் தான் இருக்கிறான். சித்தர்களுக்கே உரித்தான சில யோகங்கள் மூலம் அவன் தன்னை மறைத்துக் கொண்டிருக்கிறான். நான் அழைத்தால் வருவான் என்று கருவூரா வெளியே வா என்றார் போகர். அக்கணமே அவர் முன்னால் வந்த கருவூரார் குருவே தாங்கள் கற்றுக் கொடுத்தபடி குறுகிய இடைவெளி வழியே வெளியே வரும் கலை மூலம் சிறையில் இருந்து வெளிப்பட்டேன் என்றார். பின்னர் போகர் மன்னனிடம் நடராஜர் சிலை அமைய வேண்டிய முறை கோயில் எழுப்ப வேண்டியே முறை ஆகியவற்றை போதித்து கருவூராருடன் மறைந்து விட்டார்.

வேத கோஷம் முழங்க அரங்கனை தரிசிக்க வந்தார் கருவூரார். அரங்கனைக் கண் குளிர தரிசித்து முடித்து வெளியே வந்தார். அப்போது நாட்டியம் ஆடும் அபராஞ்சி என்ற ஒரு தாசி அவரது காலடியில் விழுந்தாள். கருவூரார் என்ன விஷயம்? என்பது போல் ஒரு பார்வையில் கேட்டார். சற்று முன் கேட்ட வேத கோஷத்தில் யோக சாதனையில் தனக்குள்ள சில ஐயங்களைத் தீர்க்கச் சொல்லிக் கேட்டாள். இப்படியும் ஒரு தாசியா? பாட்டுக்கு நடனம் மட்டுமே ஆடாமல் அதன் பொருளையும் கேட்ட விதம் அவருக்கு மிகவும் பிடித்து விட்டது. அவள் ஆர்வத்தைப் பாராட்டி ஐயத்தை அங்கேயே தீர்த்து வைத்தார். ரங்கநாதரைப் பார்த்து உன் கழுத்து பவழ மாலையை என்னிடம் கொடு என்று கேட்டார். அடுத்த நிமிடம் அரங்கன் தன் கழுத்தில் இருந்த மாலையை கரூராரிடம் கொடுத்தார். அபரஞ்சி உனது கேள்வியால் என்னை வியப்பில் ஆழ்த்தி விட்டாய். ஆகையால் இதை என் பரிசாக வைத்துக் கொள். நீ எப்போது நினைத்தாலும் நான் வருவேன் என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டார். மறுநாள் காலை கோயிலுக்குள் வந்த அபரஞ்சியின் கழுத்தில் அரங்கனின் பழவ மாலை இருந்ததை கண்டு அவள் மீது ஆளுக்கு ஒன்றாய் குற்றச்சாட்டு வைத்தார்கள். கருவூரார் கொடுத்த பரிசு என்பதை அபரஞ்சி கூறி கருவூராரை மனதால் வேண்டினாள். கேள்விக்கு விளக்கம் சொல்லி அரங்கனின் மாலையை கொடுத்து விட்டு சென்றீர்கள். திருட்டு பட்டம் வந்து விட்டது என்று அழுகிறாள். கருவூரார் அங்கே மீண்டும் வந்து அரங்கனை சாட்சிக்கு அழைத்தார். அரங்கன் அசரீரியாய்ச் சாட்சி உரைத்தார். திருவரங்கக் கோயில் நிர்வாகத்தினர் அபரஞ்சியிடமும் கரூராரிடமும் மன்னிப்பு கேட்டார்கள்.

கருவூரார் நெல்லையப்பரிடம் ஒன்றாக கலந்ததற்கு இரண்டு விதமான வரலாறு உள்ளது. முதல் வரலாறு. கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கிருந்த வேதியர் ஒருவர் கருவூரார் ஊருக்குள் வந்திருப்பதை அறிந்து கொண்டார். பழைய பகை காரணமாக மன்னனிடம் சென்று முறையிட்டனர் . கரூராரை கொன்று விட மன்னர் உத்தரவிட்டார். கருவூரார் பயந்தவர் போல கோயிலை நோக்கி ஓடினார். காவலர்கள் கருவூராரை பிடிக்க பின் தொடர்ந்து ஓடினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார்.

இரண்டாவது வரலாறு கருவூரார் சித்தர் இறைவனிடம் ஓடுங்க வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்து மீண்டும் தான் பிறந்த ஊராகிய கருவூர் வந்து சேர்ந்தார். அங்கு உள்ள ஆன்மீகப் போலித் தனங்களை அவர் கடுமையாக சாடினார். அதனால் அவர் மேல் வெறுப்பும் பொறாமையும் பகையும் சொந்த ஊரிலேயே எழுகிறது. குறிப்பாகப் போலியாக நியமங்கள் செய்யும் போலி வைதீகர்கள் சில பேர் அவர் மேல் அதிக பகைமை கொண்டார்கள். கருவூரார் ஒரு துர்மார்க்க வேத நிபுணர் என்று மன்னனிடம் சொன்னார்கள். அதற்கு சான்றாக அவரது வீட்டில் மது மாமிச படையல் வைக்கிறார் என்று மன்னனிடம் சொல்லி அவரை நம்ப வைத்தார்கள். அதே நேரம் சிலர் அவர் வீட்டில் மது மாமிசம் ஒளித்து வைத்தார்கள். கரூராரின் வீட்டில் மன்னனின் கட்டளைப்படி காவலர்கள் சோதனை செய்த போது மதுவும் மாமிசமும் யாகத் திரவியங்களாக மாறி இருந்தது. இதனால் மன்னனிடம் அந்த போலி வைதீகர்களுக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது. இதனால் அதிக ஆள் பலத்துடன் சென்று சீடர்கள் யாரும் இல்லாத கருவூராரை எளிதாக அடித்து விடலாம் என்று அந்தப் போலி வைதீகர்கள் கிளம்பினார்கள். கரூரார் சிரித்தபடியே பயந்து ஓடுவது போல் நடித்து கோயிலுக்குள் ஓடினார். கரூராரை தொடர்ந்து அவர்கள் விரட்டினார்கள். கருவூரார் ஓடிப்போய் நெல்லையப்பர் சிவலிங்கத்தை தழுவிக் கொள்ள இறைவன் அவரை தம்மோடு ஐக்கியப்படுத்திக் கொண்டார். இறைவனுடன் கலந்து மறைந்த காட்சி தஞ்சைப் பெரிய கோயிலில் ஓவியமாகவும் நெல்லையப்பர் கோயிலில் சிற்ப வடிவிலும் உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் திருப்புடைமருதுார் கோவிலின் ராஜகோபுரத்தில் விஜய நகர அரசகால வண்ண ஓவியக் காட்சிகள் பல உள்ளன. அவற்றில் ஒரு காட்சியில் வன்னி மரத்தடியில் உள்ள விநாயகரை ஒருவர் அடுக்கு தீபம் காட்டி பூஜை செய்ய மரத்தின் அருகே கோலொன்றினை ஏந்தி நிற்கும் கருவூரார் ஒரு கையை உயர்த்தி சுட்டி காட்ட மீன் மழை பொழியும் காட்சி உள்ளது. அதில் கருவூர்த்தேவர் கூற என்ற தமிழ் பொறிப்பும் இடம் பெற்றுள்ளது. இதை போல மருத மரத்தின் கீழ் கருவூரார் புடைமருதுார் லிங்க பெருமானைக் கரம் கூப்பி வணங்கும் திருவுருவம் காணப்படுகிறது. இவ்விரு காட்சிகளிலும் தாடி மீசை சடை முடி ஆகியவை இன்றி இளம் வயது கோலத்துடன் தலையிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை தரித்தவராய் காட்சியளிக்கிறார். இந்த காட்சிகள் 17ம் நுாற்றாண்டில்  வரையப்பட்டவை. பின்னர் தஞ்சை பெரிய கோவிலிலும் பிற இடங்களிலும் கருவூர்த் தேவரின் ஓவியங்கள் சிற்பங்களில் அவரை தாடி மீசையுடன் சடாபாரமம் தாங்கியவராய் யோகத்தில் அமர்ந்த நிலையில் காட்டியுள்ளனர்.

கருவூரில் ஒரு பசுபதீஸ்வரர் கோவிலில் கருவூராருக்கு தென்மேற்கு மூலையில் ஒரு தனி சன்னதி உள்ளது. தஞ்சை பெரிய கோயிலின் பிரகாரத்தில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லையப்பர் திருக்கோயிலில் கருவூராருக்கு தனி சன்னதி உள்ளது. வாத காவியம், வைத்திய யோகம், யோக ஞானம், பல திரட்டு, குருநூல் சூத்திரம், மெய்ச் சுருக்கம், கற்பவிதி, முப்பு சூத்திரம், பூரண ஞானம், நொண்டி நாடகம், மூலிகை தைலம், விபரம் கர்ப்ப கூறு, அட்டமாசித்தி, பூசாவிதி இது போன்ற பல நூல்களை இயற்றியுள்ளார் கருவூரார். கற்ப மூலிகைகளைப் பற்றி அநேக பாடல்களை பாடியுள்ளார். பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாவதாக விளங்கும் திருமுறையில் திருவிசைப்பா திருப்பல்லாண்டு என்ற இரண்டிலும் இவரது திருப்பாடல்கள் அமைந்துள்ளது. தில்லை சிற்றம்பலம், திருக்களந்தை ஆதித்தேச்சரம், திருக்கீழ்கோட்டூர் மணியம்பலம், திருமுகத்தலை, திரைலோக்கிய சுந்தரம், கங்கை கொண்ட சோழபுரம், திருப்பூவணம், திருச்சாட்டியக்குடி, தஞ்சை பெரியகோவில், திருவிடைமருதுார் கோவில்களில் இவர் சிவனை போற்றி பாடல்கள் பாடியுள்ளார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.