துர்க்கையின் இந்த மகிஷாசுரமர்த்தினி சிலை ராஷ்டிரகூட கலைப்பாணி எனப்படுகிறது. துர்க்கை எருமை உருவ மகிஷனை வதம் செய்யும் காட்சி. அருகில் துர்க்கையின் வாகனமான சிங்கம். துர்க்கை வலது காலை நிலத்தில் மடிந்துள்ள மகிஷனின் வலதுகால் மீது ஊன்றி இடது காலை அவன் தோள் மீது வைத்து அழுத்தி இடது கீழ்க்கையால் அவன் நாக்கைப் பற்றி வெளியிழுத்து தலையை மேல் நோக்கித் திருப்பி இடது கையில் ஏந்திய சூலத்தால் அவன் முதுகில் குத்துகிறாள். வலது மூன்றாம் கையில் வாள் அசுரன் தலையைத் துண்டிக்க ஓங்கியுள்ளது. எதிர் இடது கையில் கேடயம். வலது இரண்டாம் கையில் ஆழி வீசப்படும் நிலையில் பிரயோக சக்கரம் உள்ளது. எதிர் இடது கையில் ஓங்கிய வில். மேல் வலது கை வில்லில் பொறுத்திச் செலுத்த அம்பறாத்தூணியில் இருந்து அம்பு ஒன்றை உருவுகிறது. எதிர் இடது மேல் கை வெற்றி முழக்கமிட சங்கு ஓங்கி உள்ளது. இருகைகளில் வாளும் கேடயமும் ஏந்திய அவுணன் ஆற்றலிழந்து மரணத்தின் விளிம்பில் தவிக்கிறான். மகிஷாசுரமர்த்தினியின் முகம் கம்பீரமும் கடுமையும் காட்டுகிறது. இடம்: அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புநாதஈஸ்வரர் திருக்கோவில், பேரங்கியூர் விழுப்புரம் மாவட்டம்.
