24. கால் மாறி ஆடிய படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் கால் மாறி ஆடிய படலம் நூலின் இருபத்தி நான்காதாவது படலமாகும்.

விக்கிரம பாண்டியன் தனது மகனான இராசசேகர பாண்டியனுக்கு ஆட்சி உரிமையை அளித்து சிவப்பேறு பெற்றான். இராசசேகர பாண்டியன் சொக்கநாதரிடம் பேரன்பு கொண்டு நல்வழியில் மதுரையை ஆட்சி செய்து வந்தான். அவன் ஆயகலைகள் 64 இல் பரதக்கலையைத் தவிர்த்து ஏனையவற்றில் தேர்ச்சி பெற்று சிறப்புற விளங்கினான். வெள்ளி அம்பலத்தில் நடனம் புரியும் அம்பலவாணனின் திருநடனத்தினால் இவ்வுயிர்களின் இயக்கம் உள்ளது. அந்த உன்னதமான பரதக்கலையைக் கற்று இறைவனுக்கு இணையாக ஆடவிரும்பவில்லை என்று நடராஜரின் மீது கொண்ட அன்பால் பரதக்கலையை இராசசேகரபாண்டியன் கற்கவில்லை.

இராசசேகர பாண்டியன் காலத்தில் சோழநாட்டை கரிகால் பெருவளத்தான் என்ற அரசன் ஆண்டு வந்தான். ஆயகலைகள் 64 இலும் சிறந்து விளங்கிய அவன் திருவானைக்காவில் உள்ள ஜம்புகேசரிடம் பேரன்பு கொண்டவன். ஒருசமயம் சோழ நாட்டைச் சார்ந்த புலவன் ஒருவன் இராசசேகர பாண்டியனின் அவைக்கு வந்தான். அப்புலவனை வரவேற்று தனக்கு இணையான ஆசனம் அளித்து அவனை கௌரவித்தான் இராசசேகரபாண்டியன். அப்புலவன் இராசசேகர பாண்டியனிடம் எங்கள் அரசர் ஆயகலைகள் 64 யையும் நன்கு பயின்றவர். தங்களுக்கோ 63 கலைகள் மட்டும் தெரியும். பரதக்கலை உங்களுக்கு வராது. ஆகவே உனக்கு ஒரு  கலை குறைவு.  இதை நான் கூறவில்லை.  உன் மக்களும் சோழமன்னனும் கூறுகின்றனர் எனக் கூறிச் சென்றார். இதனைக் கேட்ட இராசசேகர பாண்டியன் மிகுந்த வருத்தம் கொண்டான். தன் குறையைச் சுட்டிக் காட்டிய புலவனிடம் கோபம் கொள்ளாது அவனுக்கு பரிசுகள் பல கொடுத்து அனுப்பி வைத்தான். பின் தான் பரதக் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது இறைவனின் விருப்பம் போலும் என்று எண்ணி பரதக் கலையை கற்க விரும்பினான்.

இராசசேகர பாண்டியன் பரதக் கலையை கற்றுணர்ந்தவர்களிடம் பரதக் கலையைக் கற்றுக் கொள்ளத் தொடங்கினான். இராசசேகரபாண்டியன் பரதக் கலையைக் கற்கும் போது உடல்வலி ஏற்பட்டு மிகவும் சோர்வடைந்தான். அப்போது அவன் நடராஜரை நினைத்து வெள்ளி அம்பலத்தில் தினமும் திருக்கூத்தினை நிகழ்த்தும் அம்பலவாணனுக்கும் இதே போல் உடல் வலியும் கால் வலியும் சோர்வும் ஏற்படுமே என்று எண்ணி மிக்க வருத்தம் கொண்டான். இறைவன் கால் மாறி ஆடினால் வலி நீங்குமே என்று கருதினான். அப்பொழுது சிவராத்திரி வந்தது. இராசசேகர பாண்டியன் சொக்கநாதரின் சந்நிதியை அடைந்து சிறப்பு வழிபாடு நடத்தினான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் இறைவா தாங்கள் தூக்கிய திருவடியை ஊன்றியும் ஊன்றிய திருவடியைத் தூக்கியும் மாறி நடனமாட வேண்டும். அப்பொழுதுதான் என்னுடைய வருத்தம் நீங்கும் என்று  பலவாறு பலமுறை வேண்டினான். நடராஜரின் விக்கிரகத்தில் தன் காலை மாற்றாமல் அப்படியே நின்றார். உடனே தன் உறையிலிருந்து கத்தியை எடுத்து இப்போது நீங்கள் காலை மாற்றி வைக்கா விட்டால் என்ற சிரத்தை அறுத்துக் கொள்வேன் என்று தன் கழுத்தில் கத்தியை வைத்து அறுத்துக் கொள்ள முனைந்தான்.

இராசசேகர பாண்டியனின் கழுத்தில் தன் கத்தியை வைத்த அடுத்த நொடி நடராஜர் இடது காலை தூக்கியும் வலது காலை ஊன்றியும் நடனமாடி இராசசேகரபாண்டியனின் மும்மலங்களையும் நீக்கி அவனைப் பேரின்பக் கடலில் ஆழ்த்தினார். நடராஜர் கால் மாறி நடனம் ஆடியதைக் கண்டதும் இராசசேகர பாண்டியன் இறைவனை பலவாறு போற்றித் துதித்தான். பின் வெள்ளி அம்பலவாணனிடம் வெள்ளியம்பலத்துள் கூத்தாடும் எம் தந்தையே எக்காலத்துக்கும் இவ்வாறே நின்று தேவரீர் அருள் செய்ய வேண்டும். இதுவே அடியேன் வேண்டும் வரமாகும் என்று மனமுருக பிராத்தித்தான். அன்று முதல் இன்றைக்கும் மதுரையில் இருக்கும் வெள்ளி அம்பலத்தில் நடராஜ பெருமான் கால் மாறிய திருக்கோலத்தில் அருள்புரிகின்றார். கால்மாறி ஆடிய நடராஜரின் திருவருளால் ராஜசேகரனுக்கு குலோத்துங்கன் என்ற சத்புத்திரன் பிறந்தான்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

இறைவன் தன்மேல் எப்போதும் உறுதியான மனதுடன் மாறாத அன்பு பூண்டவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவார் என்பதே இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.