ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 40

கேள்வி: அய்யனே பெரும்பாலும் கோவில்கள் என்றால் ஒரு மகானோ ஒரு சித்தரோ அங்கு இருப்பார்கள் அவர்களால் தான் அந்த கோவிலுக்கு சக்தி இருக்கிறது என்று கூறுகிறார்களே அது உண்மைதானா?

பிள்ளைகளால் பெற்றோருக்கு பெருமையா அல்லது பெற்றோர்களால் பிள்ளைக்கு பெருமையா? எனவே சித்தர்களால் ஒரு ஆலயம் வளம் பெருகிறது என்பது சித்தர்களின் தொண்டை வைத்து கூறலாமே தவிர பிரதானம் சித்தர்கள் மகான்கள் நாங்கள் தான் என்று கூறவில்லை. இறைவனின் அருளும் இறைவனின் கருத்தும் இறைவனின் கடாட்சம் தான் எப்பொழுதுமே முக்கியமே தவிர எம் போன்ற மகான்கள் இறைவனின் அருளை உயர்த்துகிறார்கள் என்று கூறுவதை நாங்கள் ஒரு பொழுதும் ஏற்கவில்லை. ஏனென்றால் நான் பிறந்து பத்து ஆண்டுகள் கழித்து தான் என் தாய் பிறந்தாள் என்று கூறினால் எப்படி நகைப்புக்கு (சிரிப்புக்கு) உள்ளாகுமோ அதைப் போல்தான் சித்தர்களாலும் ஞானிகளாலும் தான் ஒரு ஆலயம் உயர்வு பெறுகிறது என்று கூறுகின்ற கூற்றை நாங்கள் ஏற்போம். அந்த கருத்தை ஏற்றால் இந்த கருத்தையும் ஏற்கலாம்.

கேள்வி: ஒருவருக்கு தர்மசிந்தனை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பெற்றவர்களுக்கு தர்ம சிந்தனை இல்லை. அந்த மகன் தன்னைப் பெற்றவர்களை மீறி தர்மத்தை செய்கின்றான். இதனால் அவன் தன் பெற்றோர்களை மதிக்கவில்லை. அவர்கள் மனதை காயப்படுத்துகிறான். இந்த செயலில் மகனின் தர்மத்திற்கு கனம் (பலன்) அதிகமா? அல்லது பெற்றவர்களை காயப்படுத்திய பாவத்திற்கு கனம் (பலன்) அதிகமா?

பிரகலாதனின் பக்தி அவன் தந்தைக்கு பிடிக்கவில்லை. தந்தையின் போக்கு பிரகலாதனுக்கு பிடிக்கவில்லை. தந்தை என்ற உறவில் பிரகலாதன் மதிப்பை வைத்திருந்தான். ஆனால் தந்தையின் கருத்தில் பிரகலாதனுக்கு மதிப்பு இல்லை. எனவே தாய்க்கும் தந்தைக்கும் ஆற்ற வேண்டிய கடமை கொடுக்க வேண்டிய மரியாதை மைந்தன் (மகன்) கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அவர்களுடைய கருத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை இந்த கருத்து நல்லவற்றிற்கு சத்தியத்திற்கு அறத்திற்கு இறைக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே. எனவே இந்த நிலையிலே தாய்க்கும் தந்தைக்கும் தன் பிள்ளை தாராளமாக தர்மம் செய்வது பிடிக்கவில்லை என்றால் அந்த மைந்தன் (மகன்) ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து தர்மத்தை செய்யலாம். அதே சமயம் தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.