47. கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம் நாற்பத்தி ஏழாவது படலமாகும்.

இராசராச பாண்டியனுக்குப் பின் அவனுடைய மகன் சுகுண பாண்டியன் மதுரையை நல்லாட்சி செய்து வந்தான். அப்போது முற்பிறவியில் நல்ல வினைகள் செய்த ஒருவன் சில தீவினைகள் செய்தமையால் மதுரைக்கு அருகில் உள்ள ஊரில் கரிக் குருவியாக பிறந்தான். அக்கரிக் குருவியை காகம் உள்ளிட்ட பெரிய பறவையினங்கள் தலையில் கொத்தின. இதனால் கரிக் குருவிக்கு தலையில் காயங்கள் உண்டானது. கரிக் குருவியால் அப்பறவைகளை எதிர்க்க இயலவில்லை. எனவே கரிக் குருவி அவ்வூரை விட்டு காட்டுப் பகுதிக்கு சென்றது. அங்கு ஒருநாள் மரத்தில் கரிக் குருவி அமர்ந்திருந்தது. அப்போது சிவபக்தர் ஒருவர் தன் அடியவர் கூட்டத்தினருடன் அம்மரத்தடிக்கு வந்து சிறிது ஓய்வெடுக்க அமர்ந்தார்கள். சிவபக்தர் கூட்டத்தினரை நோக்கி இறைவனைப் பற்றி பேச ஆரம்பித்தார். தலம் தீர்த்தம் மூர்த்தி என மூன்று சிறப்புகளையும் உடையது மதுரையம்பதி. அங்கு கோவில் கொண்டிருக்கும் சொக்கநாதர் தலைசிறந்தவர். அவர் தம் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையில் நற்கதி அளிப்பார். என்று மதுரையின் சிறப்பையும் சொக்கநாதரின் பெருமைகளையும் எடுத்துக் கூறினார். சிவபக்தர் கூறியதைக் கேட்ட கரிக் குருவிக்கு சொக்கநாதரை வழிபட வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. அக்கரிக் குருவி மதுரை நோக்கி பறந்தது. மதுரையை அடைந்ததும் பொற்றாமரைக் குளத்தில் நீராடியது.

மீனாட்சி அம்மனையும் சொக்கநாதரையும் மனமுருக வழிபட்டது. இவ்வாறாக மூன்று தினங்கள் கரிக்குருவி இறை வழிபாடு செய்தது. கரிக்குருவியின் செயலினைக் கண்டதும் மீனாட்சி அம்மன் இறைவனாரிடம் ஐயனே இக்கரிக் குருவி வழிபடும் காரணம் என்ன? என்று கேட்டாள். அதற்கு இறைவனார் கரிக் குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் குருவியாக பிறந்தது. முற்பிறவியில் செய்த நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியையும் பொற்றாமறைக் குளத்தையும் இறைவனைப் பற்றியும் தெரிந்து கொண்டது. இத்தலத்தில் தனக்கு பிறவித் துன்பம் நீங்கும் என்று முழுமையாக நம்பிக்கையுடன் தனது வழிபாட்டை செய்து கொண்டிருக்கிறது. அதன் நம்பிக்கைக்கும் வழிபாட்டிற்கும் உரிய பலன் அதற்கு கிடைக்கும் என்று சொல்லி கரிக்குருவிக்கு ஆயுள் பலத்தையும் பிறவித் துன்பத்தையும் போக்கும் மிருத்யுஞ்சய மந்திரத்தை உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது இறைவனை பலவாறு துதித்து வழிபட்டது. பின்னர் இறைவனாரிடம் ஐயனே எனக்கு ஓர் குறை உள்ளது. மற்ற பறவைகள் எல்லாம் என்னை துன்புறுத்துகின்றன என்றது. அதனைக் கேட்ட இறைவனார் அப்பறவைகளுக்கு எல்லாம் நீ வலிமையுள்ளவன் ஆவாய் என்று திருவாய் மலர்ந்தருளினார். உடனே இந்த வலிமையானது எமது மரபில் உள்ள அனைத்து பறவைகளுக்கும் கிடைக்கப் பெற்று விளங்க வேண்டும் எமக்கு உபதேசித்த மந்திரத்தை அவைகளுக்கும் ஓதி அனைத்து பறவைகளும் உய்ய அருள வேண்டும் என்று வேண்டியது. சொக்கநாதர் அவ்வாறே ஆகுக என்று கூறியருளினார். உடனே அக்குருவியும் அதன் இனமும் சொக்கநாதர் ஓதியருளிய மந்திரத்தை உச்சரித்து வலிமை பெற்றது. அதனால் அந்தப் பறவைகள் அனைத்தும் வலியன் என்னும் காரணப் பெயர் பெற்றுச் சிறப்பு பெற்றன. சில காலம் சென்ற பின் கரிக்குருவி சிவனடியை அடைந்தது.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவனை உணர்ந்த சான்றோர்கள் இறைவனை அடையச் சொல்லும் வழிகளை நம்பிக்கையுடன் கடைபிடித்து இறைவனை வழிபட்டு வந்தால் உறுதியாக வீடு பேறு பெறலாம் என்பதையும் தீமைகள் செய்தால் தீமைகள் வந்து சேரும் எனபதையும் நன்மை செய்தால் நன்மை கிடைக்கும் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.