ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 186

கேள்வி: மோட்சம் பற்றிய விளக்கம்:

இறைவனின் அருளைக் கொண்டு இதை வேறு விதமாக விளக்குகிறோம். இந்த ஒரு நகரத்தில் இருந்து நீண்ட தொலைவு உள்ள நகரத்தை நோக்கி ஒரு பொது வாகனத்தில் இவன் ஏறி அமர்வதாகக் கொள்வோம். இவனைப் போல பலரும் அந்த தொலைதூர நகரத்திற்குச் செல்வதற்காக அந்த வாகனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். இப்பொழுது உரிய அனுமதிச் சான்று பெற்று அந்த வாகனத்தில் இவனுக்கென்று ஒரு இருக்கை தரப்பட்டு அமர்ந்து இருக்கிறான். பலரும் அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் அந்த நீண்டதூர நகரத்தை நோக்கி செல்வதற்கு முன்னால் இடையிடையே பல சிறிய பெரிய ஊர்களையும் நகரங்களையும் தாண்டி செல்லும். சில மனிதர்கள் இறுதியாக அந்த வாகனம் எங்கு செல்கிறதோ அதுவரை பயணம் செய்வதற்கு பயணச் சான்று வாங்கி இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் இறங்கிய வேண்டிய நகரம் அவர்களுக்கு வேண்டிய ஊர் அது. இன்னும் சிலர் பகுதியில் இடையில் உள்ள ஊரில் இறங்கிக் கொள்வார்கள். இது அந்தந்த மனிதனின் விருப்பத்தைச் சார்ந்தது. இந்த அந்த வாகனத்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறான். ஒரு நிலையிலே இடையிடையே இறங்குபவர்கள் எல்லாம் குறைந்து விட்டு இறங்குகின்ற பயணிகள் அனைவருமே இப்பொழுது அந்த இறுதியாக செல்ல வேண்டிய ஊரை அல்லது நகரத்தை நோக்கித்தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இப்பொழுது அவர்கள் சொந்த ஊரிலும் இல்லை. போக வேண்டிய ஊரை நோக்கியும் அவர்கள் இருந்திருக்கவில்லை. ஆனால் இடைப்பட்ட பயணத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையிலே அவர்களை எப்படி அழைப்பது? பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அழைக்கலாம். இப்பொழுது அந்த வாகனம் எந்த விதமான பழுதும் இன்றி எந்த விதமான இடையிலே பிரச்சனையும் இன்றி தொடர்ந்து சென்று கொண்டே இருந்தால் உரிய காலத்தில் அந்த நகரம் சென்று விடலாம். ஆனால் இடையிலே அந்த வாகனம் ஒரு பழுதாகி விடுகிறது. அந்த பழுதுக்காக சில காலம் தாமதமாகிறது. பிறகு பழுதை சரி செய்து செல்லும் பொழுது உணவு இடைவேளைக்காக ஓய்வு எடுக்கப்படுகிறது. அப்பொழுது கால தாமதமாகிறது. பிறகு இடையிலே ஓர் ஊர்வலம் வருகிறது தாமதமாகிறது. இப்படியெல்லாம் சென்று இறுதியாக அந்த நகரத்தை அடைகிறது. அதை போல் ஆத்மா என்பது இந்த நகரத்தை அடைவது போல இருக்கின்ற பரம்பொருளில் இருந்து துவங்கி அதன் செய்த முன்வினையின் காரணமாக பல்வேறு பிறவிகளை எடுத்து இறுதியாக மீண்டும் இறைவனோடு இரண்டறக் கலக்கிறது. இந்த கலக்கின்ற நிகழ்ச்சிக்கு முன்னால் தான் மாயையில் சிக்கி அறியாமையில் சிக்கி பல்வேறு தவறுகளை அது செய்யக்கூடிய நிலைக்கு ஆட்படுகின்றது. எப்பொழுது பாவமற்ற நிலைமை ஒரு ஆத்மாவுக்கு ஏற்படுகிறதோ அப்பொழுது அது முக்தி அல்லது இறுதி நிலை அல்லது இறையோடு இருக்கக்கூடிய இறையோடு இரண்டறக் கலக்கக் கூடிய இறை வாழ்கின்ற அருகில் இருக்கக் கூடிய சாயுச்சம் சாமீபம் சாலோகம் சாரூபம் என்ற நான்கு விதமான நிலையில் ஒரு நிலையை அந்த ஆத்மா அடைகிறது. இதற்கு இடைப்பட்ட பயணம் போன்றது தான் பிறப்பு. ஒரு வேளை மனிதனாகப் பிறக்கலாம் அது தேவப் பிறப்பாக இருக்கலாம் அல்லது மிருகப் பிறப்பாக இருக்கலாம். அது அதனதன் வினைப்பயனைப் பொறுத்தது. எனவே இந்த உலகிலே காணுகின்ற காட்சிகள் இந்த உலகிலே உணர்கின்ற உணர்வுகள் அனைத்துமே தற்காலிகமானவை நிரந்தரம் அல்ல.

நிரந்தரம் என்பது அந்த பரம்பொருளை உண்மையாக உணர்ந்து பரம்பொருளோடு இரண்டறக் கலப்பதுதான். அந்த முயற்சியில் ஒரு மனிதன் ஒரு பிறவியில் இறங்கினால் ஒரே பிறவியில் அவன் அதை சாதித்து விட முடியாது. எத்தனையோ பிறவிகள் அவன் தாண்டித் தான் போக வேண்டும். இடையிலே சராசரி எண்ணங்கள் அவனை கீழ் நோக்கி இழுக்கும். அதை எல்லாம் போராடி வைராக்கிய மனம் கொண்டு வெற்றி பெற்று தான் மேலேற வேண்டும். இதற்கு எத்தனை பிறவிகள் ஆகும் என்பதை இறைவன் மட்டுமே தான் அறிவான்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.