ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 122

கேள்வி: ஐயனே கொசு. இது மனிதனை தூங்கவிடாமல் பாடாய்படுத்துகிறது? பல்வேறு விதமான நோய்களை பரப்புகிறது. சமீப காலமாக டெங்கு காய்ச்சலால் மக்கள் அவதிப்படுகிறார்கள். கால் நடைகளுக்கும் தொல்லை தருகின்றது. கொசுக்களை முற்றிலும் அழிக்கவே மனிதன் முற்படுகிறான். பல மேலை நாடுகளில் கொசுக்களை முற்றிலுமாக அழித்து விட்டார்கள். கொசுவும் இறைவனின் படைப்புகளில் ஒன்று. அவற்றை கொள்ளாமல் எங்களை தற்காத்துக் கொள்ள என்ன வழி? அல்லது மருந்துகள் மூலம் அவற்றை முற்றிலுமாக அழித்தால் பாவம் சேருமா?

இறைவன் அருளால் இப்பொழுதும் கூறுகிறோம் இனியும் கூறுவோம் இன்னும் கல்பகோடி ஆண்டுகள் ஆனாலும் இந்தியா இப்படிதானப்பா இருக்கும். சரியான அறிவுத்திறன் இல்லாமலும் அறியாமையும் இறையியலை ஆன்மீக இயலை சமுதாய இயலோடு குழப்பிக் கொண்டும் (இருக்கிறார்கள்) சமுதாய அறிவை இறைவனோடும் குழப்பிக் கொண்டும் இருக்கிறார்கள். நேர்மையான அறிவுத்திறன் வெளிப்படாதவரை மேல்நாட்டுக்கு ஈடாக இங்கு வளர்வது என்பது கடினம். அறிவுள்ளவர்களையும் நல்லவர்களையும் மதிக்கின்ற நிலைமை வரவேண்டும். அடுத்ததாக இவன் கூறிய சிறிய உயிரினம் மனிதனுக்கு தீங்கு செய்வதை நாங்கள் மறுக்கவில்லை. இதுவும் மீண்டும் ஒருவகை கர்மபாவம். அது ஒருபுறம் இருக்கட்டும். இறைவனை நம்ப வேண்டாம் கர்மாவை நம்ப வேண்டாம். இவனே கூறிவிட்டான் மேலை தேசங்களில்(வெளிநாடுகளில்) இவையெல்லாம் இல்லையென்று. இங்கு மட்டும் ஏன் இருக்கிறது? சுகாதாரம் என்ற உணர்வு இங்கு யாருக்கும் அடிப்படையில் வளர்வதில்லையே ஏன்?

நன்றாக கவனிக்க வேண்டும் எந்த தேசத்திலும் அதிகாலை எழுந்து வீட்டு வாசலை பெருக்கி கோலமிடும் பழக்கம் இல்லையப்பா. இங்குதான் இருக்கிறது. சுத்தத்தை ஆதியில் மனித குலத்திற்கு போதித்த இடமே இந்த பாரத மண்தானப்பா. அப்பேற்பட்ட மண் இப்பொழுது அசுத்தமாக இருக்கிறது. காரணம் இங்குள்ள மனித மனம் அசுத்தமாகிவிட்டது. முதலில் மனித மனம் சுத்தமானால் இந்த தேசம் சுத்தமாகும். தேசம் சுத்தமானால் தீங்கு தரும் நீ கூறிய சிறிய உயிரினம் இங்கு இல்லாத நிலையை இறைவன் உருவாக்குவார். அதுபோன்ற உயிரினங்கள் மனிதனுக்கு தீங்கை விளைவிக்கிறது. ஒரு நன்மையையும் செய்வதில்லை என்று கூறகிறான். மனிதன் மட்டும் பிற உயிரினங்களுக்கும் இந்த பூமிக்கும் நன்மையா செய்து கொண்டிருக்கிறான்? மனிதன் செய்கின்ற செயல் ஏதாவது பிற உயிரினங்களுக்கும் இந்த பூமிக்கும் நீர்வள ஆதாரத்திற்கும் பஞ்சபூதங்களுக்கும் நன்மையைத் தரும் செயல்களா? எவையெல்லாம் இந்த பூமியை மாசுப்படுத்துமோ அதை செய்யக்கூடாது என்ற அறிவு வந்த பிறகும் சுயநலத்திற்காக செய்கிறான். எந்தப் பொருளையெல்லாம் பயன்படுத்தினால் மண் வளம் பாதிக்கப்படும் என்று அறிந்தபிறகும் அதை பயன்படுத்துகிறான். இவையெல்லாம் யார் குற்றம்?

இப்பொழுது பக்தி வழிக்கும் வருகிறோம். வழக்கம் போல் தன்வந்திரி வழிபாடு தன்வந்திரி பூஜை இயன்றால் தன்வந்திரி யாகம் இல்லம் தோறும் கலப்பில்லா சாம்பிராணி நறுமணப்புகை செய்வதோடு பேய்ப்புடலை என்ற மூலிகை ஒன்று இருக்கிறது. இதோடு நிலவேம்பு மிளகு கீழ்காய் நெல்லி என்ற மூலிகை சேர்த்து எங்கள் நன்மைக்காக உங்களை பயன்படுத்துகிறோம். எனவே எங்களை மன்னியுங்கள் என்று மானசீகமாக மன்னிப்பை வேண்டி பிராத்தனை செய்துவிட்டு அன்றாடம் கலுவத்தில் இட்டு கஷாயமாக செய்து அதிகாலை வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் கொசுவால் ஏற்படும் பாதிப்புகள் வராது குறையும் மட்டுப்படும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.