ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 372

குரு நாதர் அருளிய பொதுவாக்கு.

யாங்கள் அடிக்கடி கூறுவது போல இறைவன் அருளால் கூறுகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமே சிந்தனை. தொடர்ந்த சிந்தனை என்பது மனமாகும். விழிகளை மூடிக் கொண்டு ஒவ்வொரு மனிதனும் தன் மனதை உற்று நோக்கினால் அதில் எத்தனையோ ஆசா பாசங்கள் இருக்கலாம். அவற்றிலே ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். அதை விட்டுவிட்டு மேலும் பார்த்தால் என்ன தெரியும் லோகாயம் மட்டுமே அதில் நிரப்பப்பட்டு இருக்கும். ஒன்று இல்லக் கடமை அல்லது தசக்கடமை அல்லது அப்பொழுது அவன் சந்திக்கின்ற கடுமையான பிரச்சினை குறித்த சிந்தனை அல்லது எதிர்காலத்தில் வேறு எதாவது புதிதாக ஒரு பிரச்சினை இதனை சார்ந்து வந்துவிடுமோ? என்ற அச்சம். இது எதுவுமே இல்லாத மனிதனாக இருந்தால் பொழுதை ஆக்குவதற்கு பதிலாக பொழுதை போக்குகிறேன் என்று அந்தப் பொழுதை வீண் செய்வதும் அதற்காக தனத்தை வியம் செய்வதுமான ஒரு அசுரத்தனமான செயல்களில் ஈடுபடுவது. இப்படி மனதிற்கு அந்த மாபெரும் சக்திக்கு சரியான பணியை தராமல் அதன் ஆற்றலை முறைபடுத்தி பயிர்களுக்கு அந்த மனோ சக்தி எனப்படும் நீரை பாய்ச்சாமல் தேவையற்ற வெள்ளமாக வடிய விடுவதுதான் மனிதனுக்கு என்றென்றும் இயல்பாக இருந்து வருகிறது. எல்லோருக்குமே இது பெரும்பாலும் பொருந்துகிறது. உடல் வேறு உடலில் குடிகொண்டு இருக்கும் ஆத்மா வேறு.

ஆத்மா எத்தனையோ உடல்களுக்குள் இருந்து கொண்டு புகுந்து கொண்டு பிறவி என்ற பெயரில் வாழ்ந்து மடிந்து வாழ்ந்து மடிந்து சேர்த்த வினைகளின் தொகுப்புதான் அந்த வினைகளின் அடிப்படையில்தான் அடுத்த உடம்பு கிடைத்திருக்கிறது. அந்த உடம்போடு அந்த ஆத்மா மயக்கமுற்ற நிலையிலே தன்னை அறியாமல் வாழ்கிறது. அப்படி வாழ்கின்ற அந்தப் பிறவியிலும் அது பல்வேறு வினைகளை செய்கிறது. அதில் பாவமும் புண்ணியமும் அடங்குகிறது. இதிலே பாவங்களைக் குறைத்து எல்லா வகையிலும் புண்ணியங்களை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் மகான்களின் உபதேசமாக இருக்கிறது. இந்த புண்ணியத்தை கனவிலும் நனவிலும் ஒவ்வொரு அணுவிலும் எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டே கடமைகளை பற்றற்ற நிலையில் ஆற்றிக் கொண்டே உள்ளத்தில் சதாசர்வ காலம் இறை சிந்தனை மட்டும் வைத்துக் கொண்டு எதனையும் இறைவன் பார்த்தால் எப்படி பார்ப்பாரோ அந்த பார்வையில் பார்க்கப் பழகினால் மனம் நிம்மதியான நிலையிலிருக்கும். நிம்மதியான மன நிலையில்தான் மனிதனுக்கு பெரிய ஞானம் சார்ந்த விஷயங்கள் மெல்ல மெல்ல புரியத் துவங்கும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.