ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 283

கேள்வி: அன்பே சிவம் விளக்கம்:

இறை அன்பு உருவமாக இருக்கிறது. அல்லது உலகத்தின் ஒட்டு மொத்த கருணையும் அன்பும் சேர்ந்தால் அதுதான் இறை என்பதன் பொருள்தான் இது. ஆனால் மனிதர்களுக்கு பல்வேறு துன்பங்கள் வரும் சமயம் இறைவன் அன்பு மயமானவன் இறைவன் கருணை கொண்டவன் என்றால் ஏற்க முடியவில்லையே? எனக்கு ஏன் இத்தனை இடர் வருகிறது? என்ற ஐயம் (சந்தேகம்) இருக்கிறது. அவனவன் வினைகளை உணர்ந்து கொண்டால் கர்மாக்களை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் பிறவிகளை புரிந்து கொள்ள முயற்சி செய்தால் அப்பொழுது புரியும் இறைவன் அன்பு மயமானவன் என்று. பல பிறவிகளில் சேர்த்த பாவங்களையெல்லாம் சிறிது சிறிதாகத்தான் நுகர இறைவன் அனுமதிக்கிறார் என்றாலே அதுவே இறைவனின் கருணையாகும். ஒட்டு மொத்தமாக ஒரே கணத்தில் ஒரு மனிதனின் பாவங்களையெல்லாம் அவன் நுகர வேண்டும் என்றால் அதை விட கடுமையான தண்டனை உலகினில் வேறு எதுவும் இல்லை. சில காலம் அரவணைப்பு சில காலம் சந்தோஷம் சில காலம் துயரம் என்று மாறி மாறித்தான் இறைவனும் தருகிறார். மனிதர்கள் எத்தனை கொடுமைகள் செய்தாலும் இந்தப் பூமியை எத்தனை பாழ் படுத்தினாலும் எத்தனை இடர் படுத்தினாலும் எத்தனை கீழ்த்தரமாக நடந்து கொண்டாலும் மீண்டும் அரவணைத்துக் கொள்கிறாரே? எனவே அந்த இறை அல்லது சிவம் அன்பு என்பதில் இரு வேறு கருத்து ஏதும் இல்லையப்பா.

கேள்வி: சரணாகதி தத்துவத்தை விளக்கிக் கூற வேண்டும்:

விடம் (விஷம்) அருந்து என்று குருவோ அல்லது குரு வடிவமாக இறை வந்து கூறினால் இது விடமாயிற்றே? (விஷமாயிற்றே) இது அருந்தினால் உயிர் போய் விடுமே? விடத்தை (விஷத்தை) யாராவது அருந்துவார்களா? அவன்தான் கூறினான் என்றால் இவனுக்கு எங்கே போயிற்று புத்தி? அவன் தான் குரு என்று கூறினால் இவனுக்கு இறைவன் புத்தியைத் தந்திருக்கிறானே? மறுத்திருக்க வேண்டாமா? என்றெல்லாம் அறிவு கூறினாலும் கூறியது அல்லது குருவாக நம்பிய அந்த உன்னதமான ஆத்மா கூறியது என்பதால் அதனை அப்படியே எந்தவிதமான காரண காரியங்கள் பாராமல் எவன் ஏற்கிறானோ அதுதான் பரிபூரண சரணாகதி தத்துவத்தை நோக்கி செல்கின்ற நிலையாகும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.