கேள்வி: ஐந்து தலை நாகம் பற்றி:
ஐந்து தலை நாகம் இருப்பது உண்மைதான். ஸ்ரீ ராகவேந்திரருக்கு தஞ்சையிலே எந்த இடத்தில் ஸ்தலம் அமைக்க வேண்டும்? என்று யோசித்த ஒரு அரசனுக்கு குறிப்பு காட்டுவதற்காக ஐந்து தலை நாகம் வந்து ஒரு இடத்தை காட்டியது. மனிதனுக்கு புலப்படாததால் இவையெல்லாம் கற்பனை என்கிறான். பொதுவாகவே தாருகாவன முனிவர்கள் சிவன் மீது ஏவிய எதையுமே ஐயன் (சிவன்) தனக்குள்ளே வைத்துக் கொண்டார். எதிரும் புதிருமாகத்தான் உலகம் இருக்கும் என்பதை காட்டத்தான் ஐயன் (சிவன்) அனலையும் புனலையும் வைத்திருக்கிறார். மனிதர்கள் அஞ்சி நடுங்கும் நாகத்தையும் வைத்திருக்கிறார். எனவே ஐந்து தலை நாகம் படமெடுத்து காட்சி தரும் ஆலயங்களுக்கு சென்று ஐயனுக்கு (சிவனுக்கு) நாகலிங்க பூவைக் கொண்டு வழிபாடு செய்தால் நாக தோஷம் விலகும்.
கேள்வி: இறந்தவர்கள் உயிர் பெற்றது பற்றி:
இறந்தவர்கள் உயிர் பெற்றதாக ஆங்காங்கே சில கதைகள் உண்டு. பல நிஜங்களும் உண்டு. இறையின் அருளைக் கொண்டு சஞ்சீவினி மந்திரத்தை பிரயோகித்தால் மட்டுமே இறந்த உடலை (அதாவது உடலில் உயிர் இருக்கும் பொழுதே பரகாயப் பிரவேசம் செய்பவர்கள் உடலை விட்டு ஆன்மாவை வெளிக் கிளப்பி பல இடங்களுக்கும் சென்று வருவார்கள். அவ்வாறு செய்யும் பொழுது கண்ணுக்கு தெரியாத நூலிழை போன்ற ஒன்று உடலையும் ஆன்மாவையும் பிணைத்திருக்கும். மரணத்தின் போது அந்த இழை நிரந்தரமாக அறுந்து விடும். அந்த இழையை ஒன்று படுத்துவதுதான் சஞ்சீவினி மந்திரத்தின் வேலை உயிர்ப்பிக்க முடியும். இறையின் கருணையைக் கொண்டு எத்தனையோ முறை இவ்வாறு நடந்திருக்கிறது. ஞான சம்பந்தர் பூம்பாவையை எழுப்பி இருக்கிறார். திருநாவுக்கரசர் அரவு (பாம்பு) தீண்டி இறந்த பாலகனை எழுப்பி இருக்கிறார். ஆனால் இந்த இடத்திலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. நிரந்தரமாக அந்த ஆன்மா பிரிந்திருக்காது. ஒரு ஆழ் மயக்க ஆழ் துயில் (தூக்கம்) நிலையில் இருந்தால் தான் அவ்வாறு எழுப்ப இயலும். உயிரானது நிரந்தரமாக உடலை விட்டுப் பிரிந்தால் அடுத்த கணம் அது புகை போல் கரைந்து விடும் என்பதால் அதை மீண்டும் உடலோடு ஒன்று சேர்க்க முடியாது. உடனேயே உறுப்புகள் செயலிழக்கும். குருதி (இரத்தம்) கெட்டிப் படத்துவங்கும். ஆன்மா உள்ளே நுழைந்தாலும் கூட அந்த உடல் சரிவர இயங்காது.
![](https://i0.wp.com/tsaravanan.com/wp-content/uploads/2022/01/5.jpeg?resize=650%2C556&ssl=1)