41. விறகு விற்ற படலம்

சிவபெருமானது அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் விறகு விற்ற படலம் நாற்பத்தி ஒன்றாவது படலமாகும்.

வரகுண பாண்டியன் மதுரையை சீரும் சிறப்புமாக ஆண்டு கொண்டிருந்தபோது ஏகநாதன் என்னும் வடநாட்டு யாழிசைக் கலைஞன் ஒருவன் வரகுணனின் அரண்மனைக்கு வந்தான். தன் பாட்டிற்கு எதிர்பாட்டுப் பாட பூலோகத்தில் இதுவரை ஒருவர் பிறந்ததுமில்லை இனி பிறக்கப் போகிறதுமில்லை என ஊர் ஊராகச் சொல்லிக் கொண்டு மார்தட்டி செருக்குடன் இருப்பவன். அவன் தன்னுடைய யாழினைக் கொண்டு இசை பாடி அரசவையில் அனைவரின் மனதையும் மயக்கினான். பின்னர் வரகுணனிடம் பலநாடுகளில் யாழிசையில் வெற்றி பெற்று பல பரிசுகளையும் பட்டங்களையும் பெற்றதாக ஆணவத்துடன் கூறினான். வரகுண பாண்டியனும் ஏகநாதனின் இசையைப் பராட்டி அவனுக்கு பல பரிசுகளை வழங்கி தன்னுடைய விருந்தினராக சிலநாட்கள் பாண்டிய நாட்டில் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டான். ஏகநாதனும் அவனைச் சார்ந்தவர்களும் தங்குவதற்கு அரச மாளிகை ஒன்றை ஏற்பாடு செய்தான். இதனைக் கண்டதும் இந்த உலகில் தன்னை யாரும் இசை வாதில் வெல்ல ஆளில்லை என்ற ஆவண எண்ணம் அவனுக்கு ஏற்பட்டது. இதனால் வரகுணனிடம் உங்கள் நாட்டில் என்னுடன் யாழிசைத்து இசைபாடும் வல்லமை இல்லை அப்படி யாராவது இருந்தால் எம்மோடு போட்டியிட்டு பாடசொல் என்றான். அதற்கு வரகுணன் நீங்கள் இப்பொழுது உங்கள் இருப்பிடம் செல்லுங்கள். நான் உங்களுடன் போட்டியிடும் நபரைத் தேர்ந்தெடுத்து உங்களுக்கு நாளை தெரிவிக்கிறேன் என்று கூறி அனுப்பினான். பின்னர் அவையோரிடம் கலந்தாலோசித்த வரகுணன் தன்னுடைய அவையில் இருந்த பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞரை ஏகநாதனிடம் யாழிசைத்து இசைபாடி போட்டியிட ஆணை இட்டான்.

வரகுண பாண்டியனின் ஆணையைக் கேட்டதும் பாணபத்திரர் சொக்கநாதரின் திருவருளோடு இசைப் போட்டியில் கலந்து கொள்கிறேன் என்றார் என்று கூறினார். ஏகநாதனின் சீடர்கள் மதுரை நகரத் தெருக்களில் யாழினை இசைத்து பாடி எல்லோரையும் தன் வசப்படுத்திக் கொண்டிருந்தனர். இதனைக் கண்ட பாணபத்திரர் ஏகநாதனின் சீடர்களே இவ்வளவு அழகாகப் பாடுகிறார்களே. நான் எப்படிதான் இந்த இசைப் போட்டியில் ஏகநாதனை வெல்லப் போகிறேனோ என்று கலக்கத்துடன் நேரே சொக்கநாதரைச் சரணடைந்தார். இறைவா நீங்கள்தான் இக்கட்டிலிருந்து என்னைக் காப்பாற்றி வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மனமுருக‌ வேண்டினார். சொக்கநாதரும் பாணபத்திரருக்கு உதவ எண்ணம் கொண்டார். வயதான விறகு விற்பவர் போல் வேடம் கொண்டு இடையில் அழுக்காடையும் தலையில் இருக்கும் பிறைச் சந்திரனை அரிவாளாக மாற்றி இடையில் செருகியும் இருந்தார். பழைய யாழினை இடக் கையில் வைத்துக் கொண்டு தலையில் விறகுகளைச் சுமந்தபடி மதுரை நகர வீதிக்குள் நுழைந்தார். விறகு வலை கேட்பவர்களிடம் அதிக விலை கூறி விறகினை விற்காது பொழுதினைப் போக்கினார். மாலை வேளையில் ஏகநாதன் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் விறகுக் கட்டினை இறக்கி வைத்து விட்டுத் திண்ணையில் அமர்ந்து சொக்கநாதர் யாழினை மீட்டி பாடினார்.

சொக்கநாதரின் பாட்டினைக் கேட்டதும் ஏமநாதன் வெளியே வந்து விறகு விற்பவர் போல் வந்த சொக்கநாதரிடம் வந்து நீ யார்? என்று கேட்டான். அதற்கு சொக்கநாதர் நான் யாழிசையில் வல்லவராகிய பாணபத்திரனின் அடிமை என்றார். பாணபத்திரரிடம் இசை பயிலும் மாணவர்கள் பலர். அவர்களில் நானும் ஒருவனாக இருந்த போது வயது முதிர்ந்ததால் இசை கற்க தகுதியற்றவன் என்று என்னை பாணபத்திரர் புறந்தள்ளி விட்டார். அதனால் விறகு விற்று பிழைப்பு நடத்துகிறேன். பாணபத்திரரிடம் கற்ற இசையை மறக்காமல் இருக்கும் பொருட்டு நான் அவ்வப்போது பாடுவேன் என்று கூறினார். ஏமநாதன் விறகுஉ விற்பவர் போல் வந்த இறைவரிடம் நீ முன்னர் பாடிய பாடலை இன்னொருதரம் இசையோடு பாடுக என்று கூறினான். இறைவரும் யாழினை மீட்டி பாடத் தொடங்கினார். அவருடைய பாட்டில் ஏமநாதன் உட்பட உலக உயிர்கள் அனைத்தும் மெய் மறந்து ஓவியம் போல் இருந்தனர். ஏமநாதன் தன்னை மறந்து இருக்கையில் இறைவனார் மறைந்தருளினார். பின்னர் உணர்வு வந்த ஏமநாதன் இது சாதாரணப் பாட்டே அல்ல. இது தேவகானம். பாணபத்திரனால் தள்ளப்பட்டவன் இவ்வாறு இசையுடன் பாடினால் பாணபத்திரனின் பாட்டின் திறன் எத்தகையதோ? என்று கூறி கவலையில் ஆழ்ந்தான். இனி நாம் பாணபத்திரனோடு இசைப் போட்டியில் பாடி வெற்றி பெற முடியாது. ஆகையால் இப்போதே இங்கிருந்து புறப்படவேண்டும் என்று எண்ணி தன் கூட்டத்தினருடன் மதுரையை விட்டு வெளியேறினான்.

இறைவனார் பாணபத்திரனின் கனவில் தோன்றி பாணபத்திரரே இன்று யாம் ஏகநானிடம் உன்னுடைய அடிமை என்று கூறி இசைபாடி வென்றோம் அஞ்சற்க என்று கூறினார். இதனைக் கேட்ட பாணபத்திரர் விழித்தெழுந்து மகிழ்ச்சியடைந்தார். பின்னர் விடிந்ததும் திருக்கோவிலுக்குச் சென்று சொக்கநாதரை வழிபட்டு அடியேன் பொருட்டு தங்கள் திருமுடியில் விறகினைச் சுமந்தீர்களோ? என்று கூறி வழிபாடு நடத்தினார். காலையில் அரசவை கூடியதும் வரகுணன் ஏமநானை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். காவலர்கள் ஏமநாதன் தங்கியிருந்த வீட்டிற்குச் சென்றனர். ஏமநாதனைக் காணாது அருகில் இருந்தவர்களிடம் விசாரித்த போது ஏமநாதன் நேற்றுவரை இங்கிருந்தான். நேற்று மாலை ஒரு வயதான விறகு விற்பவன் தன்னை பாணபத்திரனின் அடிமை என்று கூறி இசைபாடினான். பின்னர் என்ன நடந்ததோ தெரியவில்லை. ஏமநாதன் நள்ளிரவில் ஓடிவிட்டான் என்று கூறினார்கள். அதனைக் கேட்ட அவர்கள் இந்த செய்தியை வரகுணனிடம் தெரிவித்தார்கள். இதனைக் கேட்டதும் பாணபத்திரர் தன்னுடைய மனக் கவலையை இறைவனாரிடம் தெரிவித்ததையும் இறைவனார் கனவில் கூறியதையும் விளக்கினார். இது சொக்கநாதரின் திருவிளையாடல் என்பதை அறிந்த வரகுணன் பாணபத்திரரை யானைமீது அமர்த்தி மரியாதை செலுத்தினான். பல பரிசுப்பொருட்களை வழங்கினான். தனக்கு அரசன் கொடுத்த வெகுமதிகள் முழுவதையும் அடியாருக்கும் ஆண்டவனுக்காகவுமே செலவிட்டு இன்புற்று வாழ்ந்தார் பாணபத்திரர்.

சிவபெருமான் இந்த திருவிளையாடலை செய்து இதன் மூலம் உலகிற்கு அளித்த நன்மை:

தனது திறமைக்கு நிகர் யாரும் இல்லை என்ற செருக்கும் தானே பெரியவன் என்ற ஆணவம் இருக்க கூடாது. அப்படி இருந்தால் அதனை கட்டாயம் இறைவனார் அடக்குவார். ஆகையால் நாம் வாழ்க்கையில் ஆணவம் கொள்ளக் கூடாது என்பதையும் இறைவனை நம்பியவர்கள் கைவிடப்பட மாட்டார்கள் என்பதையும் இந்த திருவிளையாடல் மூலம் அனைவருக்கும் உணர்த்தினார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.