ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 464

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 464

கேள்வி: குலதெய்வம் என்பது யாது ? அது தெரியாதவர்கள் அதை தெரிந்துகொள்வது எப்படி ?

இறைவன் அருளால் கூறுவது யாதென்றால் திருமணமான பல ஆண்களைக் கேட்டால் தெரியும் குலதெய்வம் யாரென்று? திருமணமான ஆண்களுக்கெல்லாம் குலதெய்வம் யாரென்றால் மனைவிதான். பல நல்ல குல மங்கைகளுக்கு குலதெய்வம் கணவன்தான். இப்படித்தான் ஆதிகாலத்தில் வாழ்ந்திருக்கிறார்கள். இக்காலத்திலும் இப்போதும் சிலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இறைவன் அருளால் பலமுறை கூறியதுதான் சுருக்கமாக கூறுகிறோம் அப்பா.

ஒரு பகுதியில் ஒரு ஊரில் ஒரு நகரத்தில் ஒரு கிராமத்தில் பொதுவான பிரச்சினை துன்பங்கள் இயற்கை சீற்றம் அல்லது கள்வர்களால் துன்பம் வரும்பொழுது அதை எதிர்த்து போராடி உயிரை விட்ட ஒரு சிலரை குலதெய்வமாக காலப்போக்கில் வழிபடுவது அல்லது போரில் கடுமையாக போராடி எதிரியிடம் இருந்து நாட்டை காத்து இறந்த சில வீரர்களையெல்லாம் நடுகல் நட்டு தெய்வமாக கும்பிடுவது ஒரு வழக்கம். இன்னொன்று அதிக அளவு சாத்வீகமாக இறை பக்தியோடும் சிந்தனையோடும் வாழ்ந்து எதிர்பாராமல் மரணமடைந்த சில ஆண்களையும் பெண்களையும்கூட குலதெய்வமாக கும்பிடுவது என்பதுகூட ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் மரபாக இருந்தது. இதுபோக சிறு சிறு தேவதைகளையும் குலதெய்வமாக இஷ்ட தெய்வமாக வழிபடும் பழக்கமும் இருந்து வருகிறது. எல்லாவற்றையும்விட இறை நம்பிக்கை வேண்டும் பெரிய ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது என்பது அதிகம் படித்தவர்களுக்கும் ஓரளவு ஞானம் அடைந்தவர்களுக்கும் அந்த காலத்தில் எளிதாக இருந்தது. எளிய மக்களுக்கு பெரிய ஆலயத்தின் உள்ளே செல்வதற்கு தடை போடப்பட்டிருந்த காலம். அவர்கள் இறைவனை வணங்க வேண்டுமே? அவர்களுக்கு தெரிந்த வகையில் பூஜை செய்து தெய்வத்தைக் கொண்டாடினார்கள். இதுதானப்பா குடும்ப தெய்வம். இதுதானப்பா குலதெய்வம். எந்த காரியத்தை துவங்கும் முன்பு இங்கு சென்று அனுமதி கேள். வீட்டிலே பெரியவர்கள் இருந்தால் உத்தரவு கேட்க மாட்டாயா? அதைப்போல் கேள் என்றெல்லாம் பிள்ளைகளுக்கு பாரம்பர்யமாக சொல்லிக் கொண்டே வந்ததால் இப்படியொரு வழிபாடு ஏற்பட்டு விட்டது. எல்லாம் கடந்து பரம்பொருள் ஒன்றுதான் என்று ஒருவன் பத்மாசனமிட்டு அமர்ந்து விட்டால் அவனுக்கு எல்லாம் ஒன்றுதான். அந்த நிலை வரும் வரையில் இதுபோன்ற விதவிதமான வழிபாடுகளும் சடங்குகளும் மனிதனுக்கு தேவைப்படுகிறது. என்ன? அந்த சடங்கிலே பாவங்கள் சேராமல் மனிதன் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வளவே.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.