ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 470

அகத்திய பெருமானின் பொதுவாக்கு:

இறைவனின் கருணையை கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் இறைவனின் கருணையால் இதுபோல் எம் வழி வருகின்ற அனைத்து சேய்களுமே நலமாய் உயர்வாய் நல்வித செயல்களை செய்து செய்து இறையருளை தொடர்ந்து பெற அதுபோல் இறை அருளைக் கொண்டே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் திடமான மனது உறுதியான மனது எந்த விதமான சங்கடத்திற்கும் சலனத்திற்கும் ஆளாகாத மனது இதுபோல் வைரத்தைவிட வைடூரியத்தை விட உறுதியான மனது ஒவ்வொரு மனிதனுக்கும் வாய்த்தால்தான் அறக்காரியங்களை செய்ய இயலும் நன்மையை செய்ய இயலும். யாம் அடிக்கடி கூறுவது போல தவறை செய்கின்ற மனிதன் சுயநலமாய் வாழ்கின்ற மனிதன் பாவத்தின் மேல் பாவத்தை சேர்க்கின்ற மனிதன் பலர் விமர்சனம் செய்கிறார்களே? பலர் உற்று உற்று பார்க்கிறார்களே? என்று தன் தவறான செயல்களை நிறுத்தி விடுகிறானா? இல்லையே? ஒரு தவறு செய்கின்ற மனிதன் துணிந்து தவறு செய்கிறான். இல்லையென்றால் அதற்கு பலவிதமான நியாய வாதங்களை கற்பித்து தவறு மேல் தவறு செய்து கொண்டே போகிறான். ஆனால் நல்லதை தர்மத்தை செய்ய வேண்டும் சத்தியத்தை கடைபிடிக்க வேண்டும் என்று முன் வருகின்ற மனிதர்கள் மட்டும் அதில் ஏதாவது இடையூறுகள் ஏளனங்கள் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் வந்தால் அதனை விட்டு விடுகிறார்களே ஏன்? தீயதை செய்கின்ற மனிதன் யார் விமர்சனம் செய்தாலும் ஏன்? சட்டம் போட்டு தடுத்தாலும் கூட அதனையும் மீறி தீயதை செய்து கொண்டே இருக்கிறான்.

நல்லதை செய்கின்ற மனிதன் மட்டும் நல்லதை செய்வதால் சில துன்பங்கள் வருகிறதே? இத்தனை எதிர்ப்புகள் ஏளனங்கள் வருகிறதே? என்று மனம் வெதும்பி விரக்தியடைந்து அதனை விட்டுவிடுகிறான். இந்த தன்மையை எம் வழியில் வருகின்ற சேய்கள் அறவே குறைத்துக் கொண்டு நல்லதை செய்கின்ற தன்மைக்கு எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அதனை விட்டுவிடக் கூடாது என்ற சிந்தனைக்கு வந்து விட வேண்டும். அறவே அச்சம் குழப்பம் இல்லாமல் வாழ முயற்சி செய்ய வேண்டும். பல இடங்களில் பல விதமான தர்ம காரியங்களை பெறுவதற்கு பல மனிதர்கள் இருக்க சுற்றிலும் பலர் வேடிக்கை பார்க்கிறார்கள் நான் அள்ளிக் கொடுக்கலாம் என்றுதான் நினைத்தேன். மற்றவர்களின் பார்வை என்னை சங்கடப்படுத்துகிறது. எனவே குறைவாக கொடுத்து விட்டேன் என்றெல்லாம் மனிதர்கள் எண்ணுவது அறியாமையாகும். பலர் பார்க்க தீய பானங்களை ஒரு மனிதன் பருகுகிறான் தீய பொருள்களை விற்கிறான் வாங்குகிறான். தீய செயலை செய்கிறான். அதற்கெல்லாம் அச்சப்படாத வெட்கப்படாத மனிதன் தர்மத்தை செய்ய நல்லதை செய்ய ஏன் அச்சப்பட வேண்டும்? ஏன் வெட்கப்பட வேண்டும்? எனவே இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக் கொள்வார் என்று ஒரு மனிதன் நம்பிக்கையோடும் உறுதியோடும் இருத்தலே எம் வழியில் வருவதற்கு ஏற்ற மனோபாவமாகும்.

இந்த மனோபாவத்தை மனோநிலையை ஒருவன் வளர்த்துக் கொண்டே இருத்தல் அவசியமாகும். துன்பங்களை தாங்குவதற்கு பலம் வேண்டும் மனோபலம் வேண்டும் என மனிதர்கள் வினவுகிறார்கள், கேட்கிறார்கள். கட்டாயம் புண்ணியம் நற்காரியங்கள் அதிகம் சேர சேர நற்செயல்கள் அதிகம் செய்ய செய்ய மனோபலம் உருவாகும். துன்பங்களை தாங்குகின்ற சக்தியை வளர்த்துக் கொள்ள எந்த துன்பம் வந்தாலும் துவண்டு விடாமல் அதனை எதிர்கொள்ளக் கூடிய திறனை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிகளவு தர்ம காரியங்களும் தன்னலம் கருதாத தொண்டும் பூஜைகளும் ஸ்தல யாத்திரையும் மந்திர உச்சாடனமும் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் அறிவு கொண்டும் எம் பார்வையிலும் அதற்கு தீர்வு காணவேண்டும் என்று முயற்சி செய்வதே சிறப்பிலும் சிறப்பாகும். அப்படி ஒரு மனிதன் வாழ முற்பட்டால் மனோதிடம் அதிகமாகும் மனோபலம் அதிகமாகும். இதுபோல் கர்ணனை நாங்கள் உதாரணம் காட்டுவது எதற்கு? என்றால்

ஒரு மனிதனிடம் எத்தனை விதமான ஏற்க முடியாத குணங்கள் இருந்தாலும் கூட தர்ம குணங்கள் அதிகம் இருந்தால் இறையருள் நிச்சயம் என்பதற்கு கர்ணன் ஒரு சிறந்த உதாரணம். அது மட்டுமல்லாமல் கடுமையான தவமோ பிரார்த்தனையோ இல்லாமல் செய்கின்ற தர்மத்தாலும் நற்காரியங்களாலும் இறைவன் அருளை பெறுவதோடு மட்டுமல்லாமல் இறைவனை தரிசிக்கவும் செய்யலாம் என்பதற்கு கர்ணன் சிறந்த உதாரணம். எனவே எம் வழியில் வர எண்ணுகின்ற சேய்கள் இதுபோல் கருத்தை உறுதியாக மனதிலே வைத்துக் கொண்டு தொடர்ந்து விடாது தர்மம் என்று தர்ம வழியில் வருவதோடு சத்தியம் என்று சத்திய வழியிலும் வந்து பரிபூரண சரணாகதி பக்தியிலே தன்னை ஆட்படுத்திக் கொண்டு சாத்வீக எண்ணங்களை வளர்த்துக் கொண்டு எவர் மனதையும் புண்படுத்தாமல் ஆணவமில்லாமல் தன்னை உயர்த்திக் கொள்ளக் கூடிய முயற்சியில் இறை வழியில் வர இறையருளால் அவர்கள் துன்பங்களெல்லாம் ஓடி அவர்கள் நித்ய இன்பமாக, நிம்மதியாக வாழ வழி பிறக்கும் என்று யாங்கள் கூறுகிறோம். இந்தக் கருத்தை நன்றாக மனதிலே பதியவைத்து சதாசர்வகாலம் இறைவனின் திருவடியை சிந்தித்து சிந்தித்து நல்வழியில் வர எம் சேய்களுக்கு இறைவன் அருளாலே நல்லாசிகளை இத்தருணம் இயம்புகிறோம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.