ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 430

தேவராய ஸ்வாமிகள் இயற்றிய சத்ருசம்ஹார வேல் பதிகம் பற்றி:

இறைவனின் கருணையாலே சத்ரு சம்ஹார த்ரிசதியை ஓது என்று யாங்கள் கூறுவோம். பலமான எதிர்ப்புகளும் எதிரிகளின் தொல்லையும் எங்கிருந்து வருகிறது? இவன் பாவ கர்மாவில் இருந்துதானே வருகிறது. எனவே பாவங்களை குறைத்துக் கொள்ள கூறப்படுகின்ற வழிபாடுகளில் இதும் ஒன்று. அதைப் போல இன்னவன் வினவிட்ட அன்னவன் (தேவராய ஸ்வாமிகள்) கூறிய அதும் நல்விதமான மாற்றத்தை மனித மனதிலே ஏற்படுத்தும். எதிர்ப்பு வெளியில் இருந்து வந்தாலும் இவன் மனம் பக்குவம் அடைந்து விட்டால் எதிர்ப்புகள் குறைந்து விடும். அதற்கு முதலில் இந்த வழிபாடு உதவும். மனம் சாந்தமடையத்தான் இந்த வழிபாடுகள். இதைப்போல சுதர்சன வழிபாட்டையும் செய்யலாம்.

பாம்பன் ஸ்வாமிகளின் இதுபோல் நல்விதமாய் பகை கடிதலையும் ஓதலாம். இவை அனைத்துமே மனித மனதை பக்குவப்படுத்தவும் மனம் பக்குவமடைய பக்குவமடைய அவனுக்கு வரும் எதிர்ப்பை மிக லாவகமாக எப்படி கையாள்வது? என்ற அறிவையும் இந்த வழிபாடு அவனுக்கு சொல்லித்தரும். எனவேதான் இந்த வழிபாட்டை யாங்கள் கூறுகிறோம். சிலர் எண்ணுவதுபோல இந்த வழிபாடுகளையெல்லாம் கூறினால் எதிரிகள் ஒழிந்து விடுவார்கள். எதிரிகள் தோற்று ஓடி விடுவார்கள். எதிரிகள் எங்கோ பதுங்கி விடுவார்கள் என்றெல்லாம் கற்பனை செய்ய வேண்டாம். ஒரு நல்ல மனிதனுக்கு முன்வினையின் பயனாக எதிரிகளும் எதிர்ப்பும் வந்தால் அதனை அந்த வினைகள் வழியாக சென்று தீர்த்துக் கொள்ள உதவக் கூடிய வழி முறைகளில் இதும் ஒன்று.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.